பூவுலகின் நண்பர்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து நடத்தும் “ இளையோரும் காலநிலையும்” கருத்தரங்கம்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் இப்புவியில் வாழும் எல்லா உயிரினங்களையும் அழிவின் அபாயயத்தில் தள்ளும் அளவிற்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஐ.பி.சி.சி. உள்ளிட்ட பன்னாட்டு காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்புகள் அனைத்தும் இன்னும் சில பத்தாண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5° செல்சியசிற்கு உயர்ந்துவிடும் எனவும் அப்படி உயர்ந்து விட்டால் மீளவே முடியாத பாதிப்புகளை நம் பூமியானது சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்தக் காலநிலை மாற்றத்தின் தீவிரமானது அண்மைக் காலமாக தமிழ்நாட்டிலும் உணரப்பட்டு வருகிறது. அதீத கனமழை, கடும் வறட்சி, புயல்கள், கடல் சீற்றம், கடலரிப்பு, கடல் நீர் உட்புகுதல் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளை தமிழ் நாடு சந்தித்து வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எதிர்கொள்ளவும், மட்டுப்படுத்தவும் நாம் தயாராக வேண்டியிருப்பதால் இளையோர் மத்தியில் இப்பிரச்சனையின் தீவிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருதுகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு வருகிற 17.08.2022 அன்று மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் அக்கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து “இளையோரும் காலநிலையும்” என்கிற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு மாண்புமிகு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையாற்றித் துவக்கி வைக்கிறார். கல்லூரியின் தாளாளர் திரு.தவமணி கிறிஸ்டோபர் துவக்கவுரையும், கல்லூரியின் பசுமை மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜேஷ் வரவேற்புரையும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த திரு.சுந்தர்ராஜன் அவர்கள் கருத்துரையும், கல்லூரியின் துணை தாளாளர் திரு.மார்டின் டேவிட் நன்றியுரையும் வழங்குகின்றனர்.
அமர்வு 1:
காலநிலை மாற்றமும் அரசு நிர்வாகமும் எனும் அமர்வில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும், Dravidian Professionals Forumயைச் சேர்ந்த தரணிதரனும் உரையாற்றுகின்றனர்.
அமர்வு 2:
உயிர்ப்பன்மையத்தின் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் எனும் தலைப்பில் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த திரவிய ராஜ், சதுப்பு நில உயிர்ப்பன்மையம் குறித்து ஆய்வாளர் மேகா சதீஷ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
அமர்வு 3:
உணவு மற்றும் நீர்வளத்தின் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேராசிரியர் ஜனகராஜன் மற்றும் இயற்கை வேளாண் ஆய்வாளர் பாமயன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
அமர்வு 4:
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணித்தல், மட்டுப்படுத்துதல் குறித்து முனைவர் விஜய் அசோகன், ப்ளாஸ்டிக் அபாயம் குறித்து ஜீயோ டாமின், நீர்நிலை மீட்பு குறித்து நிமல் ராகவன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
Register: https://docs.google.com/…/1FAIpQLSczi5bL9cb…/viewform…