சென்னை மணலியில் செயல்படும் குப்பை எரிவுலையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பலமடங்கு அதிகமான அபாயகரமானக் கனவுலோக நச்சுகள் வெளியேறுவது கண்டுபிடிப்பு.
உண்மை கண்டறியும் குழுவின் கூட்டறிக்கையின் சாராம்சம்
பெருநகர சென்னை மாநகராட்சியானது, சென்னையில் சிறிய அளவிலான குப்பை எரிவுலைகள் இரண்டை நிறுவி செயல்படுத்தி வருகிறது. கொடுங்கையூரிலும் மணலி – சின்ன மாத்தூரிலும் செயல்படும் இக்குப்பை எரிவுலைகள் அப்பகுதி மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனை ஆவணப்படுத்தி வெளிக்கொணரும் நோக்கில் நாங்கள் அவற்றின் பாதிப்புகளை விரிவாக ஆய்வு செய்யத் தீர்மானித்தோம். பல முறை அப்பகுதி மக்களிடம் நடத்திய உரையாடல்கள் மற்றும் கள ஆய்வுகளின் தொடர்ச்சியாக ‘மேக்’ நிறுவனத்தால் நிறுவப்பட்ட சின்னமாத்தூர் குப்பை எரிவுலையின் அருகாமைப் பகுதிகளில் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யத் தீர்மானித்தோம்.
எங்கள் ஆய்வு முடிவுகள் நாங்கள் நீண்ட நாட்களாகச் சொல்லிவந்தவற்றை மெய்ப்பித்திருப்பதோடு குப்பை எரிவுலைகள் குறித்தப் போலியான பிரச்சாரங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. NABL அங்கீகாரம் பெற்ற ‘தமிழ்நாடு டெஸ்ட் ஹவுசில்’ செய்த ஆய்வுகளின் அடிப்படையில் சின்ன மாத்தூர் குப்பை எரிவுலைக்கு அருகாமை மண் மாதிரியில் கனவுலோக நச்சுகள் பல மடங்கு அதிகமாக இருப்பது (சான்றிதழ் எண் TC-12551) கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கேட்மியம் எனப்படும் கனவுலோக நச்சு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவைவிட 24 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு, ஈயம், குரோமியம் போன்ற கனவுலோக நச்சுக்களும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கின்றன. இவை, கருச்சிதைவு, கற்றல் குறைபாடு, புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், எலும்பு மண்டலப் பாதிப்புகள், இதய நோய்களை உருவாக்க வல்ல நச்சுக்களாகும். இந்த நச்சு கனவுலோகங்கள் சுவாசத்தின்மூலமாகவும், உணவுச் சங்கிலி மற்றும் தோலில் படுவதன்மூலமாகவும் (குரோமியம்) உடலில் ஊடுருவக்கூடியவை.
நாங்கள் இங்கு அம்பலப்படுத்தியிருப்பது மிகத்தீவிரமான ஒரு பிரச்சினையின் சிறியதொரு இழை மட்டுமே. ஏனெனில், எங்கள் பாதுகாப்பிற்கும் எங்களுக்கு உதவி செய்யும் பொதுமக்களுக்கும் ஆபத்து இருந்த சூழலாலும், விரிவான ஆய்வுகளைச் செய்வதன் நடைமுறைப் பொருளாதாரச் சிக்கல்களாலும் நிலத்தடி நீர், காற்று, அருகாமை நீர் நிலைகள், ஆலையின் கழிவுக் கசிவு நீர் ஆகியவற்றை எங்களால் சோதனை செய்ய முடியவில்லை. குறிப்பாக, டயாக்சின்கள் மற்றும் பியூரான்கள் போன்ற கடும் நச்சு வாயுக்களை – அவை உருவாகும் முக்கியமான மூலம் குப்பை எரிவுலைகளாகவே இருந்தபோதிலும் எங்களால் சோதனை செய்ய முடியவில்லை. ஆய்வுக்கான செலவினங்களால், நாங்கள் செய்த மண் பரிசோதனையிலும் கனவுலோக நச்சுக்களைக் கண்டறிவது மட்டுமே எங்கள் இலக்காக இருந்தது. முழுமையான விரிவான ஆய்வு அப்பகுதியில் செய்யப்பட்டால் நிச்சயமாக நாம் கண்டறியும் முடிவுகள் இன்னும் பேரதிர்ச்சி தருபவையாக இருக்குமென்று நாங்கள் அஞ்சுகிறோம்.
நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பலமுறை இந்த ஆலை குறித்துத் தகவல்கள் பெற முயன்றும் எங்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலையை நிறுவிய மேக் நிறுவனத்தின் இயக்குநர் மாணிக்கம் அவர்கள், பல பிரபலமான செய்தி ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான பொய்யான பல தகவல்களை ஆலை குறித்து தெரிவித்திருக்கிறார். தங்களின் தொழில்நுட்பத்தில் எந்த மாசுகளும் உருவாகுவதில்லை (zero waste) என்று குறிப்பிடும் அவர் குப்பை எரிவுலையில் வெளியாகும் வாயுக்களில் நச்சுக்கள் எதுவும் இல்லை என்றும் அது ‘தூய கார்பன் டை ஆக்சைடு’ மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். இவர், குப்பை எரிவுலையின் சாம்பல் கழிவுகளில் செங்கற்களும் நடைபாதைக் கற்களும் தயாரிக்கப்படுவதாகச் சொன்னாலும் அங்கு அப்படி எதுவும் தயாரிக்கப்படுவதில்லை என்பதோடு அந்த நச்சுச் சாம்பல் திறந்த வெளியில் நேரடியாகக் கொட்டப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம்.
ஒருவேளை அது செங்கல்களாக மாற்றப்பட்டிருந்தால் இதன் பாதிப்பு இன்னும் மோசமானதாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆலையின் நச்சுக் கசிவும் திறந்த வெளியில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதோடு ஆலையில் வெளியேறும் புகையை வடிகட்டும் அமைப்பு எதுவும் நிறுவப்படவில்லை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். மிகமோசமான நச்சுச் சூழலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறை போன்றவற்றைக்கூட இந்த நிறுவனம் வழங்கவில்லை.
எந்த மாசுக்களும் எங்கள் ஆலையிலிருந்து வெளியேறவில்லை என்று கூறும் இந்நிறுவனம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கட்டாயமாக்கியுள்ள எந்த மாசுக்களையும் சோதிக்கவில்லை என்பதே உண்மை. நுண்துகள்கள், சல்பர் ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகளை சோதிப்பதாகப் பட்டியலிடும் நிறுவனம் ஹைட்ரோ குளோரிக் அமிலம், கேட்மியம், பாதரசம், டயாக்சின்கள், பியூரான்கள் போன்ற நச்சுக்களின் வெளியேற்றத்தைக் கண்காணிக்காமல் புறக்கணித்திருக்கிறது. இதைக் கண்காணிக்க வேண்டிய அரசுத் துறைகளும் அலட்சியமாகக் கடந்திருக்கின்றன.
இப்பின்னணியில், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ அமல்படுத்துவது குறித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையில், ஒரு நாளைக்கு 1716 டன் குப்பைகளை எரிப்பதற்காக 57 எரிவுலைகளுக்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதில் 19 எரிவுலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாகவும் எங்களுக்குத் தெரிய வந்தது. சமீபத்தில் தாம்பரத்திலும் கொடுங்கையூரிலும் சின்ன மாத்தூரைவிடப் (300 மடங்கு) பலமடங்கு பெரிய குப்பை எரிவுலைகளை நிறுவப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது.
வெறும் பத்து மெட்ரிக் டன் குப்பையை எரிப்பதிலேயே இவ்வளவு நச்சுக்களின் தாக்கம் இருக்கும்போது இதைவிட நூற்றுக்கணக்கான மடங்கு திறனுடைய குப்பை எரிவுலைகளைச் சென்னையிலும் தமிழகம் முழுவதும் நிறுவும்போது ஏற்படவிருக்கும் நாசங்கள் குறித்து நாங்கள் அஞ்சுகிறோம். குறிப்பாக, கொடுங்கையூர் எரிவுலையை நிறுவுவதற்காக பட்டியலிடப்பட்டிருக்கும் டெல்லி MSW சொலுயூசன்ஸ் நிறுவனமானது பல விதிமீறல்களுக்கும் அபராதங்களுக்கும் பெயர்போனதாகும்.
நாங்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருவதுபோல, குப்பை எரிவுலைகள் கடும் சூழல் மற்றும் சுகாதார மாசுபாட்டையும் நோய்களையும் உருவாக்குபவை. மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பவை. அவை உருவாக்கும் மின்சாரம் நிலக்கரி மின்சாரத்தைவிட மிகமோசமான கார்பன் உமிழ்வைச் செய்யக்கூடியது. மேலும், குப்பைகளைச் சிறப்பாகக் கையாளும் உட்கட்டமைப்புகளைச் சிதைத்து வேலை வாய்ப்புகளையும் வாழ்வாதாரங்களையும் குப்பை எரிவுலைகள் அழிக்கின்றன. விளிம்பு நிலை மக்களைக் கூடுதலாகப் பாதிக்கும் இவை சமூக நீதிக்கும் சூழல் நீதிக்கும் முரணானவை.
இவற்றைக் கருத்தில்கொண்டு ஏற்கனவே நிறுவப்பட்டு செயல்பாட்டிலிக்கும் குப்பை எரிவுலைகளை இழுத்து மூடுவதோடு புதியதாகத் திட்டமிடப்படும் குப்பை எரிவுலைகளையும் கைவிட வேண்டுமென்றும் திறன்மிக்கப் பாதுகாப்பானக் குப்பை மேலாண்மையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் நாங்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.
உண்மை அறியும் குழு
விசை, பூவுலகின் நன்பர்கள், கொடுங்கையூர் தோழர்கள், Foundation for Friendly Environment and Medical Awareness (FEMA) சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு (CCAG), Centre for Financial Accountability (CFA), மதுவந்தி ராஜ்குமார்-வழக்கறிஞர்







தொடர்புக்கு: ஜீயோ டாமின் 7708020668
முழு கூட்டறிக்கையைப் படிக்க –
Waste Incineration-Zero Pollution or Zero Truth_
ஆங்கில செய்திக் குறிப்பு:
FFM Press release (2) (2)https://drive.google.com/file/d/1gVeUOBp9orxjDfBp4-fPGNfLiJAVK0N2/view?usp=drive_link