காலநிலை மாற்றத்தினால் 2080-2100ம் ஆண்டுகளில் என்னெல்லாம் பாதிப்புகள் நடக்கும் என கணிக்கபட்டதோ அவையெல்லாம் தற்போது முன் கூட்டியே நடக்கத் துவங்கி விட்டன. 2100ல் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5’C அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது 2030ம் ஆண்டே நடக்க கூடும் என IPCC யின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உயிருள்ளபோது பார்க்க மாட்டோம் என்று நினைத்த தலைமுறையினர்கூட அவர்கள் வாழும் காலத்திலே காலநிலை பாதிப்புகளை உணர ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மாதம், 25 நாட்களுக்குள் நடந்த மூன்று அதிதீவிர காலநிலை நிகழ்வுகளே இதற்கு சாட்சியாக உள்ளன.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் நடந்த மூன்று தீவிர காலநிலை நிகழ்வுகள் :
- நவம்பர் 22, 23 : மேட்டுபாளையம், கோத்தகிரி பெருமழை மற்றும் நிலச்சரிவு.
- டிசம்பர் 4, 5, 6 : மிக்ஜாங் புயல், பெருமழை அதனால் ஏற்பட்ட சென்னை வெள்ளம்.
- டிசம்பர் 17, 18: பெருமழையால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்.
மேட்டுபாளையம், கோத்தகிரி பெருமழை மற்றும் நிலச்சரிவு :
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 24 மணி நேரத்தில் 24செமீ மழை பொழிந்ததில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கோத்தகிரி மற்றும் குன்னூர் சாலைகள் முழுவதும் சேதமடைந்து 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 24 மணி நேரத்தில் மட்டும் 37 செ.மீ. மழை பதிவானது. மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை என்பது சாதாரண ஒரு நிகழ்வு கிடையாது. மொத்த நவம்பர் மாதத்திற்கும் பெய்திருக்க வேண்டிய மழை அளவினைவிட மூன்று மடங்கு அதிக மழை ஒரே நாளில் பெய்திருக்கிறது. இதைத்தான் அதிதீவிர காலநிலை நிகழ்வு என்கிறோம்.
மிக்ஜாங் புயல் & சென்னை பெருவெள்ளம்:
டிசம்பர் 5ஆம் தேதி மிச்ஜாங் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக டிசம்பர் 4-5 தேதிகளில் சென்னையில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 34 செ.மீ மழை பதிவானது. 24 மணி நேரத்தில் 12 செ. மீ பொழிந்தால் அதை கனமழை எனவும் 20 செ.மீ பொழிந்தால் அதி தீவிர மழை எனவும் குறிப்பிடப்படுகிறது. சென்னையில் பெரும்பான்மை இடங்களில் சராசரியாக 30 செ மீ க்கு மேல் மழை பெய்ததால் ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், முடிச்சூர், கிருஷ்ணா நகர், ராம் நகர், மேற்கு மாம்பழம், சைதாப்பேட்டை, திருநின்றவூர், வியாசர்பாடி, தன்டயார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், மணலி போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மழையின் காரணமாக சென்னைக்குப் பேரிடர் என்றால் வட சென்னையில் உள்ள எண்ணூர் மணலி பகுதிக்கு மட்டும் இரட்டைப் பேரிடர் ஏற்பட்டது. CPCL நிறுவனத்திலிருந்து டன் கணக்கில் வெளிவந்த கச்சா எண்ணெய் கொசஸ்தலை ஆற்றின் வெள்ள நீரில் கலந்ததில் எர்ணாவூர் பகுதி வீடுகளும், எண்ணூர் கழிமுகம் மற்றும் கொசஸ்தலை ஆறும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பெருமழையால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்:
டிசம்பர் 17-18 தேதிகளில் பெய்த பெருமழை தென் மாவட்டங்களைப் புரட்டி போட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன . 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் சராசரியாக 37 செ. மீ மழையும், திருநெல்வேலியில் 39 செமீ மழையும் பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் 95 செ.மீ மழை பதிவானது. உடன்குடியில் 95 செ.மீ என்பது ஒரு வருடத்திற்கு பொழிய வேண்டிய மழை. ஒரு வருட மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்திருப்பது காலநிலையில் ஏற்பட்ட தீவிரப் பிறழ்வை நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது.இனிமேல் வரலாறு காணாத வெள்ளம், நூறு ஆண்டு மழை , ஐம்பது ஆண்டு மழை எல்லாம் இல்லை. இனிமேல் நூறு ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற பேரிடர்கள் எல்லாம் வருடாந்திர நிகழ்வுகளாக நடக்கக்கூடும் என்கிறது ஐ.பி.சி.சி. அமைப்பு.
இந்த மூன்று காலநிலை நிகழ்வுகளும் சரியாக பத்து நாட்கள் இடைவெளியில் நடந்துள்ளன, ஒரு பேரிடரில் இருந்து மீண்டு மக்களுக்கு நிவாரணம் கொடுத்து மீண்டெழுவதற்குள் மற்றொரு பேரிடர் நடந்துள்ளது. இதனால் அரசிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடருக்கு மத்தியில்தான் என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறது கடந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம்.
கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் வெயில் அதிகபட்சமாக பதிவானது. அடுத்த ஆண்டு இதைவிட அதிகமாகப் பதிவாகலாம் வருங்காலங்களில் அதிதீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம். இதையெல்லாம் நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நம் அரசுகளிடம் என்ன திட்டம் உள்ளது ? இதையெல்லாம் பற்றி நாம் அடுத்த தொடரில் பார்போம்.
தொடரும் ….
– பிரபாகரன் வீரஅரசு
குறிப்பு: இக்கட்டுரை 2024 ஜனவரி மாத பூவுலகு இதழில் வெளியானது.