தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கம்; பொருளாதார ஆய்வறிக்கை சொல்வதென்ன?

தமிழ்நாடு அரசின் 2025 – 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை 14.03.2025 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 13.03.2025 அன்று தமிழ்நாடு மாநில திட்டக்குழு சார்பில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ’தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை – 2024-25’-யை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

2024-25இல், பொருளாதார வளர்ச்சிப் போக்கைப் பாதிக்கும் உலக அளவிலான சவால்களை, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலுடன் எதிர்கொண்டதாகவும் பெருந்தொற்றோடு பன்னாட்டு அரசியல் பதற்றங்களும் தீவிரமான தட்பவெப்ப மாற்றங்களும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பாதித்ததுடன் எரிசக்தி, உணவுத் துறை ஆகியவற்றில் நெருக்கடிகளை விளைவித்ததாக இவ்வறிக்கை கூறுகிறது.
2023இல் உலகப் பொருளாதாரம் 3.33% உண்மை வளர்ச்சி நிலையை அடைந்தது. இந்தியப் பொருளாதாரம் 2022-23இல் 7.61%, 2023-24இல் 9.19%, 2024-25இல் 6.48% வளர்ச்சியை எட்டியது. 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டிவருகிறது. 2024-25இலும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள இப்பொருளாதார ஆய்வறிக்கை அனைத்துத் துறைகளிலும் நிலவும் சவால்களையும் குறைபாடுகளையும் கூட சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் இப்பொருளாதார ஆய்வறிக்கை விரிவாகப் பதிவு செய்துள்ளது.
நிலத்தடிநீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் போன்ற சவால்களைத் தமிழ்நாடு சமாளித்தால் விவசாயத்திலும் அது சார்ந்த துறைகளிலும் விரைவான வளர்ச்சியை அடைய முடியும் என்றும் காலநிலைக்கேற்ற செயல்பாடுகள், இயந்திரமயமாக்கல், அறுவடைக்குப் பிந்தைய மதிப்புக் கூட்டல் ஆகியவை இந்தத் துறைகளில் வருமானத்தைக் கணிசமாக உயர்த்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கவனம்கொள்ள வேண்டிய ஒன்றாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளதாக இப்பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் பெரும்புயல்கள் (2016இல் வர்தா, 2017இல் ஒக்கி, 2018இல் கஜா, 2023இல் மிக்சாங் மற்றும் 2024இல் ஃபெங்கல்) மற்றும் வெள்ளம் (குறிப்பாக 2015 மற்றும் 2017) உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை மாநிலம் அதிகம் எதிர்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை அபாய மதிப்பீடு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வு நிலையத்தின் அறிக்கை, வட கிழக்குக் கடலோரப் பகுதிகள் தீவிர வானிலை நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை எனவும், வடகிழக்குப் பருவமழையின்போது, பெருவெள்ளம், சூறாவளி, கடல் மட்ட உயர்வு, நீண்ட நாள்களுக்கு நீர் தேங்குவதால் விவசாயத்தில் ஏற்படும் கடும் சேதம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளதைப் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அடர்ந்த காடுகள் காரணமாகக் கரியமில வாயு குறைவாக வெளிப்படுவதால் ஒப்பீட்டளவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறைந்த பாதிப்பை எதிர்கொள்வதாகவும். அதே வேளையில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பாதிப்புக்குள்ளாவதால் வறட்சி அதிகரித்து, விவசாய உற்பத்தியைப் பாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

 

பொருளாதார ஆய்வறிக்கை

 

வெப்பநிலை உயர்வு:
ஒரு நூற்றாண்டுக்கு +0.68 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் சராசரி வெப்பநிலை உயர்ந்து வருவதாகவும், இதில் அதிகபட்ச வெப்பநிலையானது +0.84 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை +0.51 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் உயர்ந்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1901க்குப் பிறகான வானிலைத் தரவுகளின்படி தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலை நிலவிய ஆண்டுகளில் முதலிடத்தை 2019 (+0.848 °C) ஆம் ஆண்டு பிடித்துள்ளது. அடுத்தடுத்து 2016 (+0.837 °C), 2017 (+0.624 °C), 2020 (+0.493 °C) மற்றும் 2023 (+0.432 °C) ஆண்டுகள் உள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளுமே 2016க்குப் பிறகான பத்தாண்டுகளுக்குள் உள்ளதால் புவி வெப்பமயமாதலின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதை உணர்த்துகிறது. மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியைப் பாதிக்கும் காலநிலை மாற்றம்:
தமிழ்நாட்டின் விவசாயம் பெரும்பாலும் பருவமழையை நம்பித்தான் நடைபெறுகிறது. விவசாயம் ரூ.1.5 லட்சம் கோடி (மொத்த மாநில உற்பத்தி மதிப்புக் கூட்டலில் – ஜிஎஸ்விஏவில் 6%) பங்களித்து, ஐந்தாவது பெரிய துறையாகத் திகழ்கிறது. மொத்தப் பயிரிடப்பட்ட பரப்பளவில், நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன. பயிர்ப் பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்துவருகிறது. 2019-20இல் மொத்தப் பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24இல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.

 

 

வேளாண் புள்ளிவிவரங்கள் ஒரு கண்ணோட்டம் (2024) அறிக்கையின்படி, தமிழ்நாடு எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித்திறனில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தித்திறனில் இரண்டாம் இடத்திலும், நெல் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. வணிக விவசாய விரிவாக்கம், தமிழ்நாட்டின் முதன்மைப் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவை ரசாயன உரங்களையும் நிலத்தடிநீரையும் அதிகமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக எட்டப்படுகின்றன
உணவுப் பொருட்களின் விலையானது காலநிலை மாற்றத்தால் கடும் தாக்கத்தைச் சந்திக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலைகளும் கணிக்க முடியாத மழைப்பொழிவும் உணவுப்பொருள் உற்பத்தியைக் குறைக்கின்றன. உணவு மற்றும் பானங்களின் பணவீக்கம் 2023-2024 இல் 7.4% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற அனைத்துப் பிரிவுகளின் பணவீக்கத்தை விடவும் அதிகமாகும். தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட பாதகமான மாற்றம்தான் இவ்வுயர்வுக்குக் காரணம் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

நீர்த்தேவையும் காலநிலை மாற்றமும்:
தமிழ்நாடு அரசின் ஆண்டு சராசரி மழைப்பொழிவானது 987 மி.மீ. ஆகும். 2019-20 ஆம் ஆண்டைத் தவிர்த்து அதற்குப் பிந்தைய ஆண்டுகள் அனைத்தும் ஆண்டு சராசரி மழைப்பொழிவானது இயல்பைவிட அதிகமாகவேப் பதிவாகியுள்ளது. இருப்பினும் சில ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருட்களில் காலநிலை மாற்றம் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகப் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 67 நாட்கள் ஏதோவொரு தீவிர வானிலை நிகழ்வுப் பதிவாகியுள்ளது. இதனால் பல்லாயிரம் எக்டர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

 

 

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 16 பெரிய அணைகளிலிருந்து வெளியேறும் மொத்த நீரில் 58% முதல் 76% நீரானது மேட்டூர், பவானிசாகர், வைகை மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து வெளியேறுகிறது. 2019-20 முதல் 2023-2024 வரை ஆண்டு சராசரி நீர் வெளியேற்றமானது 616 TMC ஆகும். இருப்பினும் 2023-24 ஆம் ஆண்டில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, வைகை மற்றும் சாத்தனூர் உள்ளிட்ட அணைகளிலிருந்து வெளியான நீரின் அளவானது அதற்குப் முந்தைய 2 அல்லது 3 ஆண்டுகளில் வெளியான நீரைவிட மிகவும் குறைவு என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. பெரிய அணைகளிலிருந்து வெளியேறும் நீரை நம்பி தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் நிலையில் இந்நிலை தொடர்ந்தால் வேளாண் உற்பத்திக் கணிசமாகக் குறையும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு அதன் 2023-30 செயல்திட்டத்தின் வாயிலாகக் காலநிலை சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை கரியமில உமிழ்வுக் குறைப்பு, வளங்குன்றா வேளாண்மை, திறன்மிகு நீர் மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புர வெள்ளங்கள், வெப்ப அலைகள், மற்றும் உயிர்ப்பன்மைய இழப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளப் பசுமை உள்கட்டமைப்பும் கடலோரச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் தேவைப்படுவதாக இப்பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள இவ்வாய்வறிக்கை அதிக மாசையும், புவி வெப்பமயமாதலை அதிகரிக்கவல்லதுமான புதைபடிம ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு நிலைப்பாடு என்றாலும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாகக் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் குப்பை எரிவுலைத் திட்டத்தைக் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. அதிக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய இத்தொழில்நுட்பத்தை உலக நாடுகள் பலவும் கைவிடத் தொடங்கியுள்ளனர். குப்பைகள் தொடர்ந்து உருவாக்கப்படுவதை ஊக்குவிக்கும் இத்தொழில்நுட்பத்தால் தமிழ்நாட்டின் குப்பை மேலாண்மைச் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாது என்கின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.

தமிழ்நாடு காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநிலமாக உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சுட்டிக்காட்டி வெளியாகியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments