நீலகிரி நிலச்சரிவும் நியூட்ரினோ திட்டமும்

 

 

நம் நாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்களை பொதுவாக மூன்று காரணிகளை வைத்து ஆய்வு செய்து அந்த திட்டம் சாதகமா அல்லது பாதகமா என்கிற முடிவிற்கு வரலாம். குறிப்பிட்ட திட்டம் எந்த மாதிரியான திட்டம், அதன் அமைவிடம், அந்த திட்டத்தினால் ஏற்படப்போகும் சமூக பொருளாதார நன்மைகள் என்ன?

மேற்சொன்ன மூன்று காரணிகளின் அடிப்படையில்தான், அந்தத் திட்டத்தை நாம் வரவேற்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா என்கின்ற நிலைப்பாட்டிற்கு வரமுடியும்.

தேனிமாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடம் எந்த மாதிரியான திட்டம்?

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய இருக்கின்ற நியூட்ரினோ ஆய்வகத்தில், நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.இயற்கையாகவே சூரியனில் இருந்தும் அண்டவெளியில் இருந்தும் கோடிக்கணக்கன நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன. இயற்கையில் வரும் இந்த நியூட்ரினோக்கள் நிறை இல்லாதவை, ஆற்றல் மிகவும் குறைவு அல்லது கிடையாது, துல்லியமாக ஒரு இடத்தை நோக்கி குறி பார்த்து வராது அவற்றால் எந்தவிதமான பிரச்சனைகளும் பெரிதாக கிடையாது. இந்தியா இவ்வகை நியூட்ரினோ ஆய்வுகளில் முன்னணியில் இருந்த நாடு, 60களில் கோலாரில் இருந்த தங்கச்சுரங்கத்தில் இந்தியா அமைத்த நியூட்ரினோ ஆய்வகம், இயற்கையில் கிடைக்கக்கூடிய நியூட்ரினோக்களை பதிவு செய்து சாதனை படைத்தது. பொட்டிபுரத்தில் அமையவுள்ள “நியூட்ரினோ நோக்கு கூடம்” (India based neutrino observatory), இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சில ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கையாக, தொழிற்கூடங்களில் உருவாக்கப்படுகின்ற நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்யப் போகின்றார்கள். இவ்வாறு செயற்கையாக உற்பத்திசெய்யப்படும் நியூட்ரினோ கற்றைகள், அதிக ஆற்றல், நிறை கொண்டவையாகவும், துல்லியமாக ஒரு இடத்தை நோக்கி அனுப்பமுடியும். இந்த கற்றைகள் அமெரிக்காவின் ~பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்தும், ஐரோப்பா, ஜப்பான் ஆய்வகங்களில் இருந்தும், அண்டார்டிகாவில் இருந்தும் தேனி பொட்டிப்புரத்தை நோக்கி, துல்லியமாக அனுப்பப்படும். ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த கற்றைகள் உற்பத்தி செய்யும் இடத்தில கதிர்வீச்சு இருக்கும் என்று பெர்மி ஆய்வகம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டம் மேற்கொள்ளப்படும் நியூட்ரினோ ஆய்வு எதற்காக?

எதிரி நாடுகளிடம் எங்கே அணுகுண்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டு அறிந்து,

அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு. இது அடிப்படை அறிவியல் திட்டம் அல்ல;

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிகள் தொடர்பான திட்டம். அமெரிக்காவுக்குப் பிடிக்காத,

குறிப்பாக சீனா போன்ற நாடுகளிடம் உள்ள அணுகுண்டுகளை ஆராய்ந்து,

அதைச் செயல் இழக்கச் செய்வதுதான் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்.

இந்த ஆய்வகம் அமையவுள்ள இடம் எப்படிப்பட்டது?

தேனீ மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அங்கம், இம்மலைகளை உலகப் பல்லுயிரிய பாதுகாப்பு மண்டலம்” என ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அறிவித்து இருக்கின்றது.

பாதுகாக்க வேண்டிய பல்லுயிர் பாதுகப்பு மண்டலம்’ என, மாதவ் காட்கில் குழுவும், கஸ்தூரி ரங்கன் குழுக்கள் அறிவித்து இருக்கின்றன. இத்தகைய அறிவிப்புகள் மூலம் சொல்லவருவது இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால்கூட, அங்கே குண்டு போடக்கூடாது. தாஜ் மஹால், தஞ்சை பெரிய கோவில் போன்றவற்றை எப்படி பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மேற்குத் தொடர்ச்சி மலை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மராட்டிய மற்றும் குஜராத் மாநிலங்களில் மக்கள் வாழ்வதற்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிர்ப்போடு இருக்கவேண்டும், தென்னிந்தியாவில் உற்பத்தியாகி ஓடும் நதிகள் அனைத்தின் பிறப்பிடமும் இம்மேற்கு மலைகள் தான்.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தி, பல இலட்சம் டன் பாறைகளைத் தகர்த்து உடைத்து எடுத்து, இந்த ஆய்வகம் அமையப்போகிறது. அதுவும் தமிழகம் போராடிப்பெற்ற முல்லைப்பெரியாறு, வைகை, மேகமலை உள்ளீட்ட 18 நீர்த்தேக்கங்கள் இந்த பகுதியில் உள்ளன. இரண்டாண்டுகளுக்கு முன்னர்,ஹை குவாக் என்ற ஆய்வு இதழ், ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு இருந்தது.

கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களில், 746 நிலநடுக்கங்கள் மனிதர்களால் தூண்டப்பட்டவை என்று சொல்கின்றது அந்த அறிக்கை. அவற்றுள் 37% நிலநடுக்கங்கள் மிகப்பெரிய சுரங்கங்களைக் குடைந்ததால் தூண்டப்பட்டவை; 24 விழுக்காடு, பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டுமானங்களால் தூண்டப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்லுகின்றது, திட்டம் அமையவுள்ள பகுதி, ஏற்கனவே நீர்த்தேக்கங்களால் அழுத்தம் உள்ளபகுதி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

“மேற்கு தொடர்ச்சி மலைகளில் பாறைகளை வெடிவைத்து தகர்த்து நிறைய சுரங்கங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு அணைகள் உள்ளன எனவே எந்த பிரச்னையும் ஏற்படாது” என்று விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்திருந்தது.

நம் கண்முன்னால் நீலகிரியிலும் கேரளாவிலும் நடைபெற்றுள்ள கோரத்தை பார்த்தாலே தெரியும், மலைகளை குடைந்து சுரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், அணைகள், எஸ்டேட்டுகள் என அமைத்ததன் விளைவாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதையும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும்.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால்,தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது, இந்தப் பகுதியும் பொருளாதாரத்தில் வளராது, ஏனென்றால் ஒரு சில விஞ்ஞானிகள் இருந்து ஆய்வுகளை மட்டுமே மேற்கொள்வார்கள். நமக்குள்ள வேலைவாய்ப்பு என்பது அதிகபட்சமாக சிலபேருக்கு காவலாளி பணி கிடைக்கலாம்.

இந்த திட்டத்திற்கென வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் நிலைப்பாட்டை கணக்கில்கொள்ளாமல், மாநில அரசுகள் மட்டுமே தரக்கூடிய பிரிவின் கீழ்   “சிறப்பு திட்டம்” என்று அறிவித்து மாநில அரசின் உரிமைகளை மீறி கடந்தாண்டு மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது மத்திய அரசு. இந்திய அனுமதியை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்து, 2015 ஆம் ஆண்டு தடை ஆணை பெற்றுள்ளார்.

தென்தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய அணைகள், பல்லுயிரியம் தழைத்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்தமுனைவது அறிவில் சிறந்த செயலாகாது. காலநிலை மாற்றத்தில் இருந்து மனித சமூகம் தப்பித்துக்கொள்ள இயற்கை அரண்களை பாதுகாக்க வேண்டிய காலகட்டமும் கூட.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments