தெளிவான சிந்தனையும் தீர்க்கமான பார்வைகளும் கோட்பாடுகளும் கொண்ட – சமூகத்தில் பெரும்பாலான மனிதர்களால் அறிவுஜீவிகளாகவும் துறைசார் வல்லுநர்களாகவும் கருதப்படும் மனிதர்களின் சிந்தனைகள், நம்முடைய நிலைப்பாடுகளோடு வலுவாக மாறுபடும்போது அதனை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியாது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின்கீழ் காலநிலை மாற்றத்தை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளவே முடியாது என்ற புரிதலுக்கு நான் வந்தடைந்தபோது, அந்தப் பொருளாதார அமைப்பிற்குள்ளேயே தீர்வுகளைத் தேடும் – நான் மதிக்கும் மனிதர்கள் அல்லது பொருளாதாரத் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துக்களை எதிர்கொள்வது எனக்கு அதிகச் சவாலானதாக இருந்தது. அவர்களுடைய தீர்க்கமான கருத்துக்களைக் கேட்கும்போது, “நான் சொல்வது ஒருவேளை தவறாக இருக்குமோ?” என்ற நெருடல் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.
பொதுவாக, மனிதர்கள் தங்களுடைய சிந்தனைகளை வலுப்படுத்தும் கருத்துகளுக்கே விரும்பிச் செவிமடுக்கின்றனர். மாற்றுக் கருத்துகளுக்குச் செவிமடுப்பது அச்சம் தருவதாகவோ அல்லது சிலநேரங்களில் எரிச்சலூட்டுவதாகவோ இருக்கிறது. மனித மூளையானது பகுத்தறியும்போது தனக்கு ஏற்படும் ஆற்றல் விரையத்தைத் தவிர்க்கப் பல நேரங்களில் எளிய முன்முடிவுகளை இறுகப் பற்றிக்கொள்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றாலும், என் ஆழமான நம்பிக்கைகளை உடைத்து நொறுக்கிவிடக்கூடும் என்று அஞ்சத்தக்கச் சில கருத்துக்களை நெருங்கிச் சென்றிருக்கிறேன்.
புறவுலக பெளதீக சாகசங்களில் எந்த ஒட்டுதலும் இல்லையென்றாலும் அகத்திற்குள்ளான இந்தச் சாகசப் பயணங்கள் எனக்கு அதிகமாய் உற்சாகமூட்டியிருக்கின்றன. இப்படித்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘பின்தொடரும் இருளின் நிழல்’ என்ற கம்யூனிச அரசியலை விமர்சனத்திற்குப்படுத்தும் நூலைச் சுவாரசியமாய் வாசித்து முடித்திருந்தேன். (இந்த நூலை நீங்கள் விமர்சிக்கலாம்; முழுதும் முரண்படலாம் ஆனால், புறந்தள்ளிவிட முடியாது என்று நான் கருதுகிறேன்) உண்மையிலேயே இத்தகைய முரண்பட்ட வாசிப்புகள் நமக்குப் புதிய திறப்புகளைத் தருகின்றன. அவை இருதரப்பின் போதாமைகளை உணரவோ மேம்படுத்தவோ வாய்ப்பளிக்கும் அர்த்தமுள்ள செயல்பாடாக இருந்திருக்கின்றன.
இப்படியான வாசிப்புகளின் தொடர்ச்சியாகவே நான் ரகுராம் ராஜனின் (மற்றும் ரோகித் லம்பா எழுதிய) “பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்: இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் குறித்த ஒரு புதிய பார்வை” என்ற புத்தகத்தை வாசிப்புக்குத் தேர்ந்தெடுத்தேன். பொருளாதாரப் பேராசிரியராக இருந்து, இந்தியாவின் பொருளாதார ஆலோசகராகவும் திகழ்ந்த பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து – பா.ஜ.க. அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் முரண்பட்டுத் தனது பதவியைத் துறந்து வெளியேறியவர். அதனாலேயே வெகுஜன மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர்.
அடிப்படையிலேயே முதலாளித்துவப் பொருளாதாரம்தான் இங்கிருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் – குறிப்பாகச் சூழல் பிரச்சினைகளுக்குக் காரணம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட எனக்கு, முதலாளித்துவச் சித்தாந்தத்திற்கு அதைவிடச் சிறந்த மாற்றுகள் இல்லை என்பதுபோன்று நடந்துகொள்பவர்கள் – அதற்குள்ளேயே ‘எல்லோருக்குமான நல்வாழ்வை’ அடைய முடியும் என்று நம்புபவர்களின் புரிதலை ஆழமாக அறிய இந்தப் புத்தகம் உதவுமென்றும் அதன்மூலமாக என் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவோ அல்லது செழுமைப்படுத்திக் கொள்ளவோ முடியுமென்றும் தோன்றியது.
பா.ஜ.க.வோ அல்லது ரகுராம் ராஜனோ அல்லது ரகுராம் ராஜனைத் தேர்ந்தெடுத்திருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசோ இவர்கள் அனைவரின் பாதையும் முதலாளித்துவப் பொருளாதாரமாகவே இருந்தாலும் முதல் தரப்பின் கொள்கைகளை மோசமானதாகக் கருதும் பிந்தையவரிடம், அப்படி என்ன ‘நல்லது’ இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் பேராவல் எனக்குள் ஏற்பட்டிருந்தது. இந்தப் புத்தகத்தை முன்முடிவுகளுடன் கூடிய குதர்க்கமான புறக்கணிப்பு மனநிலையின்றித் திறந்த மனதுடன் அணுகுவது என்று நான் முடிவு செய்தேன். என்றாலும், முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்த என்னுடைய முடிவுகள், குறைந்தபட்சம் சமகாலச் சூழல் பிரச்சினைகளின் பின்னணியிலேனும் சற்று கறாரானதாகவே இருந்தன.
அப்துல் கலாமின் கனவுகளைப் போலவே ரகுராம் ராஜனின் கனவுகளும் அவர்களின் நிலையிலிருந்து நோக்கும்போது நேர்மையானவை என்று நான் நம்புகிறேன்; இவர்கள் இருவருமே ஏதோவொரு அழிவுச் சக்தியின் பிரதிநிதிகளாகவோ தூதுவர்களாகவோ அல்லது அதனை வழிபடுபவர்களாகவோ இருந்தாலும்கூட, தம் நாட்டின் உன்னதமான எதிர்காலத்திற்காய் பாடுபடுவதாகவே உணர்ந்தார்கள். இந்தியாவின் வளர்ச்சி குறித்த ‘நேர்மையான அக்கறைகொண்ட’ ரகுராம் ராஜனின் கனவுகளைச் சூழலியல் பார்வையில் அலசிப்பார்ப்பதும், அவற்றோடு முரண்படும், ஏற்கும் புள்ளிகளைத் தொகுத்துக்கொள்வதும் முதலாளித்துவத்தின் பிரச்சினைகளை மீண்டுமொருமுறை நினைவுபடுத்திக்கொள்ளப் பயன்படுமென்று கருதுகிறேன். அவரது புத்தகத்திற்குள் நுழைவதற்கு முன்பு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் – தீர்க்கமுடியாத தீவிரப் பிரச்சினைகளாக நான் புரிந்துகொண்டவற்றை இங்கே சுருக்கமாகத் குறிப்பிடுகிறேன்.
முதலாளித்துவப் பொருளாதாரத்தில், உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிப்பதும் அதன் மூலமாக இலாபங்களைப் பெருக்குவதும் முதன்மை நோக்காக இருக்கின்றது. இந்த நோக்கம் எல்லா இயற்கை வளங்களையும், சேவைகளையும் விற்பனைப் பண்டங்களாக மாற்றுகிறது. உற்பத்தி அதிகரிப்பே வளர்ச்சியாகப் பார்க்கப்படுவதால் இயற்கை வளங்கள் கண்மூடித்தனமாகச் சுரண்டப்படுகின்றன. உற்பத்தியை அதிகரிக்கத் தொழிலாளர்கள் மிக மோசமாகச் சுரண்டப்படுகின்றார்கள். இது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்க முடியாதவையாக மாற்றிக் கூர்மைப்படுத்துகிறது. விற்பனையை அதிகரிக்க இந்தப் பொருளாதார அமைப்பு குடிமக்களை நுகரும் எந்திரங்களாக மாற்றுகிறது. அவர்கள் தொடர்ந்து நுகர்ந்துகொண்டே இருப்பதற்காகத் தனது அறமற்ற விளம்பரங்கள் மூலமாக மனிதர்களை மூளைச்சலவை செய்து அடிமையாக்குகிறது. பொருட்களைத் தரமற்றதாகவும் குறைந்த ஆயுள் கொண்டவையாகவும் வடிவமைக்கிறது. உற்பத்தியும் நுகர்வும் அதிகரிக்க அதிகரிக்கச் சூழல் சீர்கேடுகளும், கார்பன் உமிழ்வும், கையாளமுடியாத குப்பைகளும் பெருமளவில் அதிகரிக்கின்றன. இவை முதலாளித்துவப் பொருளாதாரத்தின்கீழ் பேரழிவைத் தவிர்க்க முடியாததாக்குகின்றன.
சரி இப்போது நாம் புத்தகத்திற்கு வருவோம்.
மஞ்சுள் பதிப்பக வெளியீடாக உருவாகியிருக்கும் ‘பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்’ புத்தகத்திற்கு மிகச்சிறப்பான மொழிபெயர்ப்பைத் தந்திருக்கிறார் PSV குமாரசாமி. 375 பக்கங்கள் நீளும் இப்புத்தகம் ஓரளவு வாசிக்கும் திறனும் சமூகப் புரிதலும் அக்கறையுமுள்ள எவருமே வாசிக்க ஏற்றது. புத்தகத்தின் இன்னொரு ஆசிரியரான ரோகித் லம்பா பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர். இரண்டு ஆசிரியர்களின் புத்தகமானாலும் எளிமைக்காக நான் எனது கட்டுரையில் ரகுராம் ராஜனின் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன்.
ரகுராம் ராஜன், “மக்களுக்காக நாடா; இல்லை, நாட்டிற்காக மக்களா?” என்ற பிரச்சினையில், தேசத்தை மக்களுக்கு மேலானதாகவும் – எப்பாடுபட்டாவது வளர்த்துவிட வேண்டிய – இரத்தமும் சதையும் கொண்ட – ஒரு மதிப்புமிக்கப் புனித உயிரினம்போல அணுகுவதாக எனக்குத் தோன்றியது. அதற்காகச் சில சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்பதாகவே மறைமுகமாக ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். என்றாலும், நீண்டகால அளவில் எல்லாருக்குமான நலன் என்ற ஒன்று தூரத்தில் ஒளீந்திருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்குள் இருக்கிறது. இதற்குச் சுவாரசியமான ஓர் உவமையைச் சொல்லுகிறார். (கட்டுரையின் நீளம் கருதி அவரது சொல்லாடலை அப்படியே நான் பயன்படுத்தவில்லை)
“ஒரு பெரிய நெடுஞ்சாலை. அகலமான நெடுஞ்சாலையிலிருந்து குறுகலான ஒரு சுரங்கச் சாலையின் வாயிலுக்குள் எண்ணற்ற வாகனங்கள் பல வரிசைகளில் நுழைகின்றன. வாகனங்கள் ஒரே நேரத்தில் முண்டியடிக்கப் பெரும் தள்ளு முள்ளும் நெருக்கடியும் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியில் சில வரிசைகளிலிருக்கும் வாகனங்கள் வேகமாக முன்னேறுகின்றன. மற்ற வரிசைகள் சிறிதும் நகரவில்லை. அருகாமையிலிருக்கும் வரிசைகளில் வேகமாய் முன்னேறும் வாகனங்களைப் பார்த்துத் தேங்கிக் கிடக்கும் வரிசையில் இருக்கும் வாகனங்களில் இருப்போருக்குக் கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறது. இது இயல்புதான். அதாவது, நாட்டின் வளர்ச்சிப் போக்கில் சிலர் வேகமாக முன்னேறுகின்றனர். சிலர் தேங்கிக் கிடக்கின்றனர். தேங்கிக் கிடப்போரின் ஏக்கமும் கோபமும் இயல்பானதுதான் என்றாலும் விரைவில் தாங்களும் முன்னேறுவோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்”, என்கிறார்.
எவ்வளவு நேரம் இந்த நெருக்கடி தொடரும்? சிலமணி நேரங்களுக்கா அல்லது பல ஆண்டுகளா அல்லது நூற்றாண்டுகளா? எத்தனைத் தலைமுறைகளுக்கு இந்தத் தேக்கம் தொடரக்கூடும் என்பதை அவர் தெளிவுபடுத்தாமல் கடப்பது முதலாளித்துவத்தின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான ஏற்றத்தாழ்வை, ஏற்றுக்கொண்டு மழுப்பிச் செல்வதுபோல ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. அதே வேளையில் அவருக்கு ஏழைகள் மற்றும் சாதீய ரீதியாக விளிம்பு நிலையிலிருக்கும் மக்களின் ஏற்றத்தில் அக்கறை இல்லாமல் இல்லை. ஆனால், அந்த அக்கறையின் நோக்கமானது, நீதி அல்லது மனித நேயத்தின்பாற்பட்டதாக அன்றி ‘வேறொன்றாக’ இருப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன். உதாரணமாக, எளிய மக்களுக்கான கல்வியின் அவசியத்தை அவரது பார்வையில் நான் பின்வருமாறு புரிந்து கொள்கிறேன்.
இந்தியா என்ற இரத்தமும் சதையுடைய புனித உயிரினம் அசுர வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதன் ஜி.டி.பி. உயர வேண்டும். ஜி.டி.பி. உயர வேண்டுமானால் நாட்டின் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். உற்பத்திப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு அணுவும் (குடிகளும்) உற்பத்திக்குப் பங்களிக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு அணுவும் பங்களிக்க வேண்டுமானால் அவை அதற்கு ஏற்றத் தகுதியும் திறமையுடையவையாக இருக்க வேண்டும். அந்தத் திறமையை அந்த அணுக்களுக்குச் சிறப்பான கல்வியே வழங்கும் என்று ரகுராம் ராஜன் கருதுகிறார். இதனை எட்ட ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதலாய் உலகத்தரத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறப்பான பல்கலைக்கழகங்களையும் கனவு காண்கிறார். இன்றைய கல்வியின் நோக்கம் மாணவர்களை அசுரத்தனமான உற்பத்திக்குப் பங்களிக்கும் எந்திரங்களாக உருவாக்குவதாக அன்றி அவர்களின் அக – புற வாழ்வுக்கும் நலனுக்கும் எவ்வகையிலும் உதவுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்ற எனது அனுமானத்திற்கு இது வலுசேர்ப்பதாக இருக்கிறது.
அடிப்படையில் இந்த உற்பத்தி அதிகரிப்பை பா.ஜ.க. அரசு எப்படிச் செயல்படுத்த முனைகிறது என்பதிலிருந்து ரகுராம் ராஜன் வேறுபடுகிறார். சீனாவின் வளர்ச்சியானது அது உற்பத்தித் துறையில் நிகழ்த்திய பாய்ச்சலிலேயே வேர்கொண்டிருக்கிறது. அந்த உற்பத்தியானது வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து இறுதி நுகர்ப்பொருளை உருவாக்குவதை முதன்மையாகக் கொண்டிருப்பதாகவும் – இது திறன் குறைந்த தொழிலாளர் படையால் செய்யப்படும் வேலையாக இருப்பதாகவும் – இதன் பொருளாதார மதிப்பு (மதிப்புக் கூட்டல்) மிகவும் குறைவு என்றும் வெகுகாலத்திற்கு முன்பு இத்துறையில் சீனாவால் சாதிக்க முடிந்தாலும் இன்றைய சூழலில் இந்தியாவால் அதனைச் செய்ய முடியாது என்றும் ராஜன் வாதிடுகிறார்.
ஒரு பொருளின் உற்பத்தியில் அதன் வடிவமைப்பு – உற்பத்தி – விநியோகம் / விற்பனை என்ற மூன்று நிலைகளில் முதல் மற்றும் இறுதிப் பகுதிகளிலேயே அதிக மதிப்புக் கூட்டல் நடைபெறுவதாகவும் ஆகவே அதிக மதிப்புக்கூட்டல் உள்ள துறைகளிலேயே இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஆனால் அரசாங்கமோ உதிரிப் பாகங்களை ஒருங்கிணைக்கும் சீனாவின் மாதிரியைப் பின்பற்றித் தனது முழு ஆற்றலையும் செலவிடுகிறது என்று வருந்துகிறார். அவர் சொல்லும் இந்த ‘அரசாங்கத்தை’ நாம் பா.ஜ.க. தலைமையிலான அரசு என்று புரிந்துகொண்டாலும் ரகுராம் ராஜன் தனது புத்தகத்தில் ஓரிடத்தில்கூட பா.ஜ.க. அல்லது பா.ஜ.க. தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்.
எது எப்படியோ இந்த இருதரப்பினரின் நம்பிக்கையுமே முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி அதிகரிப்பிலேயே கவனம் செலுத்துகின்றன என்பதால் சூழல் பார்வையில் இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. சொல்லப்போனால் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க வடிவமைத்து ஏற்றுமதி செய்வது என்பது உதிரிப்பாகங்களின் ஒருங்கிணைப்பைவிடக் கூடுதல் வளங்களின் சுரண்டலையும், சூழல் சீர்கேடுகளையும் உருவாக்கும் என்றே தோன்றுகிறது. இதனாலேயே வளர்ந்த நாடுகள் தங்களின் உற்பத்திக் கூடங்களை மூன்றாம் உலக நாடுகளில் நிறுவுகின்றன.
கம்யூனிச அரசுகள் கல்விக்காகப் பணத்தை வாரி இறைத்தன என்றும் சீனாவின் வளர்ச்சிக்குப் பின்னர் அது கல்விக்கும் சமத்துவத்திற்கும் கொடுத்த முக்கியத்துவம் இருக்கிறது என்று குறிப்பிடும் ராஜன் இந்தியாவின் ஜாதிய மற்றும் பொருளாதார அடுக்கதிகார அமைப்பால் அதனைச் சாதிக்க முடியவில்லை என்று குறிப்பிடுகிறார். சீனாவில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் கெட்டிப்பட்டிருப்பதாக வெளியுலகம் கருதினாலும்கூட 1970க்குப் பிறகு நடைபெற்ற வட்டார அளவிலான (உள்ளாட்சி போன்ற அமைப்புகளும்) அரசாங்க அமைப்புகளும் அவற்றால் போட்டிப்போட்டுச் செய்யப்பட்ட பரந்துபட்ட வளர்ச்சிக் கொள்கைகளுமே வளர்ச்சிக்கு வித்திட்டன என்கிறார் ராஜன். இதனைத்தாண்டி சீனாவின் ஜி.டி.பி. வளர்ச்சி அதன் தொழிலாளர்களுக்கோ பொதுமக்களுக்கோ பொருளாதார அளவில்கூட பலனளிக்கவில்லை என்று சீனா மற்றும் இந்தியாவின் ஜி.டி.பி.யையும் அவற்றின் குடிமக்களின் நுகர்வின் விழுக்காட்டையும் ஒப்பிட்டுக்காட்டுகிறார் ரகுராம் ராஜன். சீன சர்வாதிகாரம் அதன் வளர்ச்சிக்கு உதவினாலும்கூட இந்தியாவில் மேலும் அதிக ஜனநாயகப்படுத்தல் நிகழவே தாம் விரும்புவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
சீனாவில் நிலவுவது கம்யூனிச அரசா என்ற ஆய்வுக்குள் செல்வதைவிடச் சீனா மாதிரியானது பேரழிவுக்கான பொருளாதாரம் என்று மட்டும் இங்குக் குறிப்பிடுவது மட்டும் போதுமானது என்று கருதுகிறேன். காற்று மாசுபாட்டைக் காட்டும் ஒட்டுமொத்த உலக வரைபடத்தில் (AQI Index) சீனாவின் மீது போர்த்தப்பட்டிருக்கும் செந்நிறம் கம்யூனிசத்தின் நிறமல்ல அது அழிவின் நிறமென்பது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்; அது வளரும் இந்தியாவின் நிறமும்கூட.
தொடரும்…
- ஜீயோ டாமின். ம