காட்டுயிர்கள் இழிவானவையா?

காட்டுப் பன்றிகள் (Wild Boar), நீலான் மான்கள் (Nilgai), விவசாயப் பயிர் களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிப்பது, ரீசஸ் குரங்குகள் ஷிம்லா போன்ற சுற்றுலாத் தளங்களில் பயணிகளைக் கடிப்பது போன்றவை அதிகரித்திருப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு தகவல்கள் அளித்திருந்தன. அவை மனித உயிருக்கும், விவசாய மற்றும் பொதுச் சொத்துகளுக்கும் ஏற்படுத்திய விளைவுகள், விவசாயிகளுக்கும் மற்ற சுற்றத் தாருக்கும் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்தும் மாநில அரசுகள் எடுத்துரைத்தன. தொடர் கோரிக்கைகளால், மத்திய அரசும் அவ்விலங்கினங்கள் குறித்து ஆய்வுகள் நடத்த மாநில அரசுகளைப் பணித்தது. மாநில வனத் துறையும் அவ்வாறே ஆய்வுகள் நடத்தி, விவசாயி களுக்கு ஏற்பட்ட இழப்புகள், வனத்துறை அவர்களுக்கு வழங்கிய இழப்பீடுகள் பற்றிய வருடாந்திரத் தரவுகளைச் சேகரித்து, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு ஆய்வறிக்கைகளாகச் சமர்ப்பித்தன. பல்வேறு மாநில அரசுகள் அளித்த பரிந்துரைகளின்படி, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், காட்டுப் பன்றி, நீலான் மான், ரீசஸ் குரங்கு ஆகியவற்றை `வெர்மின்’- வேட்டையாடக்கூடிய விலங்குகள் என்று அறிவித்தது. பிப்ரவரி மாதம் காட்டுப் பன்றியை உத்தரகாண்டில் ஒரு வருடத்திற்கும், டிசம்பர் மாதம் நீலான் மான் மற்றும் காட்டுப் பன்றியை ஒரு வருடத்திற்கும், மார்ச் மாதம் ரீசஸ் குரங்கை பீகாரில் ஆறு மாதங்களுக்கும் வேட்டையாடக் கூடிய விலங்குகள என மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு, மேலே சொல்லப்பட்ட காலத்திற்கு மனித-மிருகப் பூசல்கள் நிலவும் இடங்களில் அமலில் இருக்கும். இதனால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 படி, எந்தச் சட்டச் சிக்கல்களும் ஏற்படாத வகையில் வேட்டையாடக்கூடிய விலங்குகளாக அறிவிக்கப்பட்ட விலங்குகளை மாநில அதிகாரி களால் அழித்தொழிக்க முடியும்.

இந்த முடிவு நிரந்தரத் தீர்வை வழங்குமா?

இச்செய்தியைப் படிக்கும் எவருக்கும், விலங்குகள்தாம் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துகின்றன, நாம் அதற்கு எவ்வகையிலும் பொறுப்பாக முடியாது என்று இயல்பாகத் தோன்றும். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகும். விலங்குகள் தாமாக விவசாய நிலங்களுக்குள் வருவதில்லை. கடந்த காலங்களில் நடந்த (இப்போதும் நடக்கின்ற) மனிதத் தலையீடு களினால், ஊடுருவலினால் இவ்வாறு வரத் தூண்டப்படுகின்றன என்பது புரியும்.

கொள்கை அளவில், அதிகம் முக்கியத்துவம் பெறாத, தாவரமுண்ணும் பாலூட்டி வகைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாப்பதற்கும் அவை காடுகளில் மேய்தலுக்குரிய இடங்களைப் பேணு வதற்கும் குறைந்த அளவிலான முக்கியத்துவமே தரப்படுகிறது. காடுகளின் புல்வெளித் திட்டுகள் சட்டத்துக்குப் புறம்பாக அழிக்கப்பட்டு, விவசாயம், வீட்டு மனைகள் போன்றவைகளுக்காக ஆக்கிரமிக்கப் படுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு இந்நிலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை கூடக்கூட கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி இருக்கின்றன. எனவே, காடுகளை ஒட்டி வாழும் மக்களின் கால்நடைகள் மேய்ச்சலுக்காகக் காட்டுக்குள் புகுவதால், காடுகளும் செயற்கையான அழுத்தங் களுக்கு உள்ளாக்கப்பட்டு, அவற்றின் தரமும் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. உணவுப் பற்றாக்குறையே நீலான்களையும் காட்டுப் பன்றிகளையும் விவசாய நிலங்கள் பக்கம் செலுத்துகிறது. காரணம், மேலே சொன்னதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வசிப்பிடங்களை நாம் அழித்ததுதான். தாவரமுண்ணும் உயிரினங்களான இவை ஊனுண்ணும் மிருங்களுக்கு வேட்டையாடத் தோதானவை. இவ்வுயிரினங்களின் எண்ணிக்கை குறையும்போது, உணவுச்சங்கிலி பாதிக்கப்படும். அவ்வாறு நடப்பது, வேட்டையாடும் மிருகங்கள் ஊருக்குள் புகுந்து, இதுவரையில் இல்லாத புதுப்புது சிக்கல்கள் ஏற்படவும் வழிவகுக்கும். காடுகளின் தரம் குறையும்போது, விலங்கு களுக்குப் பக்கத்திலுள்ள விவசாய நிலங்களில் புகுவதைத் தவிர வேறு வழியில்லை. விளைவாக, விவசாயிகளுக்கு மகசூல் குறைவதோடு வனத்துறைக்கும் நிதிப் பற்றாக்குறையால் சந்தை விலையில் இழப்பீடுகள் வழங்க இயலாமல் போகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கடிப்பது, தொந்தரவு செய்வது போன்றவை ஷிம்லாவில் மட்டும் மாதத்திற்கு குறைந்தது 200 சம்பவங்களாவது நடப்பதாக அதன் நகராட்சி தெரிவித்துள்ளது. குரங்குகள் காட்டைவிட்டு வெளியே வருவதற்கு என்ன காரணம்? எப்படி அவை சுற்றுலாத் தளங்களுக்கு வரத் தூண்டப் பட்டன? ஏன் அவை உணவுப் பண்டங்களைப் பிடுங்க வேண்டும்? ஏன் கடிக்க வேண்டும்?

சற்றே பின்னோக்கி பார்ப்போம்..

காடுகளை அழித்து வீட்டுமனைகள் உருவாக்கி னோம். சுற்றுலாவை அதிகரிக்க மரங்களை கணக்கின்றி வெட்டி, சாலைகள் ஏற்படுத்தி உள்கட்டமைப்புகளைச் செய்தோம். அங்கு, மக்கள் தொகை பெருகி உணவுக் கழிவுகளும் அதிகரித்தன. வசிப்பிடத்தையும் உணவையும் இழந்த குரங்குகள் குடியிருப்புகளுக்கு வெளியில் கொட்டப்படும் உணவுகளை உண்டு, பின்பு தலைமுறைகளாக அங்கேயே தங்கவும் செய்தன. சுற்றுலாவுக்குச் செல்லும் நாமும் மனிதாபி மானமென்ற பெயரில் குரங்குகளுக்கு உணவுகள் வழங்கினோம். பின், வாழைப்பழங்கள், மீதமான சோறு ஆகியன போடுவதென்பது வழக்கமாகி, குரங்குகளுக்கும் அது பழகிப்போய் விட்டது. குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரிக்க, நாம் இடும் உணவு போதாமல் போகவே நம்மிடமிருந்து பிடுங்கித் தின்னவும் திருடவும் தொடங்கிவிட்டன. நாம் துரத்தினாலும், பசிக் கொடுமையில், வேறு வழியில்லாமல் நம்மை குரங்குகள் தாக்க வருகின்றன. இப்போது சொல்லுங்கள், யாருடைய தவறு என்று?

யாரைக் குற்றம் சொல்வது?

விலங்குகளையா? வரம்பு மீறிய நம் முன்னோர்களையா?

அல்லது பாதிப்புகளை அனுபவிக்கும் நம்மையா?

சட்டம் என்ன சொல்கிறது?

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 படி விலங்குகளும் தாவரங்களும் ஆறு அட்டவணை களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அட்டவணைக்கும் ஏற்ப அவற்றுக்கு அளிக்கப் படும் பாதுகாப்பின் அளவு வேறுபடும். ஐந்தாவது அட்டவணை மிருகங்கள் வேட்டையாடக் கூடிய விலங்குகளாக கருதப்படும். வேட்டையாடக் கூடிய விலங்குகளாக அறிவிக்கப்பட்ட விலங்குகளை, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வேட்டையாட எந்தத் தடையுமில்லை. இந்தச் சட்டத்தின்படி, மூன்று மற்றும் நான்காவது அட்டவணை மிருகங்களைத் தேவைக்கேற்ப ஐந்தாவது அட்டவணைக்கு மாற்றி வெர்மின்களாக அறிவிக்க ஏற்பாடு உள்ளது. இவ்வாறு தேவைப்படும் போதெல்லாம் தற்காலிகமாக வேட்டையாடக்கூடிய விலங்குகளாக அறிவிப்பதும், பின்பு, பழைய அட்டவணையிலேயே கொண்டுபோய்ச் சேர்ப்பதும், சிக்கல்களுக்கு மெய்யானத் தீர்வாக அமையுமெனத் தோன்றவில்லை. அறிவியல் பூர்வமாக இச்சிக்கலைக் கையாளத் தவறினால், இந்த விலங்குகளின் எண்ணிக்கை முற்றிலுமாக அழிய நேரிடும். சுற்றுச்சூழலில் அவற்றுக்கான இடம் காணாமல் போவதோடு, ஊனுண்ணி மிருகங்களுக்கு உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும். மேலும், மனிதர்களும் வரம்பு மீறி காட்டுக்குள் சென்று வேட்டையாடவும் வாய்ப்புள்ளது. மனிதவிலங்குப் பூசல்களைக் களைவதற்கு எடுக்கப் பட்டதாகச் சொல்லப்படும் இந்த கொள்கை முடிவு, சிக்கலின் ஆணி வேரை நாடி அதனைச் சரி செய்ய முனைய வேண்டும்.

விலங்குகள் அபரிமிதமாக அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில், தற்காலிகமாக அவற்றை வேட்டையாடக்கூடிய விலங்குகளாக அறிவித்து சிக்கலைக் கையாள்வது நிரந்தரமானத் தீர்வைத் தராது. அப்படிச் செய்வதால், சில காலத்திற்கு எந்த மனித-விலங்குப் பூசல்களும் நிகழாமல், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமென்பது உண்மைதான். ஆனால், அதுவே நிரந்தரத் தீர்வா காது. மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனையைச் சந்திக்க வேண்டிவரும். வளர்ச்சியையும், சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் ஒருங்கே தரவல்ல நிலையானத் தீர்வுகளை வழங்கும் திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. காடுகளின் புல்வெளித் திட்டுகளுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும், காட்டின் நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும், நிலத்தடி நீர் அளவை மேம்படுத்த வேண்டும், காடுகளில் தாவரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதனால், காட்டுப் பன்றிகள், நீலான் மான்கள் போன்ற தாவர உண்ணிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.

பூமியில் கிட்டத்தட்ட எல்லா இடங் களையுமே நம்முடைய வசிப்பிடமாக ஆக்கியதோடு, நம்மின் சூற்றுச்சூழலை மாற்றும் திறமையால் மற்ற உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவராக மாறி விட்டோம். தெரிந்தோ தெரியாமலோ, பூமியில் இதுவரையில் எந்த உயிரினத் திற்கும் கிட்டாத ஆற்றலும் அதிகாரமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதிகாரம் அளிக்கப்படுவது பொறுப்புடன் நடந்து கொள்வதற்காகத்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

தண்ணீரைச் சேமிக்கும் கட்டமைப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். காட்டு விலங்குகளுக்கு நம்முடைய உணவு களை வழங்கக் கூடாதென்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுற்றலாவுக்காகக் காடுகளை வெட்டுவது தடுக்கப்பட வேண்டும். காடுகளின் தரத்தைக் குலைக்காமலே கட்டுப்பாடுகளோடு சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் இந்த உலகில் இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லாவற் றையும் உள்ளடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சிந்தனை அளவிலான மாற்றமே இப்போதைய முதன்மையானத் தேவை. சார்லஸ் டார்வினின் வார்த்தைகளில் சொன்னால், “நாம் இந்தப் பூமியின் ஆதிக்க உயிரினமெல்லாம் ஒன்றுமில்லை. சூழ்நிலைக்கேற்ப தம்மைத் தக வமைத்துக் கொள்ளக்கூடிய உயிரினங்களில் சிறந்தவர்கள்தான் நாம்.” அப்படி தகவமைத்துக் கொள்வதில் சிறந்த உயிரினமான நாம், பூமியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையுமே நம்முடைய வசிப்பிடமாக ஆக்கியதோடு, நம்மின் சுற்றுச்சூழலை மாற்றும் திறமையால் மற்ற உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவராக மாறிவிட்டோம். தெரிந்தோ தெரியாமலோ, பூமியில் இதுவரையில் எந்த உயிரினத்திற்கும் கிட்டாத ஆற்றலும் அதிகாரமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதிகாரம் அளிக்கப்படுவது பொறுப்புடன் நடந்துகொள்வதற்காகத் தான் என்பதை நாம் உணர வேண்டும். சுற்றுச்சூழலில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதே இப்போது நமக்கிருக்கும் பொறுப்பு. ஒவ்வொரு உயிரினமும் அவற்றுக்கே உரியே இடத்தில் தத்தமது பணியைச் செவ்வனே ஆற்றும்போது இயற்கையின் சம நிலை பாதுகாக்கப்படும். மனிதர்களுக்கும் ஆரோக்கியமான இருப்பிடமாக இந்த பூமி அமையும். மனிதர்களாகிய நாம் இயற்கையை பாதுகாக் கவும் அதே நேரம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளவும் கூடிய சீரானப் பார்வையைக் கொள்ள வேண்டும்.

கார்த்திகேயன் ராமலிங்கம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments