மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையங்களுக்கு நட்சத்திர மதிப்பெண் வழங்கும் முடிவைத் திரும்பப் பெற்றதாக ஒன்றிய அரசு பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் 17.01.2022 அன்று ஒரு அலுவல் உத்தரவை வெளியிட்டது. அதில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையங்களுக்கு (State Environment Impact Assessment Authority (SEIAA) அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் நட்சத்திர மதிப்பெண்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் இடம்பெற்றிருந்தன.
இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006ன் கீழ் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையங்களிடம் அல்லது ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கவோ, மறுக்கவோ மேற்கூறிய ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு. மேலும், இப்பரிசீலனையின்போது திட்டம் குறித்த கூடுதல் தரவுகளைக் கேட்கவோ அல்லது திட்ட அமைவிடத்தில் நேரில் ஆய்வு செய்யவோ ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு. ஒன்றிய பா.ஜ.க. அரசு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஒரு முயற்சியாகத்தான் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையங்களுக்கு நட்சத்திர மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ஒன்றிய அரசு 2022ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி சுற்றுச்சூழல் அனுமதி கோரப்படும் விண்ணப்பங்களை குறித்த கால அளவில் விரைவாகப் பரிசீலித்து அனுமதி வழங்கும் ஆணையங்களுக்கு 7 வழிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இம்மதிப்பெண்களைப் பெறுவதற்காக விரிவான, முறையான பரிசீலனை மற்றும் ஆய்வுகள் நடக்காமல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் அழுத்தம் ஆணையங்களுக்கு ஏற்படும் என்பதால் இந்நடைமுறைக்கு எதிர்ப்பு கிளம்பியது. முறையான பரிசீலனை நடக்காமல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் இவ்வலுவல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தித் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கே ஆர் செல்வராஜ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை 27.03.2025 அன்று நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த அலுவல் உத்தரவைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ண தீர்ப்பாயம் இம்மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.
– செய்திப் பிரிவு
Final Order