இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கைக்கு எதிரான வழக்கு! நடந்தது என்ன?

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந் தத்தை மீறும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) அண்மையில் தள்ளுபடி செய்தது.

இந்த செய்தி உங்களுக்குள் ஏற்படுத்தும் உணர்வு என்ன? ஒரு நல்ல தேசபக்தராக மகிழ்ச்சி அடைகிறீர்களா? உங்கள் பதில், “ஆம்!” என்றால் நாம் பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள் ஏராளமாக இருக்கின்றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மார்ஷல் தீவுகளுக்கு என்ன பகை? ஏன் இந்த வழக்கு? பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந் துள்ள ஒரு சிறிய தீவுக்கூட்டம்தான் மார்ஷல் தீவுகள். சுமார் 3,000 ஆண்டுகள் வரலாறைக் கொண்ட இந்தத் தீவுகள் பல வல்லாதிக்க நாடுகளால் ஆளப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் ஆதரவில் உள்ளது. அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்தமான அணு ஆயுத பரிசோதனைக்களம் இந்த மார்ஷல் தீவுகள். 1947 – 1958 சிறிதும், பெரிதுமாக 67 அணு ஆயுத பரிசோதனைகளை இந்தப் பகுதியில் அமெரிக்கா நடத்தி இருக்கிறது. அதற்கு வசதியாக இந்தத் தீவுகளில் வசித்த மக்களை 1946ம் ஆண்டில் வேறு இடங்களுக்குத் துரத்தி அடித்திருக்கிறது அமெரிக்கா.

இந்தப் பகுதியில் உள்ள பிகினி தீவில் கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1954ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அமெரிக்கா “பிராவோ” என்ற பெயரில் ஒரு ஹைட்ரஜன் பாம் சோதனையை நடத்தியது. அதிகமில்லை நண்பர்களே! சுமார் 15 டன் அணு ஆயுதத்தை இப்பகுதியில் வெடித்து சோதனை செய்தது. இது 1945ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் ஏவப்பட்ட அணு ஆயுதத்தைப்போல 1000 மடங்கு அதிகமானது. அவ்வளவுதான்.

இந்த அணு ஆயுதச் சோதனை நடந்து சுமார் 15 ஆண்டுகள் முடிந்த பின் இந்தத் தீவுகளில் மனிதர்கள் மீண்டும் குடியேறலாம் என்று அமெரிக்க அறிவியல் துறையினர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தமது தாயகம் திரும்பிய மக்களை மீண்டும் துரத்தி அடித்தது, அமெரிக்கா. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அப்பகுதியில் இன்னமும் எஞ்சி இருக்கும் கதிரியக்கப் பாதிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகளை சரி செய்ய இயலாது – இப் பகுதியில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு எதிர்காலத்திலும் ஏற்படாது என்று ஐக்கிய நாடுகள் அவை 2012ம் ஆண்டில் அறிவித்துள்ளது.

பிகினித் தீவில் நடந்த மிகப்பெரிய அணுஆயுதச் சோதனையின் 60வது நினைவு நாளை நினைவுகூறும் வகையில் மார்ஷல் தீவுகள் குடியரசு இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு எதிரான இந்த வழக்கை பன்னாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) என்றால் என்ன?

பன்னாட்டு நீதிமன்றம் 1945ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் இயற்றி உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் நெதர்லாந்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக இருக்கும் 193 நாடுகளும் இந்த நீதிமன்றத்தை அங்கீகரித்துள்ளன.

ஒரு நாட்டுக்குள் இயங்கும் உள்நாட்டு நீதிமன்றத்திற்கும், பன்னாட்டு நீதிமன்றத் திற்கும் பல முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு முறையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தனி நபர்களும், செயல்படும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் குறிப்பிட்ட உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இந்த நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டால் எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் கட்டாயமாக தங்கள் பதிலை கூற வேண்டும்.

