காலநிலை மாற்றம் – ‘அ முதல் ஃ’ வரை பாகம் – 03

epa05066822 French President Francois Hollande (2-R), Executive Secretary of the UN Framework Convention on Climate Change (UNFCCC) Christiana Figueres (L), French Foreign Minister Laurent Fabius (C) and United Nations Secretary-General Ban Ki-moon (2-L) after the adoption of the COP21 final agreement at the plenary session room at the World Climate Change Conference 2015 (COP21) in Le Bourget, north of Paris, France, 12 December 2015. The 21st Conference of the Parties (COP21) was held in Paris from 30 November to 12 December. EPA/CHRISTOPHE PETIT TESSON NYTCREDIT: Christophe Petit Tesson/European Pressphoto Agency

காலநிலை மாற்றத்தினைத் தடுக்கும் உலக நாடுகளின் முயற்சியில் முக்கியமானதாகக் கருதப்படுவது COP (Conference Of Parties) மாநாடு. COP-28வது மாநாடு 2023ம் ஆண்டு நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 13 வரை நடக்கவுள்ளது. 1 லட்சம் பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தினைத் தடுப்பதற்கு மற்றும் தகவமைப்பதற்கான நடவடிக்கைகள், அவைகளுக்கு தேவையான நிதி, புதைபடிம ஆற்றல் பயன்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான யுக்தி, இதுநாள் வரை உலக நாடுகள் எடுத்த முயற்சிகளின் மதிப்பீடு, காலநிலை அதீதிவிர நிகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் பொருளாதார இழப்புகளை ஈடு செய்வது என பல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட உள்ளது.

உலகெங்கும் அதிதீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, நூறு ஆண்டிற்கு ஒருமுறை வரும் காலநிலை பேரிடர்கள் எல்லாம் இனி வருடாந்திர நிகழ்வுகளாக மாறக்கூடும் என எச்சரித்திருக்கிறது IPCC அமைப்பு. இந்தச் சூழலில்தான் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு அதிதீவர காலநிலை நிகழ்வு நடந்துள்ளது. கடந்த நவம்பர் 23ம் தேதி கோயம்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 373 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் 24 மணி நேரத்தில் 373 மி.மீ. மழை பதிவாகியுள்ளது இயல்பான விஷயம் இல்லை. மேட்டுபாளையத்தின் நவம்பர் மாத சராசரி மழைப்பொழிவு 128மி.மீ. தான். மொத்த நவம்பர் மாத சராசரியைவிட மூன்று மடங்கு அதிக மழைப்பொழிவு ஒரே நாளில் பதிவாகியுள்ளது என்பது நிச்சயம் இயல்பை மீறியதுதான்.  யாருக்குத் தெரியும் வருகின்ற டிசம்பர் மாதம் இதே போன்ற அதிதீவிர பெருமழை தமிழ் நாட்டின் ஏதேனும் இடங்களின் பொழியலாம், வரும் ஆண்டுகளில் இது போன்ற அசாத்திய நிகழ்வுகள் தமிழ் நாட்டில் அதிகரிக்கலாம். காலநிலை மாற்றத்தினால் பூமிக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் காத்துக்கொண்டு இருக்கிறது , நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இந்தக் கட்டுரையில் கேள்வி பதிலாக பார்போம்.

பாரிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன? பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கு என்ன?

பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக நாடுகளிடையே போடப்பட்ட பன்னாட்டு ஒப்பந்தமாகும். இது 12 டிசம்பர் 2015 அன்று  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐ.நா.வின் காலநிலை மாற்ற (COP21) மாநட்டில் 196 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இது 4 நவம்பர் 2016 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன்படி காலநிலை மாற்ற பாதிப்பினை மேலும் அதிகரிக்காமல் தடுக்க இந்த நூற்றாண்டின் (2100) இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலையை 1.5’C க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்குகள் வரையறை செய்யப்பட்டு உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பூமியின் சராசரி வெப்பநிலை 1.5° C எட்டுவதை நம்மால் தடுக்க முடியுமா ?

ஏற்கனவே நாம் வளிமண்டலத்தில் வெளியிட்டிருக்கும் கார்பன் அளவுகளின் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை 1.5° C எட்டுவதை நம்மால் தடுக்க முடியாது எனவும்,  இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்படும் என கருதிய  1.5° C வெப்ப உயர்வு  இன்னும் 6 ஆண்டுகளில் 2030ல் நடப்பதற்கான வாய்ப்பு 52% இருப்பதாக IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2023ல் வெளியாகி இருக்கும் IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கை பல அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் சராசரி வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

1.5° C உயர்வுக்குள் பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால் இலக்கை சற்று நகர்த்தி 2° C ஆக வைக்கலாம் என அறிஞர்கள் விவாதித்து வருகிறார்கள். ஆனால், அதை சாத்தியப்படுத்தவோ உலக தலைவர்களின் புதிய வாக்குறுதிகளும், துறை சார்ந்த புதிய இலக்குகளும் நிர்ணயத்தல் வேண்டும், ஏற்கனவே இருக்கும் வாக்குறுதிகளும் இலக்குகளும் கடைப்பிடிக்கப்பட்டாலே இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் வெப்பநிலை இயல்பவிட 2.4° C அளவுக்கு உயர்ந்திருக்கும். தற்போது இருக்கும் கொள்கைகள் அப்படியே தொடர்ந்தால் புவியின் வெப்பநிலை 3.1° C வரை உயரும். எந்த காலநிலை கொள்கையும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் சராசரி வெப்பநிலை 4.8° C வரை உயர்ந்துவிடும்.

1.5° C, 2° C, 3° C வெப்ப உயர்வினால் நமக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

1.5° C, 2° C, 3° C  இவை எதோ எண்களாக உங்களுக்குத் தெரியலாம். உண்மையில் இனி இந்த பூமியில் ஏற்படப்போகும் ஒவ்வொரு 0.1° C மாற்றத்திற்கும் பெரிய அளவிலான பாதிப்பினை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால் புவியின் சராசரி வெப்பநிலை 1.5° C யை எட்டும் போது  விவசாயம் பாதிக்கத் துவங்கும், 2° C யை எட்டும்போது இந்தியாவில் பல ஊர்களில் அரிசி, கோதுமை விளையாது, 3° C எட்டும்போது கடல்களில் பலவகை மீன்களின் முற்றிலுமாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக 2080ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50% மானாவரி அரிசி உற்பத்தியும், 40% கோதுமை உற்பத்தியும் குறையும் என ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

தொடரும்…

பிரபாகரன் வீரஅரசு

குறிப்பு: இக்கட்டுரை 2023 டிசம்பர் மாத பூவுலகு இதழில் வெளியானது.

பாகம் 1

பாகம் 2

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments