செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி் ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள ஒன்றிய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 12ம் தேதி வரைக்கும் எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்காக வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்து உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சன் ஃபார்மா ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
மனுதாரர் தரப்பில் மூத்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா வாதங்களை முன் வைத்தார். மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டத் தீர்ப்பாயம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் ஆலை விரிவாக்கத்திற்காக எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் சன் பார்மா நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
status quo– செய்திப் பிரிவு