தமிழ்நாடு சட்டப்பேரவையில் 28.03.2025 அன்று வனத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி வனத்துறை சார்பில் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து காடுகளையும் கானுயிர்களையும் பேணும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வரிசையில் 2025 – 26 நிதியாண்டிற்கான அறிவிப்பிலும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இருவாச்சி பறவைகள் பசுமை மாறா மலைக்காடுகளில் உள்ள பெரிய மழைக்காட்டு மரங்களில் வாழ்வன. இவ்வரியவகை பறவையினைப் பாதுகாக்க வனங்கள் அரசு நிலங்கள் மற்றும் தனியார் தோட்டங்களிலுள்ள மிகப் பெரிய மரங்களை அடையாளம் கண்டு பாதுகாத்து இம்மரங்களை பாதுகாக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறித்தார். மேலும், இருவாச்சிப் பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இயற்கையில் அனைத்து உயிரினங்களும் சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனாலும் யானை, புலி போன்றவற்றுக்குக் கிடைக்கும் முக்கியத்தும் பிற கானுயிர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறை அதிகம் கவனம் பெறாத நீர்நாய், குள்ளநரி, முள்ளெலி, கழுதைப்புலி, செந்துடுப்பு காவேரி மீன் போன்ற உயிரினங்களைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.
• கருமந்தி, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி மற்றும் செந்துடுப்பு காவேரி மீன் பாதுகாப்புத் திட்டம்.
திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடி
• குள்ளநரி பாதுகாப்பு திட்டம்.
• நீர்நாய் ஆய்வு மற்றும் பாதுகாப்பு திட்டம்:
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் நீர்நாய்களின் வாழிடங்களை பாதுகாக்கவும், இனப்பெருக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளவும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்குமான திட்டம்.
திட்ட மதிப்பீடு ரூ. 25 லட்சம்.
• கடல் ஆமை ஆய்வில் டெலிமெட்ரி தொழில்நுட்பம்:
ஒவ்வொரு ஆண்டும் தமது இனப்பெருக்க காலத்தில் தமிழ்நாடு கடற்கரைக்கு அதிக எண்ணிக்கையில் கடல் ஆமைகள் வருகின்றன. இவற்றிற்கு ஏற்படும் பல்வேறு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும் கடல் ஆமைகளின் வாழ்க்கை முறை, அவை அதிக எண்ணிக்கையில் கூடுமிடங்கள் மற்றும் அவற்றின் பருவநிலை இடப்பெயர்ச்சி முறைகளை கண்டறியவும், டெலிமெட்ரி தொழில்நுட்ப ஆய்வுகள் 84.00 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கான திட்டம்.
• திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு அதிவிரைவுப்படை.
• தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பசுமை பரப்பை மதிப்பீடு செய்தல்.
• சென்னை கடற்கரைக்கு கடல்சார் உயரடுக்கு படை.
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வறிவுப்புகளை வெளியிட்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறை அதிகாரிகளுக்குப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.