தமிழ்நாட்டில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாநில வனத்துறை நடத்திய ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள வனப்பகுதிகளில் 27.02.2025 மற்றும் 28.02.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட மூன்றாவது ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 157 பாறு கழுகுகள் இருப்பது தெரியவந்துள்ளது. பாறு கழுகுகளின் எண்ணிக்கையானது 2023, 2024 ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி முறையே 100 மற்றும் 152 ஆக இருந்தது.
அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் இக்கணக்கெடுப்பானது முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வனக்கோட்டம், பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில், பந்திப்பூர், நாகர்ஹோளே புலிகள் காப்பகங்கள், வயநாடு கானுயிர் சரணாலயம் ஆகிய 7 இடங்களில் வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறையைப் பின்பற்றி நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பாறு கழுகுகள்:
- வெண்முதுகுப் பாறுக் கழுகு(White-rumped vulture)
- கருங்கழுத்துப் பாறுக் கழுகு(Long-billed vulture)
- செந்தலைப் பாறுக் கழுகு(Red-headed vulture)
- மஞ்சள்முகப் பாறுக் கழுகு(Egyptian vulture)
மொத்தம் 3 மாநிலங்களை உள்ளடக்கிய 106 வாண்டேஜ் பாய்ண்டுகளில் நடத்தப்பட்ட இவ்வாய்வில் மொத்தமாக 390 பாறுக் கழுகுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது முந்தைய கணக்கெடுப்பில் 320 ஆக இருந்தது. நடப்பாண்டு கணக்கெடுப்பில் வெண்முதுகுப் பாறுக் கழுகுகளின் (White-rumped vulture) எண்ணிக்கை மட்டும் 288 ஆகும்.
இக்கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் வெண்முதுகுப் பாறுக் கழுகு மற்றும் கருங்கழுத்துப் பாறுக் கழுகுகளின் எண்ணிக்கையானது இதற்கு முன்பு நடந்த கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் நிதானமாக உயர்ந்து வருவதாகவும் வனத்துறைத் தெரிவித்துள்ளது. இக்கணக்கெடுப்பில் இமாலயப் பாறுக் கழுகுகள் (Himalyan Vulture) காணப்படவில்லை.
இக்கணக்கெடுப்பில் பாறுக் கழுகுகளின் கூடுகள் இருக்கும் 18 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு மொத்தம் 75 கூடுகளும் 150 பாறுக் கழுகுகளும் 39 குஞ்சுகளும் காணப்பட்டுள்ளன. அதிகபட்சமாக முதுமலையில் மட்டும் 54 கூடுகளும் முதல் முறையாக அங்கு செந்தலைப் பாறுக் கழுகுகளின் கூடு கண்டறியப்பட்டதாகவும் இது அங்கு இனப்பெருக்கம் சிறப்பான முறையில் இருப்பதற்கான அறிகுறி என்றும் தமிழ்நாடு வனத்துறை அரசு கூடுதல் முதன்மைச் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் பாறு கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்துப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்புக் குழுவை 2022ஆம் ஆண்டே அமைத்திருந்தது. மேலும், கழுகுகளின் எண்ணிக்கைக் குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள், மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.
Vulture 2025கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக வழங்கப்பட்டு வந்த Nimesulide மருந்தின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்திற்கு தடை விதித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில் இது தொடர்பாக 10 வழக்குகள் பதியப்பட்டு 5 மருந்து விற்பனை நிலையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கூடுதல் முதன்மைச் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
கழுகுகளுக்கான உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த காட்டுயிர் சடலங்களைப் புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அச்சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுவதாவும். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து சூழல் சமநிலையை எய்த இயலும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
– செய்திப் பிரிவு