GPI எனப்படும் அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் 80% பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியமானது 2 வகையான தொழிற்சாலைகளை அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலை (Grossly Polluting Industry- GPI, இனி GPI என குறிப்பிடப்படும்) என வரையறுத்துள்ளது.
அ) நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியிடும் தொழிற்சாலைகள்
ஆ) கேடுதரும் ரசாயனப் பொருட்களைக் கையாளும் தொழிற்சாலைகள் அல்லது நாளொன்றுக்கு 100 கி.கி. அல்லது அதற்கு மேலான Biological Oxygen Demand(BOD)யைக் கொண்டிருக்கும் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலை.
மாநகரங்கள், நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் சுத்திகரிக்கப்படாத மற்றும் ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ஆறுகளில் கலப்பதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆறுகள் பெருமளவு மாசுபடுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் எழுத்துர்ப்பூர்வ பதிலளித்தார். அதில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, பல்வேறு நீர்நிலைகளில் அவற்றின் கழிவுகளை வெளியேற்றும் 3,519 மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் நாட்டில் உள்ளன.
இவற்றில் 2,849 தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், 670 தொழிற்சாலைகள் தாமாகவே மூடப்பட்டுள்ளன. இவற்றுள் சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்கும் மற்றும் இணங்காத நிறுவனங்களின் எண்ணிக்கை முறையே 2,754 மற்றும் 95 ஆகும்.
விதிகளுக்கு இணங்காத தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பொறுத்தவரை, 21 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 73 தொழிற்சாலைகளை மூடுவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 1 தொழிற்சாலைக்கு எதிராக சட்டப்பூர்வ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள 3,519 GPI களில் 80% GPI கள் உத்தரபிரதேசம் (1,644) மற்றும் ஹரியானாவில் (1,140) உள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் மொத்த GPI களில் 47% GPI கள் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சிதான் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத GPI களை அதிகம் கொண்ட மாநிலமும் உத்தரபிரதேசம்தான். தமிழ்நாட்டில் இத்தகைய நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் உள்ள தொழிற்சாலைகளை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– செய்திப் பிரிவு