பெருநகர சென்னை மாநகராட்சி 5 ஆண்டுகளாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதியில்லாமல் எப்படி குப்பை எரியுலையை இயக்கியது என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்பாயம் என கேள்வியெழுப்பியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியானது, சென்னையில் சிறிய அளவிலான குப்பை எரிவுலைகள் இரண்டை நிறுவி செயல்படுத்தி வருகிறது. கொடுங்கையூரிலும் மணலி – சின்ன மாத்தூரிலும் செயல்படும் இக்குப்பை எரிவுலைகள் அப்பகுதி மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனை ஆவணப்படுத்தி வெளிக்கொணரும் நோக்கில் விசை, பூவுலகின் நன்பர்கள், கொடுங்கையூர் தோழர்கள், Foundation for Friendly Environment and Medical Awareness (FEMA) சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு (CCAG), Centre for Financial Accountability (CFA), வழக்கறிஞர் மதுவந்தி ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு அறிக்கையை 1.04.2025 அன்று வெளியிட்டிருந்தனர்.
அவ்வறிக்கையில் சின்னமாத்தூரில் உள்ள குப்பை எரியுலை மாசு கட்டுப்பாடு வாரிய இசைவாணையின்றி செயல்படுவதாகவும் கடும் மாசுபாடை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கானது 16.04.2025 அன்று தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசே இப்படி விதியை மீறினால் எப்படிப் பொதுமக்கள் விதிகளைப் பின்பற்றுவார்கள் எனத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் அனுமதியில்லாமல் குப்பை எரியுலை இயக்கியது ஏன் என்பது குறித்தும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.