வளர்ச்சி என்பது ஒரு சிலருக்கானது மட்டுமல்ல!

சிறப்பு பொருந்திய பேராசிரியர் அவர்களுக்கு,

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இன்றைய உலக உணவு தின கருதுபொருளாக “பருவநிலை மாறுகிறது. உணவும் வேளாண்மையும் மாற வேண்டும்” என்பதை தெரிவு செய்ததன் மூலம் பட்டினிக்கு எதிரானப் போராட்டத்தில் வெற்றி பெறுவதை மேலும் கடினமானதாகக் கருத வைக்கிறது, அதுவும் `பருவநிலை மாற்றம்` போன்ற ஒரு சிக்கலான சூழ்நிலையில். இயற்கை மனிதனுக்கிடும் சவால் மற்றும் மனிதன் இயற்கைக்கிடும் சவால் ஆகியவற்றை எதிர்கொள்வதைப் பொறுத்தமட்டில், நான் சில கருத்துகளை இந்த அமைப்பு, அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் செயல்பாடுகளில் தொடர்புடையவர்கள் ஆகியோரின் சிந்தனைக்கு முன் வைக்க விழைகிறேன். தற்போதைய பருவநிலை மாற்றத்திற்கான காரணி என்ன? நாம் நம்முடைய தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்புகளைக் கேள்வி கேட்க வேண்டும். புள்ளி விவரங்கள், முரண்பட்ட கணிப்புகள் போன்றவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் எளிய நயவுரைகளுக்கு ஆட்படாமல் இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். இப்படிச் சொல்வதனால் அறிவியல் தரவுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அவற்றுக்கான தேவை முன்பைவிட அதிகம் இருக்கிறது. ஆனால், வெறும் தரவுகள், அதன் விளைவுகள் என்று நின்று விடாமல் அதையும் தாண்டி நாம் பயணிக்க வேண்டும். மனிதர்கள் என்ற அளவில் நம் ஒவ்வொரு வருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, படைப்பு மற்றும் அதன் ஒழுங்கின் பாதுகாவலர்களாக நமக்கிருக்கும் பொறுப்பு, இவையனைத்தும் தற்போதைய மாற்றங்களுக்கான வழித்தடத்தை கண்டறிந்து அதன் மூலத்திற்குச் செல்ல நம்மைப் பணிக்கிறது. முதலில், பருவநிலையின் பல எதிர்மறை விளைவுகள், மக்கள், இனக்குழுக்கள் மற்றும் நாடுகளின் சீர்கெட்ட தினசரி நடத்தைகளினால் உருவானவை என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இதை அறிந்த பின்பு, நெறிமுறை மற்றும் தார்மீக அறம் சார்ந்த மதிப்பீடுகள் மட்டும் இதனைச் சரி செய்ய போதவே போதாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசியல் தளத்திலும் நாம் இயங்கியாக வேண்டும். தேவையான சில முடிவுகளை எடுக்க, குறிப்பிட்ட சில வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க அல்லது புறக்கணிக்க, எதிர்காலத் தலைமுறையின் நலம் பொருட்டு அரசியல் தளத்தில் இயங்குவது அவசியமான ஒன்றாகும். இவ்வழியின் மூலமே நாம் உலகைப் பாதுகாக்க முடியும். நாம் நடைமுறைப்படுத்த நினைக்கும் செயல்களைப் பொருந்த திட்டமிட வேண்டும். உணர்வெழுச்சியின் விளைவாக அவை இருத்தல் கூடாது.

அவற்றைத் திட்டமிடுவது அவசியமாகும். இப்பணியில் தலைப்பட்டிருக்கும் அமைப்புகளின் பங்கு இன்றியமையாததாகும். பொதுமக்கள், பொது மற்றும் தனியார் அமைப்புகள், தேச மற்றும் சர்வதேச எந்திரங்களின் கட்டுக்கோப்பான பிணைப்பாகச் செயல்படும்போதே அவை திறன்மிக்கதாக அமையும். எனினும், இந்த பிணைப்பு பெயரற்றதாக இருக்க முடியாது. சகோதரத்துவத்துடன் மூல ஒற்றுமையின் அடிப்படையில் செயல்பட்டாக வேண்டும். விவசாயம், கால்நடை, மீன்பிடி தொழில், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் மக்கள், காடுகள் அல்லது கிராமங்களில் பருவ நிலை மாற்றத்தினுடைய விளைவுகளின் நேரடித் தொடர்புகளோடு வாழும் மக்கள், பருவநிலை மாற்றம் கொண்டால் தங்கள் வாழ்வும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந் துள்ளனர். அவர்களின் தினசரி வாழ்வு சிக்கலான மற்றும் சில நேரங்களில் அதீத சூழ்நிலைகளால் பாதிப்படைகிறது, எதிர்காலம் கேள்விக் குள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாய் அவர்களின் வீட்டை, பிரியமானவர்களைக் கைவிடும் எண்ணமும் மேலெழத் தொடங்குகிறது. அமைப்புகளால், தொழில்நுட்பகளினால், அவ்வளவு ஏன் – நம்முடைய எண்ண அளவிலே கூட கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட உணர்வின் வலி அவர்களிடம் இருக்கிறது. நாட்டுப்புற வாசிகளின் மரபார்ந்த அறிவைக் கொண்டு, நாம் நுகர்வு மற்றும் உற்பத்தி சார் தர்க்கங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளலாம், அதுவும் மக்களின் இலாப நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துறைகளில் பணியாற்றுபவர்களுள் தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக எண்ணிக் கொள்ளக் கூடிய நபர்கள் அதிகரித்தபடி உள்ளனர். பருவ மாற்ற சுழற்சியைக் கருத்தில் கொள்ளாமல், பல்வேறு விலங்கு மற்றும் தாவர வகைகளைக் குறைபட்ட வகையில் மாற்றியமைக்கவும் செய்கின்றனர். இதனால், உயிர்களின் பன்முகத்தன்மை அழிவுறுகிறது. ஓர் உயிர் இயற்கையில் உள்ளதெனில் அதற் கென்று ஒரு பங்கு இருக்கும், இருந்தாக வேண்டும். ஆய்வகங்களில் அற்புதமான விளைச்சல்களைத் தரும் வகைகள் சிலருக்கு நன்மை யளிக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அது அழிவேற் படுத்துவதாக அமையும். எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே நம் கொள்கை முடங்கிவிடக் கூடாது. ஏனெனில், அது ஒரு விஷயத்தைச் செய்யாமல் தடுத்துவிடுவதோடு நின்றுவிடும். ஆனால் அதையும் தாண்டி சமநிலையோடும் நேர்மையோடும் செயல்படும் முறையை நாம் வகுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு வகை தாவரத்தின் மரபணுத் தேர்வு, உற்பத்தி அளவில் விரும்பத்தக்க நல்ல முடிவுகளைக் கொடுக்கலாம். ஆனால், தன் உற்பத்தி வளத்தை இழக்கும் நிலத்தை பற்றி நாம் கருத்தில் கொண்டோமா? தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங் களை இழக்கும் விவசாயிகளின் கதி பற்றி? பயன்படுத்த முடியாதவாறு ஆகும் நீர் வளங்கள் பற்றி? எல்லாவற்றுக்கும் மேலாக எந்த அளவுக்கு நாம் பருவநிலையை மாற்றுகிறோம் என்ற கேள்வியையாவது கேட்டோமா?

தேவை எச்சரிக்கை உணர்வல்ல, ஞானம்: எதை விவசாயிகளும் மீனவர்களும் தங்கள் நினைவில் பாதுகாத்து தலைமுறைத் தலைமுறைகளாக அளித்தார்களோ, எது இப்போது உலகில் ஒரு சிலருக்கு மட்டும் முழுமையாகப் பயனளிக்கக் கூடியதாக அமைந்திருக்கும் உற்பத்தி முறை களால் ஏளனமாகப் பார்க்கப்பட்டும் மறக்கப் பட்டும் வருகிறதோ அந்த ஞானம். நினைவில் கொள்ளுங்கள். இப்போதுள்ள முறைதான், அதன் எல்லா அறிவியல் கூறுகளைக் கொண்டிருந்தும், எண்பது கோடி மக்களைப் பட்டினியோடு உழல வைக்கிறது. இவை போன்ற அவலங்கள் நீடித்திருப்பது, இந்த அமைப்பைப் போல பல்வேறு சர்வ தேச அமைப்புகள் தினசரி எதிர்கொண்டு சமாளிக்கும் அவசரகால நடவடிக்கைகளில் நன்றாகவே பிரதிபலிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஏதோ வானிலை ஆய்வோடு தொடர்புடையது என்று மட்டும் குறுக்கிவிட முடியாது. அது மக்களைத் தங்களின் இடம்விட்டு குடிபெயர வைக்கிறது என்பதை நம்மால் மறுக்கமுடியுமா? பருவநிலை மாற்றத்தால் பெரிய அளவில் குடிபெயர்வுகள் நடந்துகொண்டிருக்கிறது என்கின்றன சமீபத்திய தரவுகள். பெருந்திரளான மக்கள் நிர்கதியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரிய மனிதக் குடும்பத்தில் பங்கு பெற முடியாமல் தனித்து விடப்படுகிறார்கள். அவர்களுக்கான இடத்தை எந்த அரசாங்கமோ அதிகாரமோ வழங்க முடியாது. மனிதர் என்ற அளவிலேயே அவர் களுக்கு அதை எடுத்துக் கொள்வதற்கான கண்ணியமும் உரிமையும் இருக்கிறது.

