கொந்தளிக்கும் கடல்கள்; திகைக்கும் மானுடம்.

கடல்கள்

2023-24 கோடையில், பெருங்கடல் வெப்ப அலைகள் (Marine Heatwaves – MHW) உலகளவில் 240% அதிகரித்துள்ளன என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. பெருங்கடல் வெப்ப அலைகள் என்பது பெருங்கடல்களின் வெப்பநிலையில் நீண்ட காலத்திற்கு தீவிரமாக அதிகரிப்பதைக் குறிக்கிறது. இவ்வெப்ப அலைகள் உலகில் அனைத்துப் பகுதியையும் பாதித்துள்ளன. கிட்டத்தட்ட 10% பெருங்கடல்கள் மிக அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலையை (SST) கொண்டுள்ளன.  இது ஆண்டு சராசரியை விட நான்கு மடங்கு அதிகம் என Nature Climate Change இதழில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST) மிக அதிகளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தளவிற்கான அதிதீவிர வெப்பமயமாதல் மனிதர்களால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மற்ற காரணிகளாக எல் நினோ (El Niño – இது வெப்பமண்டல பசிபிக் பகுதியில் இயற்கையாக ஏற்படும் வெப்ப உயர்வு). தெற்கு அலைவு (ENSO) — மற்றும் உலகளவில், குறைந்த உயரத்தில் காணப்படும் மேக அடுக்குகள் குறைவது உள்ளிட்டவை உள்ளன.

“2023-24 கோடை காலத்தில் கடல் வெப்ப அலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இருந்தன. மேலும் இவை பரவலான உயிரியல், இயற்பியல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்தால் கடல் வெப்ப அலைகள் தீவிரமடையும்போது, அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சிறந்த தகவமைத்துக்கொள்ளும் திட்டங்கள் மற்றும் விரைவான மீள்தன்மையுடன் கட்டுமானங்களை உருவாக்கவேண்டும்” என்று இவ்வாய்வின் ஆசிரியரான யுனைடெட் கிங்டம், பிளைமவுத்தின் கடல் உயிரியல் சங்கத்தின் டான் ஏ ஸ்மேல் தெரிவித்துள்ளார்.

2023ல் நீடித்த கடல் வெப்ப அலைகள் வானிலை மாதிரிகளைப் பாதித்தன. இது இங்கிலாந்து, வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் தீவிர வெப்பநிலை உயர்வுக்கும் (air temperature) ஈக்குவடோர், லிபியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ளத்திற்குக் காரணமாக அமைந்தது.

இது கடல் மற்றும் நிலப்பரப்பின் மேல் உள்ள காற்றுக்கு இடையேயான வெப்பம் மற்றும் ஈரப்பத பரிமாற்றத்தை ‘மிகைப்படுத்தியது’, இதன் விளைவாக 2023 அட்லாண்டிக் ஹரிகேன் பருவத்தில் (Hurricane season) அதிகளவிலான புயல்கள் ஏற்பட்டன. மேலும் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்கரைகளில் பல வெப்பமண்டல புயல்கள் தரையைக் கடந்தன. எடுத்துக்காட்டாக, பெருங்கடல் வெப்ப அலைகள் கேப்ரியல் புயலைத் தூண்டியது. இதனால் நியூசிலாந்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பில்லியன் நியூஸிலாந்து டாலர்கள் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.
வங்காள விரிகுடாவிலும், கடல் வெப்ப அலைகள் 2023ல் தீவிர வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்தின, மே 2023ல் வெப்பமண்டலச் சூறாவளி மோச்சா மற்றும் மே 2024ல் ரிமால் புயலுக்குக் காரணமாக அமைத்தன.

இந்தியப் பெருங்கடல் பகுதி 1950-2020 காலகட்டத்தில்  1.2°C வீதம் வெப்பமடைந்துள்ளது என்பதை முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், 2020 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில், காலநிலை மாதிரிகள் 1.7°C-3.8°C வீதம் வெப்பமடையும் என கணிக்கின்றன. இதன் விளைவுகள் அரபிக் கடல் மற்றும் வடமேற்கு இந்தியப் பெருங்கடலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெருங்கடல் வெப்ப அலைகள் ஆண்டிற்கு 20 நாட்களில் இருந்து 220-250 நாட்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெப்பமண்டல இந்தியப் பெருங்கடலைக் கிட்டத்தட்ட “நிரந்தர வெப்ப அலை நிலைக்கு தள்ளும்” என்று ’எதிர்கால இந்திய பெருங்கடல்’ என்ற புத்தகம் கூறுகிறது.
மொத்தத்தில், 2023-2024ல், கடல் வெப்ப அலைகள், புயல்கள், வெள்ளம், வெப்ப அலைகள், மழை மற்றும் மேகவெடிப்பு, அணை உடைதல் போன்ற 23 இயற்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

2023-2024ல் நிகழ்ந்த பெருங்கடல் வெப்ப அலைகளால், பவளத்திட்டுகள் வெளுப்பாதல், ஜப்பான் மற்றும் பெருவில் உள்ள முக்கியமான சூழலியல் அமைவுகளில் ஏற்பட்ட இழப்பு மற்றும் சில உயிரினங்கள் புதிய இடங்களுக்கு இடம்பெயர்வது போன்ற உயிரியல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தாய்லாந்து மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதியில் மீன்கள் அதிகளவில் இறந்து மிதந்தன. இதுபோன்ற உணவு வலைப்பின்னலில் (foodweb) ஏற்பட்ட பாதிப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். வட அட்லாண்டிக்கில், பைட்டோபிளாங்க்டனின் குறைந்த உற்பத்தித்திறன் பரந்த உணவு வலைப்பின்னலை பாதித்தது. இது மீன் மற்றும் கடற் பறவைகளில் ஏற்படுத்தப்போகும் சாத்தியமான பாதிப்புகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைட்டோபிளாங்க்டன் (phytoplankton) என்பது நுண்ணிய கடல் பாசிகள் ஆகும், இது பல நீர்வாழ் உணவு வலைப்பின்னல்களின் அடிப்படையாகும்.

உலகளவில் கடல் வெப்ப அலைகளால் 43 உயிரியல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 2023ல் அக்டோபரில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்கள் ஆர்க்டிக்கிற்கு நகர்வதற்கு கடல் வெப்ப அலைகள் காரணமாக இருந்தது மற்றும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் தென் பசிபிக் பெருங்கடலில் திமிங்கலம் மற்றும் டால்பின்கள் கரைக்கு வருதல் அதிகரித்தது போன்றவை அடங்கும். இந்நிகழ்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் மத்திய தரைக்கடலில் குறிப்பிட்ட ஒரு நோயைத் தூண்டுவதில் பங்கு வகித்தன. இது மத்தியதரைக் கடலின் மிகப்பெரிய ஓடுடைய உயிரினமான ஃபான் மஸ்ஸலை (மட்டி) அச்சுறுத்தியது.

பெருங்கடல் வெப்ப அலைகள், சூழலியல் தொகுதிகள், சுற்றுச்சூழல் சேவைகள், கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை மற்றும் பரந்த சமூகத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் காரணமாகியுள்ளன. உலகளவில் கடல் வெப்ப அலைகளால் ஏற்பட்ட 33 சமூக பாதிப்புகள் இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, உலகளாவிய பவளத்திட்டுகள் வெளுத்தல், ஸ்னோர்க்லிங் மற்றும் ஸ்கூபா டைவிங் சுற்றுலாவை எதிர்மறையாக பாதித்ததால் சில பகுதிகள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டன. மத்திய தரைக் கடல் மற்றும் தாய்லாந்து வளைகுடாவில் இறால் மற்றும் “வளர்ப்பு வகைகளில்” (aquaculture) இழப்புகள் ஏற்பட்டன. பெருவியன் ஆங்கோவிஸ் எனப்படும் ஒரு வகை மீனின் “வாழ்விட மாற்றங்கள்”, வணிக மீன்பிடிப்பு வணிகத்தில் பாதிப்பிற்கு வழிவகுத்தன. இதனால் ஏற்பட்ட இழப்புகள் US$1.4 பில்லியன் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றில், தாக்கத்தைக் குறைக்கக்கூடிய திட்டங்களோ அல்லது தயாரிப்புகளோ உருவாக்கப்படவில்லை அல்லது செயல்படுத்தப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான காரணங்களாக, பொருளாதார வளங்கள் குறைவாக இருந்தது, நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு இடையேயான இடைவெளி அல்லது தொடர்பு இல்லாதது போன்ற பிரச்சினைகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெருங்கடல் வெப்ப அலைகளை கையாள உலகம் வேகமாகத் தயாராக வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 2023-2024 கடல் வெப்ப அலைகளின்போது பாதிப்புகள் ஏற்பட்ட பெரும்பாலான பகுதிகளில் எவ்விதத் தணிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பெருங்கடல் வெப்ப அலைகள் குறித்த முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2023-2024 காலகட்டத்தில், முன்னறிவிப்புகள் பொதுவாகத் துல்லியமாக இருந்தன. ஆனால், சில தவறுகள் இருந்தன. “முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவது தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும், அதே நேரத்தில் நீண்ட கால முன்னறிவிப்புகள் நாம் தயாராவதற்கான காலத்தை நீட்டிக்கும்,” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருங்கடல் வெப்ப அலைகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன என்பதை அதிகரிக்கும் வெப்பமும், பருவமழை மற்றும் புயல்கள் தீவிரமாவதும் நமக்கு உணர்த்டுவதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

– கோ.சுந்தர்ராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments