கும்மிடிப்பூண்டியில் நீர்நிலைகளை அழித்து, வேளாண் நிலங்களில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதைக் கைவிடுக

Image: Nidharshana

திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி கிராமங்களுக்குட்பட்ட 215.834 எக்டர் பரப்பளவிலான பகுதியில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சார்பில் தொழிற்பூங்கா ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இத்தொழிற்பூங்காவிற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடமிருந்து சிப்காட் நிறுவனம் 22.04.2024 அன்று பெற்றிருந்தது.

இந்த தொழிற்பூங்காவிற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை சிப்காட் நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் 8(b) Townships/ Area Development Projects /Rehabilitation Centres எனும் பிரிவின்கீழ் பெற்றிருந்தது. இதன் காரணமாக இத்திட்டத்திற்கு மாநில அளவிலேயே, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதியை சிப்காட் நிறுவனம் பெற்றுவிட்டது. இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். இத்தொழிற்பூங்காவிற்கான விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் 7(c) Industrial estates/parks/ complexes/areas, exportprocessing Zones (EPZs), SpecialEconomic Zones(SEZs), BiotechParks, Leather Complexes எனும் பிரிவின்கீழ்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஏனெனில் இத்தொழிற்பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்தப்படும் இடங்களை ஒட்டியுள்ள அதே கிராமங்களைச் சேர்ந்த மற்றும் சில கிராமங்களின் இடங்களில் சிப்காட் நிறுவனம் இன்னும் சில தொழிற்பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக சிப்காட் நிறுவனமானது  மாநெல்லூர், சூரப்பூண்டி கிராமங்களுக்குட்பட்ட 279.99 எக்டர் பகுதியில் அதிக மாசு உமிழும் தொழிற்சாலைகள் அமையும் வகையிலான ஒரு தொழிற்பூங்காவிற்கு (சிப்காட் மாநெல்லூர் கட்டம் I) சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் 7(c) பிரிவின் கீழ் விண்ணப்பித்து, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து 10.11.2020 அன்று சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது.

இத்திட்டத்தின் அமைவிடமானது சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திலிருந்து 10 கி.மீ. எல்லைக்குள் அமைந்திருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்குகையில் 10கி.மீ சுற்றளவில் உள்ள பறவைகள், விலங்குகள், காடுகளுக்கு இத்திட்டத்தால் ஏற்படும் தாக்கம் குறித்து முழுமையாக ஆராயமால் வழங்கியது. இதனடிப்படையிலான வழக்கு ஒன்றில் 30.09.2022ல் தீர்ப்பு வழங்கிய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அவ்வனுமதியை நிறுத்தி வைத்து ஒரு உத்தரவை வழங்கியிருந்தது.

மேலும் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து சிப்காட் நிறுவனமானது சூரப்பூண்டி, மாநெல்லூர், மாதர்பாக்கம், வாணியமல்லி, சானாப்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 984.6002 எக்டர் பரப்பளவிலான பகுதிகளைக் கொண்டு சிப்காட் மாநெல்லூர் கட்டம் III அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மேற்கூறிய கிராமங்களில் வசிக்கும் பலரது நிலங்கள் மற்றும் வீடுகளைக் கையகப்படுத்துவது தொடர்பான விளக்கம் கோரும் அழைப்பாணை மற்றும் விசாரணை நடத்துவதற்கான அழைப்பாணையை கடந்த மாதம் வரை வழங்கி வந்துள்ளது.

மேற்கூறிய விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் கும்மிடிப்பூண்டி தாலுகாவின் மாநெல்லூர், சூரப்பூண்டி, மாதர்பாக்கம், வாணியமல்லி, சாணாப்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய அரசு நிலங்கள், தனியார் பட்டா நிலங்களில் 3 சிப்காட் திட்டங்களை சிப்காட் நிறுவனம் அமைக்கத் திட்டமிடுவது தெளிவாகத் தெரிகிறது. இந்த மூன்று திட்டங்களையும் ஒரே திட்டமாக்கி சுற்றுச்சூழல் அனுமதி கோரினால் இத்திட்டத்தால் ஏற்படும் Cumulative Impact Assesment அதாவது தொழிற்பூங்காவை இவ்வளவு பெரிய பரப்பளவில் அமைப்பதால் சூழலுக்கும், சமூக அளவிலும் ஏற்படும் மொத்த தாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உண்டாகும். மேலும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியது வரும்.

இதனைத் தவிர்க்கவே குறிப்பிட்ட கிராமங்களில், ஒரே தொடச்சியான நிலப்பரப்பில் அமைக்க திட்டமிடப்பட்ட ஒரு சிப்காட் தொழிற்பூங்காவை சிறிய அளவில் 3 அல்லது 4 தொழிற்பூங்கா திட்டங்களாகப் பிரித்து தனித்தனியாக சுற்றுச்சூழல் அனுமதி பெற சிப்காட் நிறுவனம் முயன்று வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் 25.05.2024 அன்று உத்தரவிட்ட

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சூரப்பூண்டி, மாநெல்லூர் கிராமங்களில் 215.834 எக்டர் பரப்பளவிலான தொழிற்பூங்கா அமைக்க, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடமிருந்து சிப்காட் நிறுவனம் 22.04.2024 அன்று பெற்ற சுற்றுச்சூழல் அனுமதியானது ஒட்டுமொத்த தாக்கல் குறித்த ஆய்வுகள் ஏதுமின்றி வழங்கப்பட்ட அனுமதி என்பதால் அதனடிப்படையில் திட்டத்தை சிப்காட் தொடரும் பட்சத்தில் அந்த சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைக்க நேரிடும் எனத் தெரிவித்தனர்.

22.04.2024ல் தொழிற்பூங்காவிற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பாகவே அந்த இடத்தில் வோல்டாஸ் நிறுவனத்திற்கு 150 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தயாரிப்பு நிறுவனம் தனது கட்டுமானத்தையும் தொடங்கியுள்ளது. இந்த சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டு தொடர தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

மேலும் சிப்காட் நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் மேற்கொண்டு வரும் தொழிற்பூங்கா பணிகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை துளியும் இல்லை. குறிப்பாக, தமிழ்நாடு தொழில்துறையின் 2023-2024 கொள்கை விளக்கக் குறிப்பில் தற்போது மாநெல்லூர் நிலை I-ல் 692 ஏக்கரிலும், மாநெல்லூர் நிலை II-ல் 1,348 ஏக்கரிலும் தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருவதாகவும் 2,433 ஏக்கர் பரப்பளவில் மாநெல்லூர் நிலை III எனும் புதிய தொழிற்பூங்கா தொடங்க உச்சேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு தொழில்துறையின் 2024-2025 கொள்கை விளக்கக் குறிப்பில் தற்போது மாநெல்லூரில் ஒரே கட்டமாக 2040 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைந்திருப்பதாகவும், 2433.39 ஏக்கரில் மாநெல்லூர்(விரிவாக்கம்) எனும் தொழிற்பூங்கா வரவிருப்பதாகவும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பின் தரவுகள் முரணாக உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கோரப்படும் திட்டங்களுக்கும், கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள திட்டங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் நிலமும் தொழிற்பூங்கா திட்டத்தில் போய்விடுமோ எனும் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மாநெல்லூர், சூரப்பூண்டி, மாதர்பாக்கம், சாணாப்புதூர், வாணியமல்லி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் இரண்டு போகம் விவசாயம் செய்து மிகவும் தற்சார்பான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நெல், எள், நிலக்கடலை, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். பல இடங்களில் மாந்தோப்புகளைக் காண முடிகிறது. மல்லிப்பூ உள்ளிட்ட பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது. 5 கிராமங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உள்ளன. சிப்காட் மாநெல்லூர்  தொழிற்பூங்கா திட்டத்தால் வீடு, நிலம் மற்றும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை இழந்து அகதிகளாக வேறு இடங்களுக்குச் செல்லும் நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளையும் ஓடைகளையும் நம்பியே விவசாயம் மேற்கொள்ளும் மக்கள் தங்கள் நீர்த்தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் கூட தோண்டியது இல்லை என்று கூறுகின்றனர். அந்தளவிற்கு நீர்வளமிக்க பகுதியாக உள்ளது சிப்காட் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்பகுதிகள். மேற்கூறிய 5 கிராமங்களில் மட்டும் நாம் மேலோட்டமாக எடுத்த கணக்கெடுப்பின்படி, மாதர்பாக்கம் ஏரி, மாநெல்லூர் பெரிய ஏரி, மாநெல்லூர் புது ஏரி, பூவலாம்பேடு ஏரி, சாணாப்புதூர் ஏரி, சூரப்பூண்டி ஏரி, வாணியமல்லி ஏரி உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தையும் அழித்து அதில் சிப்காட் அமைப்பது ஏற்புடையதல்ல.

கும்மிடிப்பூண்டியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலைகளால் அதன் சுற்றுச்சூழலும் பொதுமக்களின் சுகாதாரமும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் மேற்கொண்டு அதே பகுதியில், குறிப்பாக வேளாண்மையும் கால்நடையும் செழிப்பாக இருக்கும் இடங்களில் சிப்காட் அமைப்பது எந்த வகையிலும் வளர்ச்சியின் குறியீடாகாது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிரம் ஏற்கெனவே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியைக் கடுமையாக பாதித்து வரும் நிலையில் தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை வேளாண் நிலத்திலும் நீர்நிலைகளிலும் அமைக்கத் திட்டமிடுவது தவறான முடிவாகும். கும்மிடிப்பூண்டியில் மேற்கொண்டு சிப்காட் அமைக்கும் பணிகளை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கோருகிறோம்.

 

Land Notice

 

NGT 2024_compressed

 

NGT 2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments