அதிகரிக்கும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 11 மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் நடப்பு கோடைகாலமான ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்தில் வெப்பாலையின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்திருந்தது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மா நிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெப்பஅலைத் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
இதைக்கருத்தில் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா.ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், வீடற்றவர்கள், திறந்தவெளியில் பணியாற்றுபவர்கள் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வெப்பஅலைத் தாக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2018 முதல் 2022 இடையிலான காலத்தில் மட்டும் இந்தியாவில் 3,798 பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்திருப்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள NHRC வெப்பஅலைத் தாக்கத்தை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கலைப் பின்பற்றுமாறு கூறியுள்ளது.
– செய்திப் பிரிவு