சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைத் தளர்த்திய ஒன்றிய அரசு

Woman with gas mask walking on landfill, environmental concept. Copy space.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டுள்ளது ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம்.

இதன்படி மாசு குறியீடு மதிப்பு 20 வரையிலான 39 வகையான வெள்ளை வகைப்பாடு உடைய தொழிற்சாலைகள் இனிமேல் மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து தொழிற்சாலையை நிறுவுவதற்கான (Consent To Establish) மற்றும் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணையைப் (Consent To Operate) பெற வேண்டிய அவசியமில்லை. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறும் எந்தத் தொழிற்சாலைக்கும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிறுவுவதற்கான(CTE) இசைவாணை பெற வேண்டிய அவசியமில்லை.

இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிறுவுவதற்கான இசைவாணை ஆகிய இரட்டை அனுமதிகளை நீக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது, மாசுபடுத்தாத வெள்ளை வகைத் தொழில்கள் நிறுவுவதற்கான அனுமதி(Consent To Establish) மற்றும் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை (CTE) பெற வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் இசைவாணை பெறவேண்டிய அவசியமில்லை. இது தொழிற்துறையினருக்கான சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், ஒப்புதல்கள் இரட்டிப்பாக்கப்படுவதையும் தடுக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

”இந்த அறிவிக்கை இந்த இரண்டு ஒப்புதல்களையும் திறம்பட ஒருங்கிணைப்பதுடன் இசைவாணை செயல்முறையின்போது கருத்தில் கொள்ளப்படும் பிரச்சினைகளை சுற்றுச்சூழல் அனுமதியிலேயே கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான நடைமுறை தரநிலையும் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையின்போது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் கருத்தும் கோரப்படும். மேலும், மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில், இசைவாணைக் கட்டணத்தை தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு விதிவிலக்குகளும் சுற்றுச்சூழலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் கண்காணிபில் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைகளை இவை பறிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இத்திருத்தங்களுக்கான வரைவு அறிவிக்கைகள் பொது மக்கள் கருத்துக் கேட்பிற்காக வெளியிடப்பட்டபோதே நாடு முழுவதும் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களின் நலனுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலி கொடுத்துள்ளது ஒன்றிய அரசு.

Air Water Excemption

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments