குறையும் பனி வரம்புகள்; எச்சரிக்கும் நாசா!

பனி

மொழி, கலாச்சாரம், இனம் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக வைத்து மனிதன் எல்லைகளைப் பிரித்து வைத்துள்ளான். அவை கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இயற்கையாக எல்லைகள் உள்ளதா என்றுக்கேட்டால் மேலே கூறப்பட்டவை கண்டிப்பாக இல்லை என்றே கூறலாம்.

ஆனால், இயற்கையின் அடிப்படையில் எல்லைகள் உள்ளதா? என்று கேட்டால் நிச்சயமாக எல்லைகள் உள்ளன. அவை கடலுக்கும் நிலத்துக்கும் உள்ள எல்லைகளாக இருக்கலாம், நில நீர் பகுதிக்கும் வளிமண்டலத்திற்கும் உள்ள எல்லைகளாக இருக்கலாம், பூமிக்குப் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அடியில் கண்டத்தட்டிற்க்கும் அதன் கீழேயுள்ள நெருப்புக் குழம்பிற்குமான எல்லைகளாக இருக்கலாம். இயற்கையில் ஒரு அமைவிற்கும் மற்றொரு அமைவிற்கும் எல்லைகளை இப்படியாக நாம் பார்க்கலாம்.

இவற்றை பட்டியலிட்டதுபோல நிலப்பரப்பில் குறிப்பாக மலைப்பகுதியில் குளிர் பிரதேசங்களில் நிலையான பனிப் பகுதிக்கும் நிலப்பகுதிக்கும் எல்லைகள் உண்டு இவற்றை எல்லை வரம்பு அல்லது எல்லைக் கோடு என்றழைக்கலாம். இந்த எல்லையை ஆங்கிலத்தில் ‘snow line’ என்பார்கள்.

இப்பனிக் கோடுகள் உலகம் முழுக்க ஒரே அளவில் இருப்பதில்லை. இவை வெப்பநிலைக்கு ஏற்றவாறும், புவியியல் அமைவிற்கு ஏற்றவாறும் மாறும். வட மற்றும் தென் துருவப் பகுதிகளில் இப்பனிக் கோடுகள் கடல் மட்டத்திலிருந்த் துவங்கிறது. துருவப் பகுதிகளிலிருந்து பூமத்தியரேகைப் பகுதிகளுக்கு அருகில் செல்ல செல்ல, இப்பனிக் கோடுகளின் எல்லைகள் உயர்வான பகுதிகளை நோக்கிச் செல்கிறது.

ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 2,500 – 3,000 மீட்டர் உயரத்திலும், தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் 5,000 – 5,800 மீட்டர் உயரத்திலும், நம் இமயமலையில் 5,500 – 6,000 மீட்டர் உயரத்திலும் எல்லைகள் இருக்கும். இவ்வெல்லைக் கோடுகளும் நிலையானது கிடையாது. இவை வெப்பநிலை, மழைப்பொழிவு, பனிப்பொழிவு உள்ளிட்டவைக்கு ஏற்றவாறு மாறும்.

உயரமான பகுதிகளோ அல்ல கடல் மட்டத்தின் அருகில் உள்ள பகுதிகளோ, ஆண்டு முழுதும் நிலையான பனிப்பகுதிகள் எங்கிருந்து துவங்குகிறதோ அவை பனிக்கோடுகளாக கருதப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலால் இப்பனிக் கோடுகள் மேலும் உயரமான பகுதிக்கு நகர்கின்றன. அதாவது ஆண்டு முழுவதும் நிலையாக இருக்ககூடிய பனிப் படர்ந்த இடங்களின் அளவு குறைந்து வருவதாக நாம் இதைப் புரிந்துக்கொள்ளலாம்.

கங்கை, சிந்து போன்ற ஆறுகள் ஆண்டு முழுவதும்   நீர் பாயும் ஆறுகளாக இருக்கின்றன. நம் ஊர்களில் பாயும் நதிகள் அனைத்தும் மழைப்பொழிவை ஆதாரமாகக் கொண்டவை. ஆனால், வடக்கில் பாயும் ஆறுகள் யாவும் இமயமலைத்தொடரில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால் உருவான ஆறுகள். அதனால் வட இந்தியாவில் பாயும் ஆறுகள் வற்றாமல் ஆண்டு முழுதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

கங்கை, சிந்து போல உலகம் முழுதும் பனி மலைகளை ஆதாரமாகக் கொண்டு பாயும் நதிகள் பல உள்ளன.  குறையும் பனிக்கோடுகளால் கோடை காலங்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இமயமலைகளில் உள்ள பல சிகரங்கள் வேகமாக உருகுகின்றன. இதனால் பல இலட்ச மக்கள் குடிநீர்த் தட்டுப்பாடுக்கு ஆளாகி இருக்கின்றனர். மாறும் காலநிலையால் தாவரங்கள், விலங்குகள் என ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை விவசாய முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அண்மையில் நாசா வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஜனவரி 2025-யில் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தின் பனிக்கோடுகளின் அளவு சுமார் 6100 மீட்டர் இருந்ததாக தெரிவித்துள்ளது. குளிர் காலத்தில் மிக உயரமான இடத்தில் மட்டுமே பனி இருந்ததாக நாம் இதைப் புரிந்துக்கொள்ளலாம். இதன்மூலம் பனிப்பொழிவின் அளவு தாழ்வான பகுதிகளில் குறைந்துள்ளதாக நாசா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அ. செயற்கைக்கோள் படம் எடுத்த ஆண்டு: ஜனவரி 28, 2022

 

ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2024-ம் ஆண்டின் குளிர் காலம் இமயமலைப் பகுதிகளில் வறண்ட மற்றும் வெப்பம் அதிகம் கொண்ட குளிர் காலமாக இருந்ததாகக் கண்டறிந்துள்ளனர். அதிக வெப்பத்தால் பனிபடர்ந்த பகுதிகள் திரவ நிலைக்குச் செல்லாமல் ஆவியாகிவிடுகிறது (Sublimation) என்று கூறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை (2021, 2023, 2024, 2025) குளிர் காலத்தில் உயர்வான பகுதிகளில் பனிக்கோடுகள் இருந்துள்ளன.

ஆ. செயற்கைக்கோள் படம் எடுத்த ஆண்டு: ஜனவரி 20, 2025

 

மேலே உள்ள இரண்டு செயற்கைக்கோள் படங்கள் ஒரே இடத்தில் இரண்டு காலங்களில் எடுக்கப்பட்டவை. எவரஸ்ட் சிகரத்தை சுற்றியுள்ள பல சிகரங்களை அடங்கிய இப்படங்களில் பனி படர்ந்த பகுதிகள் கணிசமாகக் குறைந்துள்ளதை நாம் பார்க்கலாம். படம் (அ)வில் சிவப்பு வட்டத்தில் குறிக்கப்பட்ட பனி சிகரங்கள் படம் (ஆ)வில் பனிப்பகுதிகள் குறைந்து உள்ளதை நாம் காணலாம்.

இந்த மாற்றங்கள் மூலம் பருவநிலைகள் மிகத் தீவிரமாக மாறி வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையில் புதியதாக மாற்றம் நிகழும்போது சூழலிலும், மக்கள் வாழ்வாதாரத்திலும், பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். வடக்கிலிருந்து வரும் குளிர் காற்றைத் தடுத்தும், தென்மேற்கில் இருந்து வரும் பருவ காற்றைத் திசை திருப்பி வடகிழக்கு பருவ காற்று உருவாக இமயமலையில் உள்ள பனி காரணமாக இருந்தது. இப்போது குறைந்து வரும் பனியின் அளவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

– லோகேஷ் பார்த்திபன்

Reference
1. https://earthobservatory.nasa.gov/images/153945/himalayan-snow-lines-on-the-rise?utm_source=TWITTER&utm_medium=NASAClimate&utm_campaign=NASASocial&linkId=753444152
2. https://theconversation.com/snow-can-disappear-straight-into-the-atmosphere-in-hot-dry-weather-162910
3. https://earthobservatory.nasa.gov/images/81823/exploring-mount-everests-ice

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments