காலநிலை விழிப்புணர்வு பெற்ற தமிழ்நாடு ஏன் அவசியம்?

காலநிலை

தமிழ்நாட்டில் காலநிலை கல்வியறிவை வளர்த்தெடுக்கும் திட்டத்திற்கா ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கடந்த 26.04.2025 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு “காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்ட காலநிலைக் கல்வியறிவு பெற்ற ஒரு தலைமுறையை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அதுவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுமாகும்” எனக் கூறினார்.

மேலும், ”நம் நாட்டில் 1990 -களில் எழுத்தறிவு இயக்கம் துவங்கியபோது, அடிப்படைக் கல்வியறிவு மற்றும் செயல்பாட்டுக் கல்வியையும் அடிப்படையாகக் கொண்டு அறிவொளி இயக்கத்தினைத் துவங்கி, கல்வியறிவு விகிதம், குறைந்த இடைநிற்றல் மற்றும் உயர் கல்வி சேர்க்கையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாடு அரசு காலநிலைக் கல்வியறிவினை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்துதல், பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் “மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் போன்றவை நடத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என அறிவித்தார்.
இவ்வறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்க முக்கியமான அறிவிப்பாகும்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அசார் (Asar Social Impact Advisors), காலநிலை கல்வியாளர்கள் நெட்வொர்க் (Climate Educators Network) மற்றும் சி.எம்.எஸ்.ஆர் (CMSR Consultants ) ஆகியோர் இணைந்து நடத்திய ‘இந்தியாவில் காலநிலை கல்வி குறித்த முதல் முறை வாக்காளர்களின் கருத்து’ என்ற ஆய்வை வெளியிட்டனர்.

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் மொத்தம் 1600 முதல் முறை வாக்காளர்கள் இக்கணக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 18-22 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் இதில் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பில் கலந்துகொண்ட முதல் முறை வாக்காளர்கள் சுற்றுச்சூழல் படிப்புக்கும் காலநிலை கல்விக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்திருக்கவில்லை என்பதை இக்கணக்கெடுப்பு வெளிக்காட்டியது. சுற்றுச்சூழல் படிப்பானது சூழல் அமைவுகள், வளங்குன்றா வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகையில், காலநிலை கல்வியானது மனித நடவடிக்கைகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை கல்வியின் தரம் குறித்தும் இக்கணக்கெடுப்பில் ஆராயப்பட்டது. பதிலளித்தவர்களில் 73% பேர் தங்கள் கல்வியின் மூலம் காலநிலை மாற்றம் குறித்து போதுமான அளவு அறிந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், குழு விவாதங்களில், பங்கேற்பாளர்கள் தங்கள் வகுப்பறைகளில் காலநிலை கல்வியின் நிலை மற்றும் அது எவ்வாறு போதுமானதாக இல்லை என்பதைப் பற்றிப் பேசியது முற்றிலும் முரணாக இருந்ததாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாய்வில் பங்கெடுத்துப் பதிலளித்தவர்களில் 82% பேர் தங்கள் பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து புதிய மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கற்றுக்கொண்டதாகக் கூறினர், ஆனால், இதில் பெரும்பான்மையானவர்கள் (46%) புவி வெப்பமடைதல் பற்றி மட்டுமே கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தனர். 61% பேர் காலநிலை குறித்த அறிவு தங்களுக்கு இருப்பதாக ஓரளவு நம்பிக்கையுடன் கூறினர். ஆனால், குழு விவாதத்தின்போது தங்களுக்கு காலநிலை குறித்து இன்னும் அறிந்துகொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்ததாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடிக்கு அடுத்தபடியாக நாம் மிகவும் கவலைப்பட வேண்டிய மிக முக்கியமான நெருக்கடியாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. காலநிலை சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கொள்வதற்கும் மாணவப் பருவத்திலேயே காலநிலை கல்வியை வழங்குவது மிகவும் அவசியமானதாகும்.

இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பளிப்பதாகவும் காலநிலை கல்விக்குப் பெரியளவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார் அசார் அமைப்பின் காலநிலை கல்விப் பிரிவின் தலைவர் பல்லவி படாக். ”வயதுக்கு ஏற்ற காலநிலை கற்றலை உறுதி செய்வது மிக அவசியம். புரிதல் மற்றும் அர்ப்பணிப்பை ஆழப்படுத்த காலநிலை மாற்றம் தொடர்பான நடைமுறை நடவடிக்கைகள், களப்பணி மற்றும் சமூகத் திட்டங்களை எளிதாக்குதல் உள்ளிட்ட நேரடி ஈடுபாடுகளுடன் கூடிய பாடத்திட்டங்கள் அவசியம்” என அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இம்முயற்சிப் பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு நிறுவனத்தையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இவ்வரிசையில் காலநிலை கல்வியும் முக்கியத் திட்டமாக உருவாகி வருவது வரவேற்கத்தக்கது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments