பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம்-2006ன் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 5,384 பட்டா கோரப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பரிய வனவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006′ -ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. சுருக்கமாக, இது ‘வன உரிமைச் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி 2005 டிசம்பா 13-ல் தேதிக்கு முன்பாகக் காடுகளில் வசிக்கும், விவசாயம் செய்துவரும் பழங்குடியினருக்கு அந்த நிலங்கள் பட்டாவாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களது உரிமைகள் அங்கீகரிக்கப்படாத யாரும் வனப்பகுதிக்குள் வசிக்க முடியாது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.
31.01.2025 நிலவரப்படி நாடு முழுவதும் பட்டா கோருதல் தொடர்பாக 4,902,427 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 715,035 மனுக்கள் நிலுவையிலிருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 33,119 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 5,384 மனுக்கள் நிலுவையிலிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.