சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் அலுவல் உத்தரவுகள்: NGT அதிரடித் தீர்ப்பு.

Aerial view of coal power plant high pipes with black smoke moving up polluting atmosphere.

சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளாமலே ஒரு அனல் மின் நிலையத்தின் நிலக்கரி பயன்பாட்டை உள்ளூர் நிலக்கரியிலிருந்து வெளிநாட்டு நிலக்கரிக்கோ அல்லது இதற்கு நேர்மாறாகவோ மாற்றிக்கொள்ளலாம் என்கிற ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அலுவல் உத்தரவுகளை(Office Memorandums) ரத்து செய்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பலிகொடுத்து தொழிற்சாலை நடவடிக்கைகளுக்குச் சாதகமாக சில அலுவல் உத்தரவுகளை ஒன்றிய அரசு பிறப்பிப்பதாகப் பசுமைத் தீர்ப்பாயம் கடிந்துள்ளது.

இந்தியாவில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு பல அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனல் மின் நிலையங்களுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் கீழ் உரிய சுற்றுச்சூழல் அனுமதி (Environment clearance) பெறுவது அவசியமாகும். இவ்வனுமதியைப் பெறுவதற்கு முன்பாகச் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வறிக்கையில் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி எந்தச் சுரங்கத்திலிருந்து பெறப்படும், அது எப்படி அனல் மின் நிலையத்திற்குக் கொண்டு வரப்படும், அது உள்நாட்டு நிலக்கரியா அல்லது வெளிநாட்டு நிலக்கரியா மற்றும் அதன் கலோரி மதிப்பு என்ன, எவ்வளவு சாம்பலை உருவாக்கும், எவ்வளவு நச்சு வாயுக்களை உமிழும் என்பது குறித்தான தரவுகள் இடம்பெற்றிருக்கும்.

இத்தரவுகளின் அடிப்படையில்தான் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு அனல் மின் நிலையத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். சுற்றுச்சூழல் அனுமதி பெற்றவுடன் ஒரு அனல்மின் நிலையமானது உள்நாட்டு நிலக்கரியிலிருந்து வெளிநாட்டு நிலக்கரிக்கோ அல்லது வெளிநாட்டு நிலக்கரியிலிருந்து உள்நாட்டு நிலக்கரிக்கோ மாற விரும்பினால் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் (Expert Appraisal committee- EAC) விண்ணப்பிக்க வேண்டும். அவ்விண்ணப்பத்தை EAC விரிவாகப் பரிசீலித்து உரிய திருத்தங்களை வழங்கும். இந்நடைமுறைகள் நிறைவடைய 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.

இது அனல் மின் நிலையங்களுக்கு லாபகரமாக இருக்காது என்பதால் 11.11.2020 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அலுவல் உத்தரவைப் பிறப்பித்தது. அவ்வுத்தரவின்படி நிலக்கரியை மாற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளாமலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலுமே மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும். இது எவ்வித சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கங்களையும் கணக்கில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பதால் இதை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர் சரவணன் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், நிலக்கரியை மாற்ற முயலும் அனல் மின் நிலையம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் கீழான நடைமுறைகளில் இருந்து தப்பிக்க ஏதுவாக இந்த அலுவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அலுவல் உத்தரவானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் பிரிவு 3 மற்றும் 5 வழங்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாகும். இவ்வதிகாரமானது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் தவிர ஏற்கெனவே இருக்கும் ஒழுங்குமுறைகளை நீர்த்துப் போகப் பயன்படுத்தப்படக் கூடாதென மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ்வரன் வாதிட்டார்.

அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை மாற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளாவிட்டால் உருவாகும் பாதிப்புகள் குறித்து மனுதாரர் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டிருந்தார். அவை பின்வருமாறு;

• வெளிநாட்டு நிலக்கரிக்குப் பதிலாக உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தினால் அதிக நிலக்கரியை எரிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் வெளிநாட்டு நிலக்கரியுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு நிலக்கரியின் கலோரி மதிப்பு குறைவு. அதிக நிலக்கரி எரிக்கப்பட்டால் அதிக சாம்பல் வெளியாவதோடு நச்சுமிகு வாயுக்களும் அதிகம் உமிழப்படும்.
• குறிப்பாக நிலக்கரியை மாற்றுவது சல்பர் டை ஆக்சைடு (SO2), நைட்ரஜன் ஆக்சைடு (Nox), கார்பன் மோனாக்சைடு (CO), காஅர்பன் டை ஆக்சைடு (CO2), பாதரசம் (HG), ஆர்சனிக் (As), லெட் (Pb) மற்றும் நுண்துகள் மாசு ஆகியவற்றின் வெளியேற்றத்தை அதிகரிக்கும்.
• இம்மாற்றங்களுக்கு ஏற்ப புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு செய்வதிலிருந்து அனல் மின் நிலையங்கள் தப்புவதற்கு ஒன்றிய அரசின் அலுவல் உத்தரவு உதவுகிறது.
• சுற்றுச்சூழல் பாதுகாப்பை விட வணிக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அலுவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை விட தொழில்துறைக்குச் சாதகமான அணுகுமுறையை மட்டுமே பிரதிபலிக்கிறது.

மனுதாரர் முன்வைத்த வாதங்களுக்குப் பதிலளித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், அனல் மின் நிலையங்களுக்கு எவ்வித விலக்கும் இவ்வுத்தரவின் வாயிலாக வழங்கப்படவில்லை என்றும் கூடுதல் நிபந்தனைகள் பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தது. மேலும் 06.12.2023 மற்றும் 07.01.2025 தேதிகளில் நிலக்கரி மாற்றம் தொடர்பாக மேலும் 2 அலுவல் உத்தரவுகளை ஒன்றிய அரசு பிறப்பித்திருந்தது. இவ்வுத்தரவுகளும் அனல் மின் நிலையங்களுக்குச் சாதகமாகவே இருந்தன.

இம்மனுவை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு 28.04.2025 அன்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. நிலக்கரியின் ஈரப்பதம், கலோரி மதிப்பு,
அதிகரிக்கும் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவை கணிசமாக உமிழ்வு மற்றும் வெப்பத் திறனில் தாக்கம் ஏற்படுத்தும் எனக் கூறிய தீர்ப்பாயம் நிலக்கரி மாற்றம் தொடர்பாக அனல் மின் நிலையங்களுக்குச் சாதகமாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் 11.11.2020 , 06.12.2023 மற்றும் 07.01.2025 தேதிகளில் பிறப்பித்த அலுவல் உத்தரவுகளை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதன்மையான அக்கறையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த தீர்ப்பாயம், வணிகத்தின் எளிமை மற்றும் செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒழுங்குமுறை மாற்றங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மீற அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. ”இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் பெரும்பாலும் சாம்பல் அதிகம் மிஞ்சுவதில்லை, ஆனால் சல்பர் அதிகமாக உள்ளது என்று குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேசமயம், உள்நாட்டு நிலக்கரி, அதிக நுண்துகள் மாசின் உமிழ்வுக்கும், சாம்பல் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. அனல் மின் நிலையங்களுக்கு அலுவல் உத்தரவின் வாயிலாக வழங்கப்பட்ட விலக்கானது அறிவியல் யதார்த்தங்களை கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது” எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்தீர்ப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை அலுவல் உத்தரவுகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள் வழியாக நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றிய அரசின் அணுகுமுறை குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

”அலுவல் உத்தரவுகள் சட்டமியற்றப்பட்ட விதிகள் கிடையாது, அவை பொதுமக்கள் கருத்துக் கேட்பு, பங்குதாரர்களின் கருத்து ஆகியவற்றை உள்வாங்கி சட்டங்களைப் போல இயற்றப்படுவதில்லை. அலுவல் உத்தரவுகள் எவ்வித அறிவியல் ஆய்வுகளும், மதிப்பீடுகளுமின்றி வெளியிடப்படுகின்றன. நிர்வாக அளவில் மட்டுமே சட்டத் தன்மையைக் கொண்ட அலுவல் உத்தரவுகளின் தாக்கம் சட்ட ஆணைகளிலிருந்து விலக்குகளை உருவாக்குகிறது. அலுவல் உத்தரவுகள் வாயிலாக ஒழுங்குமுறை வரம்புகளில் உருவாக்கப்படும் இம்மாற்றம் சட்டப்பூர்வ கோட்பாட்டிற்கு முரணானது” எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் உள்ள கட்டமைப்பு அளவிலான சிக்கல் மற்றும் துணைச் சட்டங்கள் மற்றும் நிர்வாக அறிவுறுத்தல்களை அளவுக்கதிகமாக சார்ந்திருப்பதை மறு ஆய்வு செய்வதற்கான சிறந்த உதாரணம் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள தீர்ப்பாயம் நடைமுறையில் சுற்றுச்சூழல் சட்டம் பெரும்பாலும் அறிவிக்கைகள், வழிகாட்டுதல்கள், அலுவல் உத்தரவுகள், குறிப்பாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளால் இயக்கப்படுகிறது, இவை எதுவும் சட்டமன்ற மேற்பார்வையின் கீழ் வராது என வேதனை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவீனப்படுத்தப்படும்போது, நிறுவன பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் இல்லாமல் போவதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்களை வணிக நோக்கில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகத் திருத்தும் பணிகளை அண்மைக் காலமாக ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. திருத்த முடியாத சட்டங்களை அலுவல் உத்தரவுகள் வாயிலாக நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சூழல் விரோத நடவடிக்கைகளுக்கு குட்டு வைக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

coal source judgement

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments