வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை – ஓர் பார்வை

Image: PARI

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பஞ்சாப் முதல்வருமான சரஞ்சித் சிங் சன்னி தலைமையிலான வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, விவசாயத் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் பெயரை மாற்ற பரிந்துரைத்துள்ளது.

மார்ச் 12, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட SEVENTH REPORT OF THE STANDING COMMITTEE ON AGRICULTURE, ANIMAL HUSBANDRY AND FOOD PROCESSING (2024-25) எனும் இவ்வறிக்கையில் ‘வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை’ என்ற பெயரை ‘வேளாண்மை, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலத்துறை’ என்று மாற்றலாம் என்று குழு கூறியுள்ளது. வேளாண் துறையில் விவசாயத் தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்கப் பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் அமையும் என்றும் அதன் மூலம் பல சாத்தியமான நன்மைகளைப் பெற முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெரும்பாலும் விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களே விவசாயத் தொழிலாளர்களில் ஒரு கணிசமான பகுதியாக உள்ளனர். ஆனால், கொள்கை விவாதங்கள் மற்றும் நலத்திட்டங்களில் அவர்கள் போதுமான அளவு கவனிக்கப்படுவதில்லை,” என்று குழு கூறியுள்ளது. ஊதிய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ‘பண்ணைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்திற்கான தேசிய ஆணையத்தை’ நிறுவவும் இக்குழு பரிந்துரைத்தது.

இந்திய விவசாயத் தொழிலாளர்களின் இன்றைய நிலை:

அண்மையில் பீப்பிள்ஸ் ஆர்சிவ் ஆஃப் ரூரல் – PARI இந்தியா தளத்தில் வெளியாகி இருந்த “கோலாப்பூர் கரும்பு தோட்டங்களில்: ஓர் கசப்பான அறுவடை” என்னும் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதி கரும்பு சாகுபடிக்கு பெயர் போனது. அங்குள்ள தோட்டங்களில் கரும்பு வெட்டுவதற்கு மராத்வாடாவின் வறட்சியான பகுதிகளில் இருந்து கூலியாட்கள் குடும்பம் குடும்பமாக லாரிகளில் கொண்டு வந்து குவிக்கப்படுவர். அவர்கள் கரும்பு வெட்டும் ஊர்களிலேயே தார்ப்பாய்களில் குடியமர்த்தப்படுவர். அதற்கும் மாத வாடகை ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவர்கள் பிள்ளைகளால் பள்ளிக்குச் செல்ல முடியாது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயர்ந்துக் கொண்டே இருக்கும் அவர்களால் எப்படி தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியும். எனவே பெற்றோரோடு சேர்ந்து அந்த பிஞ்சுகளும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வர். பெரியவர்கள் கரும்பு வெட்டினால் குழந்தைகள் மாட்டிற்கு கொழுத்தடை கட்டுவர். அதற்கு ஒரு சிறு தொகை கூலியாக கொடுக்கப்படும்.

காலை முதல் பொழுது சாயும் வரை கரும்பு வெட்டினால் அவர்களுக்கு கிடைக்கும் பணம் டன் ஒன்றிற்கு 273 ரூபாய் மட்டுமே. ஆலைகளுக்கு செல்லும் கரும்பின் விலை டன் ஒன்றிற்கு 3000 க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு குறைவான வருமானத்திற்காக இத்தொழிலாளர்கள் ஏன் இடம்பெயர்ந்து வந்து இத்தனை அல்லல் படுகிறார்கள் என்றால் கடன்தான் காரணம்.

இத்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர் முன்கூட்டியே அவர்களுக்குச் சில ஆயிரங்கள் முதல் லட்சங்கள் கடனாகக் கொடுத்து அவர்களைத் தன் வலையில் வீழ்த்தி விடுவார். அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியே 30-60 சதவீதம் இருக்கும்போது அவர்களால் தாங்கள் வாங்கிய கடனை ஒரு போதும் அடைக்க முடியாது. எனவே வாங்கிய கடனை அடைப்பதற்காகவே குறைவான சம்பளத்திலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமலும் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்து விடும் தொழிலாளர்களின் வாழ்க்கை. குறைந்தபட்சம் விவசாயிகளுக்கு இருக்கும் கடன் பெரும் வசதிகள் விவசாய தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டால் அவர்கள் இது போன்ற மீளா கடன் சுமையில் விழுவதை குறைக்க முடியும்.

முன்னாள் பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னி

இது போன்ற விளிம்பு நிலைத் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியத்தை நிர்ணயம் செய்ய அரசிற்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை விவசாய தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது மகிழ்ச்சிக்குறியது. ஏனெனில் விவசாயத்தில் நிலவுடைமையாளர்களின் சதவீதம் என்பது வெகு சொற்பம் தான். நிலமில்லாத குத்தகைதாரர்களும் விவசாய கூலி தொழிலாளர்களும் தான் பெரும்பாலும் விவசாயத்தில் நேரடியாகவும் முழுநேரமும் ஈடுபடுபவர்கள். எனவே இது போன்ற அரசின் ஊக்கத்தொகைகளும் கடன் வசதிகளும் அவர்களைச் சென்று சேர்வதுதான் உண்மையான பலனை அளிக்கும்.

தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் நிலை:

தமிழகத்தின் நிலை வேறு, இங்கு விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் கரும்பின் விலையில் மூன்றில் ஒரு பங்கை வெட்டுக் கூலியாக கொடுக்க வேண்டிய நிலை. கரும்பு மட்டுமின்றி மற்ற விவசாய வேலைகளுக்கும் வழங்கப்படும் கூலி மற்ற வட மாநிலங்களை ஒப்பிடும்போது சற்று ஆறுதலாகவேத் தெரிந்தாலும் வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களின் வருமானத்தோடு ஒப்பிடும்போது விவசாய தொழிலாளர்களின் வருமானம் குறைவுதான்.

இதற்குக் காரணம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாய விளைபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அரசும் அதனால் பலன் பெரும் பெரு நிறுவனங்களும்தான். தமிழ்நாட்டில் விவசாய தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய கூலியை வலியுறுத்தி கேட்கும் சூழல் உருவானது வரவேற்க வேண்டிய ஒன்றே. சவுக்கடி சாணிப் பால் தண்டனைகள் எல்லாம் மாறி தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பண்ணையாளர்களிடம் கூட்டு பேரத்தில் ஈடுபடும் நிலை மகிழ்ச்சிக்குறியது. எனினும் வளர்ந்து வரும் பொருளாதார நிலைக்கு ஏற்ப, உயர்ந்து வரும் விவசாய செலவினங்களை கணக்கில் கொண்டு, காலநிலை மாற்ற பாதிப்புகளை மனதில் கொண்டு இங்கு விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப் படுவதில்லை.

எனவே முதல் போட்டு பாடுபட்டு ஆறு மாதங்கள் ஓராண்டு எனக் காத்திருந்து உணவு உற்பத்தி செய்யும் விவசாயி விவசாயத்திலிருந்து வரும் வருமானம் போதாமல் கட்டிட வேலைக்கோ கடைகளுக்கோ சென்று வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. நினைத்துப் பாருங்கள் தகவல் தொழில்நுட்ப வேலையிலோ, அரசாங்க அதிகாரியாகவோ, சிறு வணிகராகவோ ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியிலோ இருக்கும் நீங்கள் உங்கள் வருமானம் போதாமல் உணவு டெலிவரி செய்யவோ, ஓலா – ஊபர் என்று கார் ஓட்டவோ காப்பீடு முகவராகவோ, இரவு காவலாளியாகவோ வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டால் உங்கள் மனம் எப்படி கொந்தளிக்கும்.

விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாத சூழலில் விவசாயத்தோடு வேறு வேலைகளும் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கும் பெரும்பாலான சிறு குறு விவசாயிகள் படிப்படியாக விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். இதே நிலைத் தொடர்ந்தால் கூடிய விரைவில் விவசாயம் முற்றிலும் கார்ப்பரேட் கைகளில் சென்று விடும். அப்பொழுது மீண்டும் விவசாயத் தொழிலாளர்களின் நிலை பண்ணை அடிமை நிலையை விட மோசமாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

நிதி ஒதுக்கீடு:

விவசாயத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியின் அளவு தொடர்ச்சியாக குறைந்து வருவதை இக்குழு சுட்டிக் காட்டுகிறது. 2021-22, 2022-23, 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான மொத்த மத்திய செலவினத்தில் சதவீதத்தின் அடிப்படையில் விவசாய அமைச்சகத்திற்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் விகிதம் முறையே 3.53%, 3.14%, 2.57%, 2.54% மற்றும் 2.51% ஆக இருக்கிறது. “மத்திய திட்ட செலவினத்தின் விகிதத்தில் துறைக்கான ஒதுக்கீடுகளில் தொடர்ச்சியான சரிவை இவை காட்டுகின்றன. 50% க்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருக்கும் சூழலில், இந்த வீழ்ச்சிப் போக்கை அமைச்சகம் தடுத்து நிறுத்த வேண்டும்”, என்று குழு அறிவுறுத்துகிறது.

மேலும் நிதியின் பயன்பாட்டை சீரான இடைவெளியில் கண்காணிக்கவும், ஒதுக்கப்பட்ட தொகைகள் செலவிடப்படாமல் இருப்பதை தவிர்க்கவும் அந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும் தேவையான செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளை அமல்படுத்துமாறு குழு அமைச்சகத்திடம் கோரியது. பெரும்பாலான மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த விவசாயிகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் அப்படியே இருந்ததை கண்டறிந்து குழு அதிர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியதும் அது முறையாக முழுமையாகப் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் இன்றியமையாத கடமை.

இயற்கை விவசாய விளைபொருளுக்கு தனி MSP:

வழக்கமான பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை – MSP உடன் கூடுதலாக அனைத்து அங்ககப் பயிர்களுக்கும் (MSP) வழங்க வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. “இருப்பினும் அங்ககப் விளைபொருட்களுக்கான MSPக்கான தேவை சுவாமிநாதன் சூத்திரத்தின் அடிப்படையில் பரந்த MSP தேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, MSP கட்டமைப்பை அங்ககப் விளைபொருட்களை உள்ளடக்கியதாக சட்டப்படி விரிவுபடுத்த வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மாறும் ஆரம்ப ஆண்டுகளில் குறைந்த மகசூல் சவால்கள் இருந்தபோதிலும் இது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற ஊக்குவிக்கும்,” என்று குழு கூறியுள்ளது.

மகசூல் வீழ்ச்சி மற்றும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதோடு தொடர்புடைய செலவுகளை ஈடுசெய்ய, இயற்கை விளைபொருட்களுக்கான MSP வழக்கமான பயிர்களை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. எனினும் இயற்கை விவசாயத்திற்கான கொள்கைகள் 2004 முதலே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தத் தொடங்கி இருந்தாலும் நிதிநிலை அறிக்கையில் இயற்கை விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதி வெகு சொற்பம்தான். போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிசான் மேலாக்கல் மூலமும் பயிற்சி வகுப்புகள் மூலமுமே இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளைத் திருப்பி விடலாம் என்று அரசு நினைத்து விட்டது போலும். அதனால்தான் இயற்கை விவசாயத்திற்கான தேசிய மையம் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன பின்னும் நாட்டில் இயற்கை விவசாய நிலங்களின் சதவீதம் நான்கு சதவீதமாக மட்டுமே உள்ளது. காலநிலை மாற்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா இயற்கை விவசாயத்தில் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பது இத்தரவுகளைப் பார்த்தாலேத் தெரியும்.

மேலும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் அடிப்படையில், இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு “இலவச மற்றும் கட்டாய” பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசுக்கு குழு பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை சிறு விவசாயிகளுக்கு பயிர் இழப்புகளுக்கு எதிரானப் பாதுகாப்பை வழங்கும். இதன் விளைவாக விவசாயிகள் கடன் பொறிகளைத் தவிர்க்க முடியும். பயிர் காப்பீடு, சரியான நேரத்தில் இழப்பீடு வழங்குவதன் மூலமும், கந்து வட்டி வழங்குபவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதன் மூலமும், முறைசாரா மூலங்களிலிருந்து சிறு விவசாயிகள் அதிக வட்டி கடன்களை நம்பியிருப்பதைக் குறைக்கிறது,” என்று அறிக்கை கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் விவசாயத் தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் அவர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியம் மற்றும் பிற பலன்கள், அரசின் மொத்த செலவினத்தில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டிய தேவை, இயற்கை விவசாய பொருட்களுக்கு தனி MSP, ஒப்பீட்டளவில் இயற்கை விளைபொருளில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் அவை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் குறைந்த தாக்கம் போன்றவற்றை கணக்கில் கொண்டு அவற்றுக்கு கூடுதல் விலை நிர்ணயம், இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுக்கான தேவை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அவற்றை முறையாக நிறைவேற்றுவது, கட்டாய இலவச பயிர்க்கடன் என்று இந்நிலைக்குழுவின் அறிக்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் வரவேற்கத் தகுந்தவையே. இவையெல்லாம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டால் மகிழ்ச்சியே.

– அகிலன் பாலகுரு

_lsscommittee_Agriculture, Animal Husbandry and Food Processing_18_Agriculture_Animal_Husbandry_and_Food_Processing_7
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments