நீலகிரியை “வயநாடாக்கப்” போகும் சில்லஹல்லாத் திட்டம்!

சூழல் கூர்திறன் கொண்ட நீலகிரி மலைகளில் திட்டமிடப்பட்டுள்ள புனல் மின்சாரத் திட்டங்களைக் கைவிட பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்.

உயிர்ப்பன்மைய வளமிக்க மற்றும் அதேநேரத்தில் நிலச்சரிவு அபாயமிக்க நீலகிரி மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பல புனல் மின்சாரத் திட்டங்களால் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வரும் மார்ச் 20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள 1000MW (4*250MW) உற்பத்தித் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டம் நிலை 1 க்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி மேல் பவானி நீரேற்றுப் புனல் மின் நிலையத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி NTECL நிறுவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்துள்ளது. ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மற்றும் கட்டுமானம் நடந்து வரும் புனல் மின் திட்டங்களோடு சேர்ந்து இவ்விரு திட்டங்களும் அம்மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குப் பெரும் அபாயமாக மாறியுள்ளன.

சில்லஹல்லா நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டம் நிலை 1

இத்திட்டம் 1000MW (4*250MW) உற்பத்தித் திறன் கொண்டது. நீலகிரி மாவட்டத்தின் சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே 75 மீ உயரத்தில் ஒரு அணை மற்றும் குந்தா ஆற்றின் குறுக்கே 108 மீ உயரத்தில் ஒரு அணை எழுப்பி இவற்றை முறையே மேலணை மற்றும் கீழணையாகக் கொண்டு 2..8 கி.மீ. தூரத்திற்கு குகை வழி நீர்க்குழாய்கள் அமைத்து இந்த நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 5843 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக மொத்தம் 310.157 எக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 8.912 எக்டர் நிலமானது வனப்பகுதியாகும். பாலகோலா, இத்தலார், கீழ் குந்தா கிராமங்களில் முறையே 499, 86, 233 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 818 குடும்பங்கள் தங்கள் நிலங்களை இழக்கவுள்ளனர். மேலும் இந்த 310.157 எக்டர் நிலத்தை மேய்ச்சல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

EIARPTEngTNGECL14225

மேலும், இத்திட்டத்தின் மேலணை கட்டுமானத்தால் 135 எக்டர் நிலப்பகுதியும், கீழணை கட்டுமானத்தால் 35 எக்டர் நிலப்பகுதியும் நீரில் மூழ்கும். இதில் பெரும்பாலும் வனப்பகுதியும் வேளாண் நிலங்களும் அடங்கியுள்ளது. மேலும் இத்திட்டமானது முக்கூர்த்தி தேசியப் பூங்காவிலிருந்து 4.78 கி.மீ தூரத்தில் அமையவுள்ளதால் கானுயிர்களுக்கும் நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

மேல் பவானி நீரேற்றுப் புனல் மின் நிலையம்.

நீலகிரி மாவட்டத்தில் ’மேல் பவானி’ மற்றும் ’அவலாஞ்சி – எமரால்டு’ நீர்த்தேக்கங்களை முறையே ‘மேல்’ மற்றும் ‘கீழ்’ நீர்த்தேக்கங்களாகக் கொண்டு 1000MW (4×250MW) உற்பத்தித் திறன் கொண்ட புதிய நீரேற்றுப் புனல் மின் நிலையத்தை அமைக்க NTPC TAMILNADU ENERGY COMPANY LIMITED (NTECL) திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளது.

ரூ. 5005 கோடி மதிப்பீட்டில் 432.85 எக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இத்திட்டத்தால் குந்தா காப்புக்காட்டின் 306.35 எக்டர் நிலப்பகுதி பாதிக்கப்படவுள்ளது. திட்ட அமைவிடமானது முக்கூர்த்தி தேசியப் பூங்காவிலிருந்து 1.4 கி.மீட்டரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pfr with annexures

இவை மட்டுமின்றி இன்னும் சில நீரேற்றுப் புனல் மின் திட்டங்களும் நீலகிரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீலகிரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிலைத்தன்மையைக் குலைத்து நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கவல்லவை. அதிகளவில் காப்புக் காடுகள் இத்திட்டத்திற்காக அழிக்கப்படவுள்ளதால் பல்வேறு கானுயிர்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இத்திட்ட அமைவிடங்கள் சில, குறிப்பாக மேல் குந்தா, கீழ் குந்தா ஆகிய இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பிற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான உயர் மட்டக்குழுவின் (REPORT OF THE HIGH LEVEL WORKING GROUP
ON WESTERN GHATS) வரைவு அறிக்கையில் சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளாக (Eco Sensitive Areas) வரையறுக்கப்பட்டவை. இப்படி வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான புனல் மின்சாரத் திட்டங்களை அமைக்கக்கூடாது.

மேலும் புவி வெப்பமயமாதலின் தீவிர விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படும் ஒரு மாவட்டமாக நீலகிரி உள்ளது. குறிப்பாக குறைவான நேரத்தில் பெருமழை பொழியும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 37 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியது. இப்படிப் பல பெருமழைப் பொழிவு நிகழ்வுகள் நடந்துவருகின்றன.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றில் பதில் மனுத்தாக்கல் செய்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், நீலகிரியில் மட்டும் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயமிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பெருமழையைப் போலவே கடந்த ஆண்டு வறட்சியின் தாக்கமும் நீலகிரி மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது. கோடை மழை பொய்த்ததால் மலை காய்கறிப் பயிர்கள் வாடின. தேயிலை உற்பத்தி குறைந்தது. பெரும்பாலான ஆறுகள், நீர்நிலைகள் நீரின்றி வறண்டன. மசினகுடி உள்ளிட்ட இடங்களில் தீவனம் மற்றும் நீரின்றி மாடுகள் உயிரிழந்தன. இப்படி ஒரே ஆண்டில் வறட்சி, பெருமழை, நிலச்சரிவு உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் பாதிப்பிற்கு உள்ளானது நீலகிரி மாவட்டம்.

மேலும் இதைப்போன்ற நீரேற்றுப் புனல்மின் நிலையங்களின் “திறன்” கேள்விக்கு உள்ளாகிவருகிறது. இவ்வளவு ஆயிரம் கோடிகளை செலவு செய்து, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்த மாதிரியான திட்டங்கள் செய்லபடுத்துவதை விட, “battery storage systems” போன்ற திட்டங்களை அரசுகள் ஆய்வு செய்து செயல்படுத்தினால்  அவை சிறந்த பலனளிக்கும்.

ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்துக்கான இயற்கைப் பேரிடர் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரிக்கக் கூடிய பெரிய புனல் மின்சாரத் திட்டங்களை செயல்படுத்த முனைவது தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய பெரிய புனல் மின்சாரத் திட்டங்களை நீலகிரி மாவட்ட த்தில் செயல்படுத்தக் கூடாதென பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments