2025 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய வானிலை மையத்தின் தரவுகளின்படி தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழையானது இயல்பை விடக் குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று (15.04.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் 2025 தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கினார். நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழையானது நீண்ட கால சராசரியில் 105% ஆக இருக்கும் என்றும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 1971-2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ ஆகும்.
இந்த முன்னறிவிப்பு இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது. வடமேற்கு, வடகிழக்கு, தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு காணப்படுவதாகவும் வடக்கு அரைக்கோளம் மற்றும் யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளதால் 2025 தென்மேற்குப் பருவமழை காலத்தில் இது மழைக்குச் சாதகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) தன்மை நடுநிலையாகவும் நிலநடுக்கோட்டை ஒட்டிய பசுபிக் பெருங்கடலில் எல் நினோ தன்மை நடுநிலையாகவும் உள்ளது எனவும் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இக்கணிப்புகளின்படி, தென்மேற்குப் பருவமழையானது லடாக், தமிழ்நாடு மற்றும் பீகாரின் சில பகுதிகளில் இயல்வை விடக் குறைவாகவும் தெற்கு சட்டீஷ்கர், வடக்கு ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா, தெற்கு ஒடிஷாவின் சில பகுதிகளில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகின்றன.
கடந்த 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்து வருவதாக எம். ரவிச்சந்திரன் தெரிவித்தார். “வழக்கமாக இந்தியாவில் மழைப்பொழிவு இருமுனை நிகழ்வாக நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களில் அதிக மழையும் ராஜஸ்தானின் தார் பாலைவனம் அமைந்துள்ள பகுதிகளில் குறைவான மழைப்பொழிவும் பதிவாகும். ஆனால், இந்நிலை தற்போது தலைகீழாக மாறி வருகிறது. தார்ப் பாலைவனப் பகுதிகளில் அதிகமாகவும், வடகிழக்கு மாநிலங்களில் குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “சிலர் காலநிலை மாற்றம்தான் இதற்கானக் காரணம் எனக் கூறினாலும் தெளிவான ஆதாரங்கள் நம்மிடம் இன்னும் இல்லை. இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்” எனக் கூறினார். 2025 மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு NOAA (National Oceanic and Atmospheric Administration) உள்ளிட்ட வானிலை சேவை நிறுவனங்களுக்கான நிதியைக் குறைப்பது இந்தியாவின் வானிலை கணிப்புகளைப் பாதிக்குமா என்கிற கேள்விக்கும் அமைச்சகச் செயலாளர் ரவிச்சந்திரன் பதிலளித்தார். அவர் கூறுகையில் “NOAA இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலின் தன்மையைக் கண்காணிக்கும் முக்கியமானப் பணியில் பெரும்பங்காற்றுகிறது. அமெரிக்க அரசின் நிதிக்குறைப்பால் NOAA வில் ஆட்குறைப்பு ஏற்பட்டால் அது நம்மைப் பாதிக்காது. ஆனால், பெருங்கடல்களைக் கண்காணிக்கும் பணிகளில் குறைவு ஏற்பட்டால் இந்தியாவில் வானிலைக் கணிப்புகளை வழங்கும் திறன் குறையும். ஏற்கெனவே கடல் வெப்பநிலையைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகளே இன்னும் ஆண்டுகளுக்கு வேலை செய்யும் என்பதால் தற்போதைக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசு National Aeronautics and Space Administration (Nasa) மற்றும் National Oceanic and Atmospheric Administration NOAA உள்ளிட்ட உலக காலநிலை சேவைகளில் முக்கியப் பங்காற்றி வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியைக் குறைக்கவிருப்பதாக அண்மையில் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
– சதீஷ் லெட்சுமணன்.
SW Monsoon English Press Release 15 April, 2025