பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் கடந்த 10 ஆண்டுகளில் 165 நீர்நிலைகள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக உவகை ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே சென்னை மக்களுக்கு 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் மோசமான நினைவுகள் எழும். பெருமழை, திறனற்ற நிர்வாகம் இதற்கு முக்கியக் காரணமென்றாலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளும் ஒரு முக்கியக் காரணமாகும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து உவகை ஆராய்ச்சி நிறுவனம் ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை நீர்பிடிப்பு பகுதிக்குள் வரும் ஒவ்வொரு துளி மழை நீரையும் தென் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை போக்கும் நீர் ஆதாரமாக மாற்ற முடியுமா? என்பது குறித்தும் இவ்வாய்வில் விவாதிக்கப்பட்டுள்ளது.
812 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கோவளம் வடிநிலப்பகுதியில் மழை நீரை வெளியேற்ற ஆறுகள் இல்லை, தாழ்வான பகுதிகளான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், முட்டுக்காடு காயல் பகுதியின் மூலம்தான் மழைநீர் கடலில் வடிய வேண்டியுள்ளது. இப்பகுதி கடல்மட்டத்திலிருந்து தாழ்வான பகுதி என்பதாலும் ஆறுகள் இல்லாததாலும் அதிக வெள்ளப்பெருக்கை சந்திக்கக்கூடிய ஒரு சூழல் உள்ளது.
கோவளம் துணை வடிநிலப் பகுதியில் ஐந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகள் உள்ளன. இதில் தெற்கு பகுதியில் இருக்கும் மூன்று நீர்ப்பிடிப்புப் பகுதியின் மொத்தம் 77 கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதி வடக்கே கிண்டி பூங்கா பகுதியில் தொடங்கி, கிழக்கே முட்டுக்காடு வரை விரிந்து உள்ளது; தென்மேற்கு எல்கையாக வண்டலூர் பகுதியில் துவங்கி, மேற்கே சின்னமலை வரையிலும் பரவியுள்ளது.
306 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இம்மூன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் அப்பகுதியில் இருக்கும் நீர்நிலைகளை நிரப்பிவிட்டு தாழ்வான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்தடைகிறது. அங்கிருந்து ஒக்கியமடுவு வழியாக பக்கிங்காம் கால்வாய் மூலமாக முட்டுக்காடு பகுதியில் கடலைச் சென்றடைகிறது. அதே போல, வடக்குப்பகுதியில் உள்ள இரண்டு நீர்பிடிப்பு பகுதிகளும் பெரிய உப்பு ஏரி மூலமாக எடியூர் அருகில் கடலைச் சென்றடைகிறது.
உவகையின் ஆய்வறிக்கை, வடக்குப்பகுதியில் உள்ள 3 நீர்பிடிப்பு பகுதிகளின் 306 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து, மழையின் அளவின் அடிப்படையில் உருவாகும் மழைத்தண்ணீர், அதை சேமித்து வைப்பதற்கான சாத்தியக்கூறுகள், மீதமுள்ள தண்ணீரை நகர்ப்புற மக்களுக்கு எவ்வித சேதமுமின்றி கடலுக்குக் கொண்டு செல்லும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துள்ளது.
கூகுள் எர்த் படங்கள் (Google Earth Images), கிராம வருவாய் ஆவணங்கள், ISRO-வின் செயற்கை கோள்களின் தரவுகள் (BHUVAN Data), தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் நீர்வளத்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலமும் நேரடிக் கள ஆய்வுகளின் மூலமும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் போன நீர்நிலைகள்:
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மொத்தம் 165 நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவை முற்றிலுமாக காணாமல் போயுள்ளன. பரப்பளவில் இது 7,35 சதுர கிலோ மீட்டருக்குச் (735 ஹெக்டேர்/1816.22 ஏக்கர்) சமம்.
நீர்நிலைகளில் எவ்வளவு நீரை சேமிக்கமுடியும்?
10 ஆண்டுகளில் (120 மாதங்கள்), வெறும் 6 நீர் நிலைகளில் மட்டுமே 90 மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. 21 நீர்நிலைகளில் 61-90 மாதங்கள் நீர் இருந்திருக்கிறது. 133 நீர்நிலைகளில் 30 மாதங்களுக்கும் குறைவாகவே தண்ணீர் இருந்திருக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளில் (1925-2024) சென்னையின் சராசரி ஆண்டு மழை அளவு 1231.3மிமீ, சராசரி மாத மழை அளவு 102 மிமீ. குறைந்த பட்சம் 100 மிமீ மழை பொழிந்தால் 17.61 mcm தண்ணீரும், அதிகபட்ச மழைப்பொழிவு 400 மிமீ இருந்தால் 70.44 MCM தண்ணீரும் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து உருவாகும்.
தற்போதைய நீர்நிலைகளின் பரப்பளவு 25 sq.km. கொள்ளளவு (ஆழம் 1.5 மீட்டர் என கணக்கிட்டால்) 37. 5 MCM. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் கொள்ளளவு 6.94 MCM. 100 mm மழை பெய்தால் தண்ணீரை முழுவதுமாகச் சேமிக்க முடியும். 400 மிமீ மழை பொழிந்தால் 65% தண்ணீர் சேமிக்க முடியும். நீர்நிலைகளை ஆழப்படுத்துவதன் மூலம், மீதமுள்ள 35% தண்ணீரையும் சேமிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால், பிற நீர்நிலைகளைப் போல பள்ளிக்கரணையை ஆழப்படுத்தக் கூடாது எனும் கூற்றும் நிபுணர்களிடம் நிலவுகிறது. ஏனெனில் பள்ளிக்கரணை ஒரு சதுப்பு நிலமாகும். சதுப்பு நிலத்தை தூர்வாருவது அதன் சூழல் சமநிலையைப் பாதிக்கும்.
மேலும், பக்கிங்காம் கால்வாயில் இருக்கும் திட்டை அகற்றி, அதை 100 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி, முறையாக பராமரிப்பதன் மூலம், பள்ளிக்கரணை பகுதியில் எந்த வெள்ளப்பெருக்கும் இன்றி தண்ணீர் கடலுக்கு சென்று சேரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
தென் சென்னை பகுதியின் தினசரி குடிநீர்த் தேவை சுமார் 600 மில்லியன் லிட்டர் (அல்லது 0.6 மில்லியன் கன மீட்டர்). தற்போது பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் சதுப்பு நிலம் ஆகியவற்றின் மொத்த சேமிப்பு திறன் 44.44 மில்லியன் கன மீட்டர். இதனால், தென் சென்னை பகுதியின் குடிநீர் தேவையை சுமார் 77 நாட்கள் பூர்த்தி செய்ய முடியும்.
முறையாக நீர்நிலைகள் பராமரிக்கப்படாததால், பெருவாரியான நீர் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு கடலுக்கு செல்கிறது. இதுவே இந்த நீர்நிலைகளை இரண்டு முறை நிரப்பினால் 240 நாட்களுக்குத் தேவையான நீரைச் சேமிக்க முடியும் என்கிறது இவ்வறிக்கை.
உவகையின் பரிந்துரைகள்:
• இப்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தில், மழை நீரினைப் பிரச்னையாக பார்க்காமல் அதை ஒரு வாய்ப்பாக கருதி ஒரு ஆண்டுக்குத் தேவையான நீரினை சேமித்து வைக்கக்கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
• பெருகி வரும் மக்கள் தொகையில் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று மழை மூலமாக வரும் நல்ல நீரை அதி விரைவாக கடலுக்கு அனுப்பும் திட்டங்களே பெரும்பாலும் தீட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 91 கோடியில் தீட்டப்பட்டுள்ள ஒக்கியமடுவிலிருந்து பள்ளிக்கரணை நல்ல நீரை நேரடியாக கடலுக்கு செலுத்தும் திட்டம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
• நல்ல நீரை சேமிக்கும் திட்டங்கள் தொலை நோக்குப் பார்வையுடன் முறையான தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத வண்ணம் தீட்டப்பட வேண்டும்.
• நீர் மேலாண்மைக்காக ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அது ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை/நீரியல் கட்டமைப்புகளை சீரமைப்பதற்காக செலவிடப்பட வேண்டும்.
• தமிழக நிலப்பரப்பு ஏற்கெனவே நீரினை உறிஞ்சும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாத்தால் அதுவே நீரினை பூமி உறிஞ்சி நிலத்தடி நீரை உயர வைக்கும்.
• புதிதாக sponge park என்று கூறப்படும் திட்டங்களுக்குப் பதிலாக இருக்கும் நீர்நிலைகளை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இயற்கையாக அமைந்த நீர்வழிப்பாதைகளை பாதுகாத்து அதை கருத்தில் கொண்டு எந்த திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
• பள்ளிக்கரணை நீர்பிடிப்பு நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 2 மீட்டர், இது சில இடங்களில் 2 மீட்டர் கூட செல்லலாம். சுமார் 28% (சுமார் 86 sq.km/306 sq/km) பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள். இந்த பகுதிகள் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக (No-Development Zones) அறிவிக்கப்படவேண்டும். மற்றும் எக்காலத்திலும் பாதுகாக்க வேண்டிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
• தாழ்வான நீர் தேங்கியிருக்கும் செம்மஞ்சேரி பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு நகரம் போன்ற திட்டங்களை வேறு தகுந்த இடத்திற்கு மாற்றவேண்டும்.
– செய்திப் பிரிவு