ஆனால் பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு என்பது, வழக்கில் ஈடுபடும் நாடுகளின் ஒப்புதலை பொறுத்தே அமையும். இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்காமல் இருக்கும் உரிமை நாடுகளுக்கு – அரசுகளுக்கு உள்ளது. எனவே உள்நாட்டு நீதிமன்றங்களைப் போல் இந்த பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க இயலாது. நாடுகளுக்கு இடையே உள்ள பிணக்குகளை இணக்கமாக தீர்ப்பதற்காகவே இந்த பன்னாட்டு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்ற புரிதலுடன் இந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும். இந்த பன்னாட்டு நீதிமன்றத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 நீதிபதிகள் நிரந்தரப் பணியில் இருப்பார்கள். இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தல்வீர் பண்டாரி என்பவர் இந்த பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக தற்போது பணியாற்றி வருகிறார். குறிப்பிட்ட வழக்கின் தன்மைக்கேற்ப, தேவைக்கேற்ற எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படும்.

மார்ஷல் தீவுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

மார்ஷல் தீவுகள் குடியரசு இந்த வழக்கில் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, பாகிஸ் தான், இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா, கொரியா, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய 9 நாடுகளின் மீதும் தொடுத்திருந்தது. அணு ஆயுத பரவல் ஒப்பந் தத்தில் கையப்பம் இட்டுள்ள நாடுகள் அந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறுகின்றன என்பதே மார்ஷல் தீவுகள் முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டு.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்  (Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) 1970ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அணு ஆயுதப் பெருக்கத்தை தடை செய்தல், அணு ஆயுதங்களை கைவிடுதல், அணுசக்தியை அமைதி(ஆக்க) வழியில் பயன்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லாதிக்க நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை தயாரிக்கவும் வைத்திருக்கவும் முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உட்பட 190 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையப்பம் இட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், தெற்கு சூடான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையப்பம் இடவில்லை. வடகொரியா இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் கையப்பம் இட்டிருந்தாலும் பிற்காலத்தில் ஒப்பந்த விதிகளை மீறி வெளியேறி விட்டது. உலகில் எந்த மூலையில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டாலும் அது மனித குலத்தின் தலையின் மீது தொங்கும் வாளைப் போன்று ஆபத்தானது. இதனால் புவி வெப்பநிலை மிகவும் பாதிக்கப்படுவதுடன் பூவுலகின் பாதுகாப்பு அரணாக இருக்கும் ஓஸோன் படலத்தையும் சீரழிக்கும். இத்தகைய அணுஆயுதத் தாக்குதல் உலகின் அரசியல், சட்டம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களை மிகவும் பாதிக்கும்.

இந்தியா அணு ஆயுதங்களை தங்கள் தேசப்பாதுகாப்பின் முக்கியமான அம்சமாக அறிவித்துள்ளது. உலகில் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை கைவிடும்வரை இந்தியாவில் அணு ஆயுதத் தயாரிப்பும் சோதனைகளும் தொடரும் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த 2003 ஆண்டு இந்தியாவின் கேபினட் கமிட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்தியா மீதோ, இந்தியப் படைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் பதில் தாக்குதலாக பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணுஆயுதத் தாக்குதலை தொடுக்க இந்தியா தயங்காது என்று கூறப் பட்டுள்ளது. இந்தியா மீதோ, இந்தியப் படைகள் மீதோ உயிரியல் ஆயுதங்களோ, வேதிப்பொருளால் ஆன ஆயுதங்களோ ஏவப்பட்டாலும் பதிலுக்கு இந்தியா அணு ஆயுதங்களே ஏவும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அணு ஆயுதங்கள் தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களின் அளவு குறித்தோ, அதன் முதலீட்டுத் தொகை குறித்தோ அதிகாரபூர்வமான தகவல்கள் கிடைப்பதில்லை. ஆனால் இந்தியா தரை வழியாகவும், கடல் வழியாகவும், கடலுக்கடியிலும், வான் வழியிலும் அணு ஆயுதங்களை செலுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான பல்வேறு வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கோடிக் கணக்கான மக்களைக் கொண்ட நகரங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த இருநாடுகளும் அணு ஆயுதப்போரில் ஈடுபட்டால் அந்தப் போர் காரணமாக கோடிக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு முடிவதில்லை. இந்த அணு ஆயுதப்போரின் காரணமாக ஏற்படும் கரும்புகை அண்ட வெளியில் பரவி இந்த பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மரண அபாயத்தை ஏற்படுத்தும். இந்த கரும்புகை சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும். இதனால் புவியின் வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும். ஓஸோன் படலத்தில் வெப்பம் அதிகமாகி பழுதடையும். இதைத் தொடர்ந்து சூரியனிலிருந்து வெளியாகும் ஆபத்தான அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாக புவியை வந்தடையும். இதனால் கடலிலும், நிலத்திலும் வாழும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு நோய்கள் உருவாவதுடன், கடும் உணவுப் பஞ் சமும் ஏற்படும்.

இதனால் மார்ஷல் தீவின் மக்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படும். இத்தீவுகளில் விளைநிலங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. அந்த நிலமும் அமெரிக்கா நடத்திய அணுஆயுத சோதனைகளால் அணுக்கதிரியக்க பாதிப்பு அடைந்துள்ளது. எனவே மார்ஷல் தீவு மக்கள் உணவுத் தேவைக்காக கடலையும், அண்டை நாடுகளையுமே நம்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த பூவுலகில் எங்கு அணு ஆயுதப்போர் நடந்தாலும் அது மார்ஷல் தீவு மக்களை கடுமையாக பாதிக்கும்.

எனவே அணு ஆயுத சோதனைகளின் விளைவுகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கும் மார்ஷல் தீவு குடிமக்களின் சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையப்பம் இடாவிட்டாலும், அந்த ஒப்பந்தக் கூறுகளை நடைமுறைப்படுத்த தொடர்ந்து தவறி வருகிறது என்று அறிவிக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அழிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மார்ஷல் தீவு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர் தரப்பினராக குறிப்பிடப் பட்டுள்ள ஒன்பது நாடுகளும் தங்கள் பதிலை அளிக்குமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கவில்லை. பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தொடர்புடைய நாடுகளின் ஒப்புதலின் பேரில் மட்டுமே உறுதி செய்யப்படுவதால் இந்த நாடுகளுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாது. சீனா இந்த வழக்கின் விசாரணைக்கு உட்பட முடியாது என்று அறிவித்து விட்டது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பதில் மனு தாக்கல் செய்தன. இந்த நாடுகள் கூறிய
பதிலுரையிலும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பன்னாட்டு நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தியே பதில் மனு பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக இந்தியா அளித்துள்ள பதிலுரையில், “அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த”த்தில் இந்தியா கையெழுத்து இடாத நிலையில் அதன் கூறுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அணு ஆயுதத்தை தாம் முதலில் பயன்படுத்துவதில்லை என்ற சுயக்கட்டுப்பாட்டுடன் இந்தியா இருப்பதால் இந்தியாவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப் பிக்கப்பட வேண்டியதில்லை என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்த வழக்கில் எதிர் தரப்பினராக குறிப்பிடப்பட்டுள்ள ஆறு நாடுகள் வழக்கின் விசாரணைக்கு உட்படாத நிலையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் தடை உத்தரவு பிறப்பிப்பது நீதிக்கு எதிரானதும், நடைமுறைப்படுத்த முடியாததாகவும் அமைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக இந்தியாவுக்கும், மார்ஷல் தீவுக்கும் இடையே சச்சரவுகள் இல்லாத நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்று இந்தியா தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பன்னாட்டு நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட ஆயம், இந்தியா தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு மார்ஷல் தீவுகள் தொடுத்த வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

நம் முன் உள்ள கேள்விகள்?

மார்ஷல் தீவு தொடுத்த வழக்கில் இந்தியா முன் வைத்த சட்டரீதியான அம்சங்கள் நீதிமன்றத்தை திருப்தி அடைய வைத் திருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் மார்ஷல் தீவு தொடுத்த கேள்விகள் அனைத்தும் விடை அளிக்கப்படாமலேயே உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு அணு ஆயுதங்களைப் பெருக்கி வருகின்றன. இருநாடுகளிடமும் நூறுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களுக்காகவே அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் பல கோடி டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மனதில் கொண்டு இந்த ஆபத்தான போட்டியை ஆதரித்து வருகின்றன. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையில் எந்த நேரத்தில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந் தாலும் பாதிக்கப்படப்போவது நாம்தான். நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு அமைப் புகள் நமது கருத்தை எந்த விதத்திலும் பொருட் படுத்தாது நமது தலையின் மீது அணு ஆயுதம் என்ற ஆபத்தான கூரிய வாளைத் தொங்க விடுகின்றன.

முதல் அணு ஆயுத தாக்குதலை யார் தொடுத் தாலும் உடனடியாக அணு ஆயுதப்போர் மூளும் என்பதில் ஐயமில்லை. இதில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடை வார்கள் என்று உடனடியாக முடிவு செய்ய இயலாது. ஆனால் இப்போரின் விளைவாக உடனடி யாகவும், நிரந்தரமாகவும் பாதிக்கப்படப் போவது குறிப்பிட்ட நாடுகளின் மக்கள் மட்டுமல்ல. உலகின் பல பகுதிகளிலும் உள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவையும் பாதிக்கப்படும். ஏனெனில் அணு ஆயுதம் பயன் படுத்தப்பட்டால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் நச்சுத் தன்மையை பெற்றுவிடும். புவியின் சில பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். சில பகுதி களில் குளிர் அதிகரிக்கும். சூரியனிலிருந்து வெளியாகும் ஆபத்தான அணுக்கதிரியக்கம் பூமியை நேரடியாக தாக்கும். பல விதமான நோய்களும், மரணமும், கடுமையான உணவுப் பஞ்சமும் உருவாகும். இந்நிலையில் நமக்கு அணு ஆயுதங்கள் தேவையா? என்ற கேள்வி எழுப்பப்படவேண்டும்.

தேசபக்தி அல்லது தேசப்பாதுகாப்பை ஆயுதக் குவிப்பு என்ற அளவுகோலால் அளக்கக் கூடாது. குடிமக்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமே
ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவுகோலாக இருக்கமுடியும். நல்ல வாழ்க்கைத் தரம் அமையப்பெற்ற குடிமக்கள் மட்டுமே நாட்டுப்பற்றுடன் வாழமுடியும்.

ஆனால் தேசப் பாதுகாப்பு, தேசபக்தி என்ற சொற்றொடர்களின் அர்த்தமற்ற ஆதிக்கத்தில் நமது நியாயமான கேள்விகளும், அச்சங்களும் புறந்தள்ளப்படுகின்றன. மேற்கூறிய வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு மார்ஷல் தீவுகளுக்கும், இந்தியாவுக்கும் எந்த சச்சரவும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் அணு ஆயுதச் சோதனைச் சாலையில் இன்றளவும் தொடரும் துன்பங்களுடன் வாழ்ந்து வரும் அத்தீவுவாசிகள் உலகில் உள்ள அனைத்து மனிதர்கள் சார்பாகவும் குரல் கொடுப்பது தவறா? இந்தப் பூவுலகில் மனிதர்கள் வாழ்ந்தால் மட்டுமே நாடுகளும், அரசுகளும் இயங்க முடியும். மனிதர்களே இல்லாத நிலையில் நாடுகளும் அரசுகளும் இருக்க முடியாது. எனவே மக்களுக்காகவே நாடும், அரசும் இயங்க வேண்டும். ஆனால் தற்போது நாடு, அரசு இவற்றின் பெயரால் மக்களின் உயிரை, வாழ்க்கையை, பாதுகாப்பை பணயம் வைக்கும் செயல் நடைபெற்று வருகிறது.

நாட்டுப் பற்றோடு இந்திய ஆட்சியாளர்களை ஆதரிக்கப் போகிறோமா? அல்லது மனித நேயத்துடன் மார்ஷல் தீவுவாசிகளை ஆதரிக்கப் போகிறோமா?

– வழக்கறிஞர் பி. சுந்தரராஜன்

‘பூவுலகு’ 2018 பிப்ரவரி  இதழில் வெளியான கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments