சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாங் புயலின் தாக்கத்தால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. எண்ணூர் கழிமுகத்தில் 4.12.2023 அன்று மணலி தொழிற்பேட்டை வழியாக வரும் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் கலந்து வரத் தொடங்கின.
இக்கழிவுகள் மழைவெள்ள நீரில் கலந்து நீர்தேங்கிய இடங்களில் உள்ள வீடுகள், கடைகள், மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட அனைத்திலும் படிந்தன.
இதன் காரணமாக கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுகம், தழங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கழிவுகள் படிந்தன. மீன்கள், நண்டுகள், பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் செத்து மிதந்தன. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திலிருந்துதான் இக்கசிவு ஏற்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றம் சாட்டியிருந்தது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் மிக்சாங் புயலின்போது எண்ணூரில் சி.பி.சி.எல்.நிறுவனத்திலிருந்து எண்ணெய் கசிவு கலந்த விவகாரத்தில் ரூ. 73.68 கோடி இழப்பீடு செலுத்த இறுதி உத்தரவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்திருந்தது.
இவ்வுத்தரவை எதிர்த்து சி.பி.சி.எல். நிறுவனம் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இம்மனு மீதான விசாரணை 19.03.2025 அன்று நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சி.பி.சி.எல். சார்பில் வாதாடிய வழக்கறிஞர் எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாகக் கணக்கிடுவதற்குள்ளாகவே இழப்பீடு செலுத்துவதற்கான உத்தரவை மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்துள்ளதாகவும் மாசு கட்டுப்பாடு வாரியம் சமர்ப்பித்த அறிக்கையில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் கூறினார்.
இதனை மறுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் முழுமையான ஆய்வுகளுக்குப் பின்னரே இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது. எனினும் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான இழப்பீடாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ. 38,24,29,198ல் பாதி தொகையை வங்கி உத்தரவாதமாக சி.பி,சி,எல். நிறுவனம் 4 வாரங்களில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
– செய்திப் பிரிவு
StayCompensation order