அணுமின் சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அணுசக்திச் சட்டம் 1962 (Atomic Energy Act), அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 (The Civil Liability for Nuclear Damage Act, 2010–CLNDA) போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரப்படும் என 2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
ஆபத்தான இவ்வறிவிப்புக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடும் கண்டத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஒன்றிய அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் இச்சட்டங்களைத் திருத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கவும் திருத்தங்களை முன்மொழியவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இக்குழுக்களில் இந்திய அணுசக்தித் துறை (DAE), இந்திய அணுசக்தி ஒருங்காற்று வாரியம் (AERB), நிதி ஆயோக், ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழுக்கள் அணுக்கழிவு மேலாண்மை, அணுசக்தி உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் எரிபொருள் மேலாண்மை, செயலிழக்கச் செயல்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கும் என இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அணுசக்திச் சட்டம் 1962 (Atomic Energy Act), அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 (The Civil Liability for Nuclear Damage Act, 2010–CLNDA) போன்றவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் பல அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளின் பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது என்றும் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரம் தேவைப்படலாம் என்பதால் இப்பணிகளை முடிக்க ஒரு காலக்கெடுவை வழங்குவது சாத்தியமில்லை எனவும் பதிலளித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் இயக்கப்படும் அணுவுலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீட்டுக்கு அணுவுலையை இந்தியாவுக்கு வழங்கிய நிறுவனத்தையும், உபகரணங்களை வழங்கிய நிறுவனத்தையும் பொறுப்பாக்கக்கூடிய இச்சட்டம் நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விவாதத்திற்குப் பின்னர் இச்சட்டமானது நிறைவேற்றப்பட்டது.
ஒருவேளை அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டால் அணு உலையை இயக்குபவர்கள் மட்டுமின்றி, அணு உலை மற்றும் உபகரணங்களின் விநியோகஸ்தர்களையும் இழப்பீட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது இச்சட்டத்தின் 17(b) பிரிவு. இப்பிரிவை மாற்றும் முயற்சிகளை அப்போதைய பா.ஜ.க.வும் கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சட்டத்தை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உட்பட பல்வேறு நாடுகள் மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அப்படி மாற்றினால்தான் இந்த நாடுகள் தங்களுடைய அணுவுலைகளை இந்தியாவிற்கு விற்று விபத்துகளுக்கான பொறுப்புகளேதுமின்றி லாபமீட்ட முடியும். அதற்காக இந்திய அரசின் இச்சட்டமானது பன்னாட்டு அணுசக்தி முகமையில் விவாதிக்கப்பட்ட பன்னாட்டு இழப்பீடுச் சட்டத்துடன் பொருந்தவில்லை என இந்த நாடுகள் கூறி வருகின்றன.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போதுமானது இல்லை. போபால் விஷவாயுக்கசிவு, புகுஷிமா அணுவுலை விபத்துகளில் அவை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்திய அரசு தற்போது இருக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்தவே முயற்சிக்க வேண்டும். குறிப்பாக அணுவுலை விபத்து இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
புகுஷிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய பாதிப்பைச் சரிசெய்வதற்கு தற்போது வரை ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது இன்னும் உயரும் எனவும் கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கே செர்னோபில் அணுவுலை விபத்துதான் காரணம் என கோர்பசேவ் கருதினார். இப்படி ஒரு அணுவுலை விபத்து என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக அறியாமல் இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயித்ததை நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
மேலும் இந்தியாவில் தற்போது வரை அணுமின் நிலையங்களை இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India Limited) எனும் பொதுத்துறை நிறுவனமே இயக்கி வருகிறது. அதன் மோசமான செயல்பாடுகளுக்கு பல குறைபாடுகளுடன் இயங்கி வரும் கூடங்குளம் உலைகளே சாட்சி. இந்த நிலையில் லாபத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத தனியார் நிறுவனங்களை அணுவுலை போன்ற பெரும் கதிரியக்க அபாயமிக்கக் கட்டமைப்புகளை செயல்படுத்த அனுமதிப்பது பேராபத்திற்கு வழிவகுக்கும். இதற்கு வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயக்கி வந்த ஸ்டெர்லைட் உருக்காலையே சிறந்த உதாரணமாகும்.
இந்திய மக்களை அணுக்கதிர்வீச்சு அபாயத்தில் தள்ளும் இம்முடிவைத் தமிழ்நாடு அரசு மற்றும் எதிர்கட்சிகள், அமைப்புகள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
CLNDA