2024 – 2025 நிதியாண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 54.78% நிதியை மட்டுமே ஒன்றிய அரசு செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது இந்தியாவின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் செயலாக்கப்படுவதை கண்காணிக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம்தான் நாட்டின் இயற்கை வளங்களான ஆறுகள், ஏரிகள், உயிர்ப்பன்மையம், காடுகள், கானுயிர்கள் பாதுகாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்படுகிறது.
இப்பணிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படுவதும் அவை முறையாகச் செலவிடப்படுவதும் முக்கியமானது.
25.03.2025 அன்று நாடாளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இவ்வறிக்கையில் அமைச்சகமானது தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திறம்படச் செலவு செய்யாதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2024 -2025 நிதியாண்டில் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 3330 கோடியாக இருந்த நிதியானது திருத்த மதிப்பீட்டில் ரூ. 3125.96 கோடியாக ஒதுக்கப்பட்ட நிலையில் 31.01.2025 நிலவரப்படி ரூ.1712.48 கோடி தொகையை மட்டுமே அமைச்சகம் செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீட்டிலிருந்து வெறும் 54.78% மட்டுமே.
இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனை 19.02.2025 அன்று நடந்தபோது திருத்த மதிப்பீட்டில் ஒதுக்கியதிலிருந்து மொத்தம் 69% நிதியை செலவிட்டிருப்பதாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025 நிதியாண்டு முடிவடைய 40 நாட்கள் மட்டுமே இருக்கக் கூடிய நிலையில் இன்னும் 30% நிதி செலவிடப்படாமல் இருப்பது திருப்தியளிக்கவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டுகளான 2022 – 23 மற்றும் 2023-24ல் முறையே 96.42% மற்றும் 96.37% நிதியை அமைச்சகம் செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிதியை உகந்த முறையில் செலவிட முனைப்புடன் செயல்பட வேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மாசுபாடு தடுப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1% கூட செலவிடாத ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து ’மாசுபாடு தடுப்பு (Control of Pollution’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது நாடு முழுவதும் காற்றின் தரத்தைக் கண்காணித்து காற்று மாசுபாடைத் தடுப்பது மற்றும் நீரின் தரம் மற்றும் ஒலிமாசுபாடைக் கண்காணிப்பதாகும்.
2024 – 2025 நிதியாண்டில் இம்மாசுபாடு தடுப்புத் திட்டத்திற்கு ரூ. 855.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் 31.01.2025 வரையில் வெறும் ரூ. 7.22 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது. இது ஒதுக்கப்பட்ட நிதியில் 1 விழுக்காடிற்கும் குறைவானதாகும். இதுகுறித்து நிலைக்குழுவிடம் விளக்கமளித்த அமைச்சகம் இத்திட்டத்தைத் தொடர்வதற்கான ஒப்புதலுக்குக் காத்திருப்பதால் இந்நிதியைப் பயன்படுத்த இயலவில்லை எனத் தெரிவித்தது.
திருத்த மதிப்பீட்டின்படி அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 27.44% நிதியைக் கொண்டிருக்கும் இத்திட்டத்திற்கு ஆண்டு இறுதி நெருங்கும் நிலையில்கூட ஒப்புதல் கிடைக்கவில்லை எனக் கூறுவது அதிர்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு மனித ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் இயற்கையையும் பாதிக்கிற நிலையில் இதற்கான நிதியைப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை அமைச்சகம் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த கானுயிர் வாழிட மேம்பாடுத் திட்டத்தின் (Integrated Development of Wildlife Habitats) கீழ் புலி மற்றும் யானை திட்டங்களை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்கு 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் முறையே 81%, 99.99% மற்றும் 74.57%(31.01.2025 வரை) செலவிடப்பட்டது திருப்தியளிப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
கானுயிர் -மனிதர் எதிர்கொள்ளல்:
நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் அமைச்சகமானது நாட்டில் கானுயிர் – மனித எதிர்கொள்ளல் அதிகரித்து வருவதாகவும் ஆனால், பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குவதில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதாகவும் ரூ. 70 முதல் 80 கொடி வரையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
2024 – 2025 நிதியாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் புலி திட்டம் & யானை திட்டத்திற்கான நிதியானது ரூ. 290 கோடி என அறிவிக்கப்பட நிலையில் அது திருத்த மதிப்பீட்டில் ரூ. 245 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் யானைகள் அதிகமுள்ள மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்க முடியவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானுயிர் – மனித எதிர்கொள்ளலால் உயிரிழப்பவர்களுக்கான நிவாரணத் தொகையை அதிகரிப்பதைவிட இச்சிக்கல் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிலைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியதுபோல நிதி ஒதுக்கீடில் உள்ள பற்றாக்குறை மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவிடுவதில் நிலவும் ஒன்றிய அரசின் அலட்சியத்தால் மாநில அரசுகளின் சுமை அதிகமாவதோடு மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீவிர பாதிப்புகள் உண்டாகிறது. இவ்வறிக்கையின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அவற்றை நடப்பு நிதியாண்டில் சரிசெய்வதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
– சதீஷ் லெட்சுமணன்
Standing Committee Report MOEFCC