அடிப்படை வாழ்வாதாரத்தை வேண்டி நிற்பவர்களைக் கண்டு மனம் களங்கி நெகிழ்ந் தால் மட்டும் போதாது. சீரிய முடிவுகளும் நடவடிக்கைகளும் தேவை. சமத்துவமாக உணவை விநியோகித் தோம் என்றால் இந்த உலகில் அனைவருக்கும் உணவளிக்க போதுமான அளவு உற்பத்தி இருக்கவே செய்கிறது. நாம் இதைப் பலமுறை கத்தோலிக்க திருச்சபை வாயிலாகவும் சொல்லி யிருக்கிறோம். ஆனால், இப்போது? தற்கால வணிக முறைகளின்படி உற்பத்தியை உணவு தவிர்த்து மற்ற பயன்பாட்டுகளுக்காக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது? பட்டினியில் இருப் பவர்களுக்கு உணவைப் பெற வழியில்லாத வரையில், மற்றவர் களிடம் கையேந்தும் நிலையுள்ள வரையில், தேவைக்கும் நுகர்வுக்கும் இடையே சரியான சமன்பாடு உருவாகாத வரையில், உணவு வீணாவதைத் தடுக்காத வரையில், இப்போதுள்ள உணவு விநியோக இயங்குமுறை வெறும் கோட்பாட்டளவில்தான் சரியானதாக இருக்கும். இந்த மாற்றத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியமாகும்: அரசியல் கொள்கை முடிவெடுப்போர், நிலத்தை உழுவோர், மீன் பிடிப்போர், காடுகளைப் பயன் படுத்துவோர் என ஒவ்வொரு குடிமகனும் இணைய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து ஒரே நோக்குடன் செயல்பட்டால், வளர்ச்சி வெறும் ஒரு சிலருக்கானதல்ல, படைப்பில் உருவான பொருட்கள் எதுவும் அதிகாரம் படைத் தவர்களின் வம்சச் சொத்தல்ல என்ற நிலையை நிச்சயமாக உருவாக்கலாம். நாம் மேற்கொள்ள, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க, விரிவுபடுத்த இன்னும் எவ்வளவோ ஆக்கப்பூர்வமான வழிமுறைகளும் சிறந்த பழக்கங்களும் இருக்கின்றன.

நாம் செயல்படுவதற்கான விழைவு, அந்த செயலால் விளையும் பயன்களைக் கருதி அமையக் கூடாது. மாறாக, மக்களின் வாழ்விற்கும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமான அவசியத் தேவையோடு தொடர்புடையது அது என்ற புரிதல் வேண்டும். ஆன்மீகமோ அல்லது பொருள் தேடலோ, எதுவாயினும் அது ஒரு சிலரின் முடிவுகளுக்கேற்ப அமைவதல்ல. மனிதர், மனித உயிர் இவை ஒன்றும் சோதனைக் கருவிகள்
அல்ல. உணவென்பது வெறும் பொருளீட்டு வதற்கான கருவி அல்ல. அப்படிப் பட்ட சிந்தனையே உணவை வீணாக்க வைக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தேவையான அளவுக்கு ஆரோக்கியமான உணவை உண்ண உரிமை இருக்கிறது என்பது இயற்கை விதி. வரவிருக்கும் மாரக்கேச் பருவநிலை மாற்ற மாநாட்டில் இது குறித்து முடிவுகள் எடுக்கும் கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம். முன்பு, பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்தான தீர்மானிக் கங்கள் வெறும் வார்த்தைளாக இல்லாமல் தீர்க்கமான முடிவுகளாக இருக்கும் என்ற பலரின் நம்பிக்கையை இந்நேரத்தில் நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஓற்றுமைப் பண்பை நடைமுறையில் பொருளாதரத்திற்குப் பங்களிக்கும் ஒன்றாக, சகோதரத்துவத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆட்சிமுறையின் அடிநாதமாக ஆக்க அவை செயல்படும் என்று நம்புகிறேன். தலைமை இயக்குநர் அவர்களே! இவை நான் கூற நினைத்த சில கருத்துகள். அதில் சாமானிய மற்றும் விளிம்புநிலை மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பருவநிலை மாற்றம் குறித்த அக்கறைகளும் பயங்களும் பதட்டங்களும் கலந்திருக்கின்றன. சர்வ வல்லமை படைத்த பரம்பொருள், ஓட்டுமொத்த மனித சமுதாயத்திற்காக நீங்கள் ஆற்றும் அரும்பணிகளுக்கு அருள்புரியட்டும்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு போன் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள மடல்

தமிழில்:விக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments