கடலூரில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் “ நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தின் (NNTPS) அலகு ஒன்றில் (UNIT – I) நேற்று (22.12.2022) காலை 11.30 மணி அளவில் ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேரும், ஒரு நிரந்தர பணியாளரும் பலத்த காயமடைந்தனர். இவ்விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இது போன்ற விபத்துகள் நடப்பது முதல் முறையல்ல. கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவத்திற்குச் சொந்தமான அனல்மின் நிலைய அலகுகளில் ஏற்பட்ட 22 விபத்து சம்பவங்களில் 29பேர் உயிரிழந்துள்ளனர்.
2020ம் ஆண்டு ஜூலை 01ம் தேதி இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5வது அலகில் உள்ள கொதிகலன் வெடித்ததில் 14பேர் உயிரிழந்தனர், 2020ம் ஆண்டு மே 05ம் தேதி கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்தும், அதற்கு இரண்டு நாள் கழித்து மே 07ம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தின் Phase II, அலகு 6ல் பாய்லர் வெடித்ததில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். இரண்டரை ஆண்டுகளில் நான்கு பெரிய விபத்துக்கள் நடத்துள்ளன.
ஒவ்வொரு முறை விபத்து நடக்கும் போதும், நிர்வாகத்தால் அது தனிநபர் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதே தவிர மைய பிரச்சனைகளை ஆராய்ந்து சரி செய்ததாக தெரியவில்லை. 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விபத்து குறித்த அறிக்கை வெளிப்படைத்தன்மை இல்லாமலும் தற்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படாமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இவ்விபத்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளை தர என்.எல்.சி. நிர்வாகம் மறுத்து வருகிறது.
நெய்வேலியில் தொடரும் இது போன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம் போதிய பயிற்சியும் தொழில்நுட்ப அனுபவமும் இல்லாத தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் கொதிகலன் இயக்குவது / பராமரிப்பது போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தான். விபத்தைத் தவிர்க்க கூடிய அல்லது விபத்து சூழலை கையாளக்கூடிய ஆற்றல் இல்லாதவர்களை வைத்து கொதிகலன்களை இயக்கி விட்டு பின் தனி நபரின் மீது பழிபோடுவது எப்படி சரியான போக்காகும்.
கடந்த பல ஆண்டுகளாக என்.எல்.சி. தொழிலார்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள், என்.எல்.சியின் நிர்வாக சீர்கேடும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இயக்க தர குறைபாடும் (Poor operational practices) விபத்திற்கான கூடுதல் காரணங்கள்.
வேறு எந்த அனல்மின் நிலையங்களிலும் இல்லாத அளவிற்கு என்.எல்.சியில் அதிகமாக விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வருவதால் என்.எல்.சி. நிர்வாகம் மீது தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் கூற்று இன்று மற்றொருமுறை உண்மையாகியுள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும், விபத்துக்களை அதிகரிக்கும் இது போன்ற அனல்மின்நிலையங்களையும், ஆபத்தான அணுமின்நிலையங்களையும் மூடிவிட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பான புதுப்பிக்கக்கூடிய பரந்துபட்ட (Decentralized) சூரியஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை நோக்கி தமிழ்நாடு பயணிக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.