அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை

பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள்

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கிவந்தது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.

இத்திட்டதிற்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை ஆராய்ந்தபின் இத்திட்டதின் காரணமாக சூழலுக்கு பாதிப்புகளே அதிகமாக அமைய வாய்புள்ளதாக தெரிகிறது. அவற்றில் முக்கியமான பாதிப்புகளாக கீழ்கண்ட சிலவற்றைக் குறிப்பிடலாம்.

நில ஆக்கிரமிப்பு :

இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளனர்.

நில பயன்பாட்டில் மாற்றம் :

இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து  மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும்.

மீன் வளம் & மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு :

இப்பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான கடல் பகுதிகள் ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடலுணவுகள் அதிகம் கிடைக்கும்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் உள்ளிட்ட 80 தமிழக ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

சூழலியல் அபாயம்:

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரி இத்திட்டம் வரவிருக்கும் காட்டுப்பள்ளி பகுதிக்கு வடக்கில் அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழிமுகமும், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் சூழப்பட்டிருப்பதால் இது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக CRZ-1 (critical for maintaining ecosystem of coast) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதின் மூலமாக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி அழிவதற்க்கான வாய்ப்புள்ளது.

வெள்ள அபாயம் :

மழைக் காலங்களில் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் தான் “வெள்ள வடிகாலாகச்” செயல்பட்டு சென்னையைக் காக்கின்றன.

ஏற்கனவே, சென்னை காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்தினாலும், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாகவும், கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில கிமீ.களாக இருந்த கடற்கரை தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கியுள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி உள்ள இந்நிலையில், இந்தத் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. அதன் பின், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

கடல் அரிப்பு :

ஏற்கனவே சென்னையில் உருவாகியிருந்த காமராஜர் துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களின் விளைவாக எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராம்ம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்துவிட்டன. தற்பொழுது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால் பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.

கடல் நீர் உட்புகுதல்:

கண்மூடித்தனமான தொழிற் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக ஏற்கனவே எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகள் அதிக சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. காலநிலை மாற்றம், கடல்நீர்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களாலும் (Extreme Climatic Events) சென்னை தொடர்ந்து ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் மேலும் சூழல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பழவேற்காடுப் பகுதியில் இத்திட்டத்தின் மூலம் கடல் நீர் உட்புகுதல் மேலும் அதிகரிக்கும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கும்.

உயிர் பன்மைய அழிவு:

இத்திட்டத்தின் மூலமாக என்னூர் – பழவேற்காடு பகுதி இயற்கை சூழலும், அதன் உயிர் பன்மயமும் அழியக்கூடிய வாய்ப்புள்ளது.  மீன் வளம் அழிவதினால்  அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.

கடலும், பழவேற்காடு ஏரியும் சங்கமிக்கும் முகத்துவாரத்தின் வழியாக, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கும்; அடுத்த, ஆறு மணிநேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். கடல் வாழ் உயிரினங்கள், நீர் ஏற்றத்தின் போது, ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இங்கு இயற்கையாக நடக்கும் நிகழ்வு.

இதனால் இப்பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்கள், 25 வகையான மிதவை புழுக்கள், பலவகையான மெல்லுடலிகள், வெள்ளை இறால், சிங்கி, கோட்ரால், செமக்கை, வழிம்பு, பூச்சி ஆகிய இறால் வகைகளும், பச்சை கட்டு நண்டு, கோரக்கைகால் நண்டு, முக்கன் நண்டு ஆகியவையும் அதிகளவில் உற்பத்தியாகும் இடமாக திகழ்கிறது.

இதுமட்டுமல்லாமல் எண்ணெற்ற வலசைப் ப்பறவைகளுக்கும் இயல் பறவையினங்களுக்கும் வாழிடமாகப் பழவேற்காடுத் திகழ்கிறது. இங்கு பூநாரைகள், கூழக்கடாக்கள், கடற்காகங்கள், நாரைகள், கொக்குகள், பல்வேறு வகையிலான வாத்துகள் மற்றும் கழுகுகள் போன்ற நூற்றுகணக்கான வகை பறவைன்ங்கள் வாழ்கின்றன.

இவ்வாறு செழிப்பான உயிர்ப்பன்மைக்கு ஆதாரமாக விளங்கும் பழவேற்காடு ஏரி வளர்ச்சி என்ற பெயரில் அழிவதை நாம் வேடிக்கை பார்க்கபோகிறோமா?

ஆரணி-கொற்றலை ஆறுகள் :

இப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே இதனால் அழியும். இந்த இயற்கையான அமைப்புகள் ஆரணி-கொற்றலை ஆற்றின் நன்னீர்ப் பகுதிகளில் உவர்நீர்ப் புகாமல் தடுக்கின்றன. இதைச் செயற்கையாக மாற்றுவது சரிசெய்ய முடியாத மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும்.

பழங்குடி மக்களுக்கான ஆபத்து:

எண்ணூர்-பழவேற்காடு பகுதி என்பது இருளர் உள்ளிட்ட பல பழங்குடி சமூகங்களின் வாழ்விடமாக உள்ளது. இந்த நிலப்பரப்பில் கிடைக்கபெறும் மீன்வளம், இயற்கை வளங்களைக் கொண்டு தங்கள் தற்சார்பான வாழ்க்கையை அவர்கள் அமைத்துகொண்டுள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் கிடைக்கும் நன்னீர் ஊற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு தங்களின் வாழ்விடங்களை அமைத்து அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் அதானித் துறைமுகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் பழங்குடியினரின் வாழ்வுமுறை முற்றிலுமாக சிதைக்கப்படும்.

துறைமுகங்களை கைப்பற்ற துடிக்கும் அதானி:

நாடுமுழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் அதானி குழுமம் விவசாயிகளோடு நில்லாமல் மீனவர்கள் வயிற்றில் அடிப்பதற்கும் முனைப்பு காட்டி வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமதிற்கு  முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விழிஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் தாரைவார்க்கபட்டுள்ளன.  இந்த நிலையில் தமிழக நிலப்பகுதியில் உள்ள துறைமுகத்தையும் அது சார்ந்த வர்த்தகத்தையும் அதானிக்கு ஒப்படைப்பதை சூழலியல் ரீதியாகவும் தமிழகத்தின் பொருளாதார நலன் அடிப்படையிலும் நாம் எதிர்க்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் இலாபவெறிக்காக  தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்துவோம்.

இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி  நடைபெறவுள்ளது. மக்களுக்கு திட்டத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும், அதனால் இந்த மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.

சென்னையை நிரந்திரமாக வெள்ளக்காடாக மாற்றப்போகும் அதானி துறைமுக விரிவாக்கத்தை கைவிடும்படி தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுக்க எதிர் கட்சி உள்ளீட்ட அனைத்து கட்சிகளையும், சமூக இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு:- வீ.பிரபாகரன் 7395891230

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments