பழைய அனல்மின் நிலையங்களை மூடிவிட்டு அங்கு சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்வதால் பலன் கிடைக்கும் – CRH ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் பழைய நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை நிறுத்தி விட்டு மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம், தமிழ்நாடு  ₹4000 கோடி வரையில் லாபம் அடையலாம் என்று Climate Risk Horizon என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பழைய நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தியை நிறுத்திவிட்டு அக்கட்டமைப்பை  மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைப்பதன் மூலம்  மாநிலத்தின் மின்சார உற்பத்திக் கட்டமைப்பை ஒரு நிலைத்தன்மைக்குக் கொண்டுவர முடியும் எனவும்,  மேலும் ₹4000 கோடி வரை இதனால் லாபம் உண்டாகும் என்றும் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் அமைப்பு ‘Financial benefits of repurposing Tamil Nadu’s old coal plants’ எனும் பெயரில் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கின்றது. (Repurposing என்பது ஆயுள் முடிந்த அல்லது முடியும் தருவாயில் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் அதன் சாம்பல் குட்டைகளுக்கான இடம் மற்றும் அதன் கட்டுமானம், தொடரமைப்பு, மின்கல சேமிப்பு ஆகியவற்றின் சில பகுதிகளை சூரிய மின்னுற்பத்தி போன்ற புதுப்பிக்கத்த ஆற்றல் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில் மாற்றியமைப்பதாகும்).

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் முனைவர் கிரீஷ் ஸ்ரீமலி மற்றும் முனைவர் அபினவ் ஜிண்டால் தமிழ்நாட்டில் உள்ள 3990MW உற்பத்தித் திறன் கொண்ட பழைய நிலக்கரி சார் அனல் மின்நிலையங்களை [தூத்துக்குடி I,II & III (1050 MW), மேட்டூர் I & II (840 MW), வட சென்னை  stage I (630 MW) & நெய்வேலி II stage I (1470 MW)] நிறுத்துவதில் உள்ள செலவுகளையும், லாபங்களையும் இந்த ஆய்வின் மூலம் அளவிட்டுள்ளனர்.

இந்த அனல்மின் நிலையங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள வாழ்நாளையும் தாண்டி அல்லது இறுதி கட்டத்திலும், செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்தின்  விலை அதிகமாக இருப்பதுடன், நிலக்கரி விநியோகத்திற்காக மிகவும் நீண்ட விநியோகத் தொடர்களை நம்பியுள்ளன. அண்மையில் நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட  பிர்ச்சனைகளால் உண்டான மின்சார உற்பத்தி பாதிப்பு இந்த விநியோகத் தொடர் எவ்வளவு எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடியது என்பதை உணர்த்துகிறது.

CRH-ன் முந்தைய ஆய்வில் இப்பழைய அனல்மின் நிலையங்களை நிறுத்துவதாலும், அவற்றை புதிய, மலிவான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு மாற்றுவதன் மூலமும் குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்  ₹35,000 கோடி வரை  சேமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

“இந்த அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டால், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கு (Decommissioning)  ஆகும் செலவினை விட 2-3 மடங்கு அதிக லாபத்தை ஈட்டுவதோடு புதிய சூரிய மின் தகடு, மின்சல சேமிப்பு ஆகியவற்றை வாங்குவதற்கு தேவைப்படும் முதலையும் ஈட்டமுடியும் என்பதை எங்கள் ஆய்வு எடுத்துரைக்கின்றது” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் கிரீஷ்.

மேற்குறிப்பிட்டுள்ள 4 அனல்மின் நிலையங்களை மொத்தமாக செயலிழக்கம் செய்வதற்கு ₹1,300 கோடி செலவாகும் நிலையில், அவற்றை சூரிய மின் ஆற்றல் உற்பத்தி நிலையமாக மாற்றியமைப்பதால் ₹2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலன் கிடைக்கும். மேலும் repurpose செய்கையில், பழைய அனல்மின் நிலையத்தின் டர்போஜெனரேட்டரை மின் தேக்கியாக பயன்படுத்தினால் ₹4000 கோடி வரை பலன் கிடைக்கும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் நிலங்களையும், மின் தொகுப்பு கட்டமைப்புகளையும் உபயோகிப்பதன் மூலம், மின்சார உற்பத்தியின் செலவு பெரிதளவு குறையும். இது மின்சாரத்தின் விலையை, ஒரு யூனிட்டுக்கு ₹1.42 (சூரிய மின்னுற்பத்தி) மற்றும் ₹2.33 (மின்கல சேமிப்புடன் கூடிய சூரிய மின்னுற்பத்தி) ஆக குறைக்கும். இது TANGEDCOவை மிக மலிவான வழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும்.

“தமிழ்நாட்டின் எரிசக்தி உற்பத்தி மற்றும் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, விலையுயர்ந்த, வழக்கற்றுப் போன நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலயங்களை கைவிடுவது அவசியமாகிறது. நிலக்கரி மின்னுற்பத்தி ஆலைகளால் ஏற்படும் காற்று, நீர் மாசு அதிகமாகி வருவதையும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு நீண்ட காலத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும்” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மின்வாரியம், பழைய விலைமிகுந்த அனல்மின் நிலையங்களை மூடுவது பற்றியும், அதன் மின்னுற்பத்தி முறைகளை மாற்றம் செய்வது பற்றியும் சிந்திக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் நிதி நலனையும், சூழல் நலனையும் மேம்படுத்தவும் மின்சார துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் அமைப்பின் தலைவர் திரு ஆஷிஷ் ஃபெர்னான்டஸ்.

பழைய அனல்மின் நிலையங்கள், அவற்றிற்கான நிலக்கரி சாம்பல் குட்டைகளுக்கான இடங்களில் சூரிய மின்தகடு மற்றும் மின்கலங்களை பயன்படுத்துவதன் மூலம், 348 MW சூரிய ஆற்றல் மற்றும் 36 MW/ 4 மணிநேர மின்கல சேமிப்புத் திறனை அடையலாம்.

 

முழு ஆய்வறிக்கைக்கு: https://climateriskhorizons.com/research/

 

தொடர்புக்கு:

ஆஷிஷ் பெர்ணாண்டஸ் <[email protected]> +1 857 288 9357

கோ.சுந்தர்ராஜன் +919841031730

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments