கடல் ஆமைகள் பாதுகாப்பிற்கான மத்திய அரசின் செயல் திட்டம் அதானியிடமிருந்து ஆமைகளை காக்குமா?

இந்திய கடல் ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் National Marine Turtle Action Plan (2021-2026) ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்திய கடற்பகுதியில் சித்தாமை (அ) பங்குனி ஆமை Olive Ridley (Lepidochelys olivacea), பேராமை(Green Turtle), அழுங்கு ஆமை(Hawksbill), பெருந்தலை ஆமை( logger head), தோணியாமை (அ) ஏழு வரி ஆமை( Leatherback turtle) ஆகிய 5 வகையான ஆமைகள் காணப்படுகின்றன. இந்த 5 வகையான ஆமைகளும் வனவுயிர் பாதுகாப்புச் சட்டம் 1977 கீழ் ஒன்றாம் அட்டவணை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ளன. உலகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகம் முட்டையிடும் பகுதியாக இந்தியா விளங்குகிறது. Loggerhead ஆமைகளைத் தவிர பிற 4 வகையான ஆமைகளும் இந்திய கடற்கரை மற்றும் சுற்றியுள்ள தீவுகளில் முட்டையிடுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஆயிரம் முதல் 11லட்சம் வரையிலான ஆமைகள் இந்திய கடற்கரையில் முட்டையிடுகின்றன. இந்த கடற்கரை பகுதிகளில் மனித நடவடிக்கைகள் மற்றும் சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் இந்த ஆமை முட்டைகள் இடும் கடற்கரை பகுதிகள் சேதமாகின்றன. இதனால் கடல் ஆமைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

இந்திய கடல் ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆமைகள். முட்டையிடும் இடங்கள் கண்டறியப்பட்டு அவை கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் பகுதி 1ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் தாண்டி தற்போது இந்திய கடல் ஆமைகளை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் ஒன்றை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

 

செயல் திட்டம்

 

  • கடல் ஆமைகள் எண்ணிக்கையை பாதிக்கும் காரணிகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவது.
  • கடல் ஆமைகள் எண்ணிக்கை மற்றும் வாழிடத்தை பாதுகாக்கும் சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றுவது
  • பாதிப்படைந்த ஆமைகள் முட்டையிம் கடற்கரையை மறு சீரமைப்பது
  • கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது
  • பல்துறைகளுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது
  • தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது
  • பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டமைப்பை உருவாக்குவது
  • பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது
  • ஆமைகளை பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்குவது

 

உள்ளிட்டவை இந்த செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் வரவேற்கத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால் மாநில அளவிலான  கடல் ஆமைகள் செயற் குழு ஒன்று மாநில தலைமை செயலாளர் தலைமையில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான ஆமை முட்டையிடும் இடங்களின் வரைபடங்கள் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கைக்கேற்ப கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ஒடிஷா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, குஜராஜ், மஹாராஷ்டிரா, கோவா,  அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத் தீவுகளில் உள்ள முக்கியமான கடலாமை முட்டையிடும் இடங்கள் மற்றும் அவற்றிற்கான அபாயங்கள் குறித்தும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழகத்தை பொருத்தவரையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா பகுதி மற்றும் சென்னையை ஒட்டிய கடற்பகுதிகள் இந்த செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதிகளில்  பிளாஸ்டிக் மாசுபாடு, கடற்கரைைப்பகுதி  சீரழிவு, ஒளி மாசுபாடு, முட்டைகளை வேட்டையாடப்படுதல், மீனவர்கள் வலையில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பது போன்றவற்றால் ஆமைகள் மற்றும் அதன் வாழிடங்கள் பாதிப்பிற்குள்ளாவதாக மத்திய அரசின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்படி ஒரு செயல் திட்டம் வரவேற்கக் கூடியதுதான் என்றாலும் ஏற்கெனவே கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட காட்டுப்பள்ளி கடற்கரையை ஒட்டி இந்த ஆண்டு சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே 3599 முட்டைகள் அடங்கிய 33 கூடுகளை வனத்துறை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

 

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான எல்லா ஆதரவையும் வழங்கி வருகின்ற மத்திய அரசு அதான துறைமுக விரிவாக்கத்தால் காட்டுப்பள்ளி கடற்கரையில் ஆமைகள் வாழிடஙகள் அழிக்கப்படும் அபாயம் இருப்பது குறித்து எதையும் பேச மறுக்கிறது.

 

இதை விட மோசம் அந்தமான் நிக்கோபாரின் நிலைதான். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வளர்ச்சிப் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகளவில் Leatherback turtle எனப்படும் தோணியாமைகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில்தான் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் பங்கஜ் சேஹ்சரியா குறிப்பிட்டுள்ளார். கடந்த 16ஆம் தேதி வெளியான The Hindu நாளிதழில் இடம்பெற்றுள்ள அவரது கட்டுரை அந்தமான் நிக்கோபாரில் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டு வளர்ச்சிப் பணிகள் அங்கு ஆமைகள் வாழிடங்களை எப்படி பாதிக்கும் என்பது குறித்து விரிவாக அலசுகிறது.

 

இதுபோன்ற செயல் திட்டங்கள் காகித அளவில் இல்லாமல் உண்மையான நோக்கத்தோடு அமலாக்கம் செய்யப்பட்டால் மட்டுமே அழியும் நிலையில் உள்ள உயிர்களை பாதுகாக்க முடியும்.

 

 

– லோகேஷ்

National Marine Turtle Action Plan NATIONAL-MARINE-_compressed (1)

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
gate.io
10 months ago

I may need your help. I tried many ways but couldn’t solve it, but after reading your article, I think you have a way to help me. I’m looking forward for your reply. Thanks.