காசம்பட்டி வீரகோயில் காடு; தமிழ்நாட்டின் 2வது பல்லுயிர் மரபு தளம்.

வீரகோயில்
கோப்புப்படம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்குட்பட்ட அமைந்துள்ள காசம்பட்டி (வீரகோயில்) கோயில் காடு தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவார சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கோயில்காடுகள் அமைந்துள்ளன. அரியவகை மரங்கள், தாவரங்கள், பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்களுக்கு கோயில்காடுகள் உறைவிடமாக உள்ளன. கோயில்கள் அமைந்துள்ள காடு என்பதால் உள்ளூர் மக்களால் இக்காடுகள் அழிவின்றிப் பாதுகாக்கப்படுகின்றன.

சூழலியல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 53.580 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றுகளையும், அரிட்டாபட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 139.635 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றுகளையும் உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் (477.4 ஏக்கர்) பரப்பை கடந்த 22.11.2022 அன்று தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவித்தது தமிழ்நாடு அரசு.

GO

இந்நிலையில் உயிர்ப்பன்மையச் சட்டம் 2002ன் கீழ் 12.03.2025 தேதியிட்ட அரசாணை எண் G.O. Ms. No. 52, Environment, Climate Change and Forest (FR.5) வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்குட்பட்ட ரெட்டியப்பட்டி கிராமத்தில் அழகர்மலை காப்புக்காடுக்கு அருகில் 4.97.50 எக்டரில் அமைந்துள்ள காசம்பட்டி வீரகோயில் காடு பகுதியை பல்லுயிர் மரபு தளமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு வனத்துறை.

இக்காடுகளைச் சுற்றிலும் உள்ள பசுமையான மாந்தோப்புகள் இயற்கை அழகையும், வளத்தையும் மேலும் மெருகூட்டுகிறது. வன விலங்குகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை எய்த உதவும் வகையில் ஒரு பாலமாக இது விளங்குகிறது. இதன் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு அப்பால், சுற்றுச்சூழலில், கோயில் காடுகள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. இது உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாக்கிறது மற்றும் உள்ளூர் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது. வீர கோவில், கோயில் காடுகளில் உள்ளூர் தெய்வமான “வீரண்னன்” குடிகொண்டுள்ளதால் உள்ளூர் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

 

வீரகோயில்

இக்காடுகள் 48 தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிகள் மற்றும் 29 மூலிகைகள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உறைவிடமாகும்.  இப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பல்வேறு சிறிய பாலூட்டிகள், ஊர்வன மற்றும் எண்ணற்ற பூச்சிகள் போன்றவை காணப்படுகின்றன. பல்லுயிர் மரபு தளமாக அறிவிக்கப்பட்டால் தங்களது வழிபாடுகள் தடைப்படும் என்பதால் இம்முடிவைக் கைவிட வேண்டுமென காசம்பட்டி பொதுமக்கள் கடந்த மார்ச் 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீரகோயில் கோயில்காடானது உயிர்ப்பன்மையம் நிறைந்ததோடு சமூகசூழலியல் மற்றும் சூழல்இறையியலைப் பிரதிபலிப்பதாக உள்ளதாகவும் கோயில் வழிபாட்டுக்கு எவ்விதத் தடையுமின்றி இப்பகுதி பல்லுயிர் மரபு தளமாக அறிவிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

115_Ex_II_2_2025-1
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments