எண்ணூர் உப்பங்கழிமுகத்தை சதுப்பு நில இயக்கத்தின் கீழ் பாதுகாக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவுகளால் கடுமையாக பாதிப்படைந்த எண்ணூர் உப்பங்கழிமுகத்தை சதுப்பு நில இயக்கத்ட்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வட சென்னையில் 9.20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 40கி,மீ சுற்றளவில் அமைந்துள்ளது எண்ணூர் உப்பங்கழிமுகம். ஒட்டுமொத்த பரப்பளவில் 43% பக்கிங்காம் கால்வாயினையும் 19% கொசஸ்தலை ஆற்றையும், 19% அரசு நிலத்தையும் உள்ளடக்கியது இக்கழிமுகம்.  சூழல் முக்கியத்துவாம் வாய்ந்த இச்சதுப்பு  நிலப்பகுதி வடசென்னை , வல்லூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களால் கடுமையாக மாசடைந்து அதன் மீன்வளம் முற்றிலுமாக அழிந்த்துள்ளது.

எண்ணூரைச் சேர்ந்த ரவிமாறன் என்பவரும் மீனவர் நல சங்கத்தைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார் என்பவரும், ஆர்.எல்.சீனிவாசன் என்பவரும் எண்ணூர் கழிமுகத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டுவதை தடுக்கக் கோரி 2016ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகிய மூன்று நிபுணர்களை தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது. இந்தக் குழுவானது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தவித மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகள் எடுத்துச் செல்லும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது,  இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றிருந்த சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் இந்துமதி நம்பி, மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் ஒரு கடல் சார் உயிரியல் நிபுணர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரிய பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை உருவாக்குவதாக தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இக்குழுவானது, எண்ணூர் உப்பங்கழிமுகத்தில் சாம்பல் கழிவுகளால் நீர், மண், தாவரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்வதற்கு TANGEDCO எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு குறித்தும் மேற்கொண்டு அப்பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அறிக்கையின் முக்கியமான கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:

  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் நடத்தி வரும் வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 1 ஆனது 2015ம் ஆண்டில் இருந்து நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இசைவாணையின்றியும், ஏப்ரல் 2020ல் இருந்து அபாயகரமான கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியின்றியும் செயல்பட்டு வந்துள்ளது.
  • வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 2 ஆனது மார்ச் 2019ல் இருந்து நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இசைவாணையின்றி செயல்பட்டு வந்துள்ளது.
  • வடசென்னை அனல்மின் நிலையம் தனது நிகழ்நேர தொடர் காற்றுத்த தர கண்காணிப்பு அமைப்பு மூலம் உண்மையான அளவீடுகளை வழங்காமல் தெரிந்தே தவறான தரவுகளை வாரியங்களுக்கு அளித்துள்ளது.
  • அனல்மின் நிலையத்தில் உருவாகும் சாம்பல் கழிவுகளை 100% முழுமையாக வேறு பயன்பாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கிற விதிக்கு மாறாக 2020-2021 ஆண்டில் 50 விழுக்காடிற்கும் குறைவான அளவில் மட்டுமே சாம்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • நிகழ்நேர காற்றுத்தர கண்காணிப்பு அமைப்பின் வாயிலாக 01.04.2019 மற்றும் 07.03.2022 வரை அதாவது 1071 நாட்களுக்குத் தவறான தரவுகளை அளித்தும்கூட வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 1ல் Particulate Matter எனப்படும் நுண்துகள் மாசின் வெளியேற்றம் 481 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்துள்ளது.
  • இதேகாலத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 2ல் 791 நாட்கள் Particulate Matter எனப்படும் நுண்துகள் மாசின் வெளியேற்றம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்துள்ளது.
  • இசைவானையில் கூறப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பசுமை வளையம் உண்டாக்கப்படவில்லை.
  • சாம்பல் குட்டைகளை முறையான பாதுகாப்புடன் அமைக்காததால் நிலத்தடி நீர் நச்சாகியுள்ளது.
  • 2019ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் 13.58 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கான நிலக்கரி சாம்பல் வெளியில் கொட்டப்பட்டத்துள்ளது. இதில் நீர்நிலையில் 7.93 லட்சம் மெட்ரின் டன்னும், சுற்று வட்டாரத்தில் 3.95 லட்சம் மெட்ரிக் டன்னும் அடங்கும்.
  • மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அண்மைக் கணக்கின்படி 65.96 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி சாம்பல் கணக்கில் வராமல் உள்ளது. இதில் பெரும்பாலான பகுதி ஆற்றிலும், கழிமுகத்திலும் அதைச்சுற்றியும் கொட்டப்பட்டுள்ளது.
  • கொட்டப்பட்ட நிலக்கரி சாம்பல் 1 அடி முதல் 8 அடி ஆழம் வரை உள்ளது.
  • மொத்தமாக 3.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி சாம்பல் கொட்டப்பட்டுள்ளது. இதில் 1.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நீர் நிலையாகும்.
  • காட்மியம், குரோமியம்,ஆர்சனிக்,ஈயம்,துத்தநாகம் போன்ற கன உலோகங்கள் அளவுக்கு அதிகமாக மேற்பரப்பிலும், நீர் நிலையிலும், நிலத்தடி நீரிலும் கண்டறிப்பட்டன.

இப்பாதிப்புகளை எல்லாம் சரிசெய்ய அரசு அல்லாத ஒரு நிறுவனத்தை நியமித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் எனவும், வடசென்னை அனல்மின் நிலையத்தைக் கண்காணிக்க மட்டும் ஒரு மாசுக் கட்டுப்பாடு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்ததது.

இந்த வழக்கில் கடந்த 05.07.2022ம் தேதி ஒரு விரிவான தீர்ப்பை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியிருந்தது.

அத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  1. வடசென்னை அனல்மின் நிலையத்தால் எண்ணூர் உப்பங்கழிமுகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை 9 மாதங்களுக்குள் தயார் செய்ய வேண்டும்.
  2. சாம்பல் கழிவுகளை முறையாக கையாளாமலும், உரிய இசைவாணைகளைப் பெறாமலும் அனல்மின் நிலையங்களை இயக்கி வந்த TANGEDCO மீது சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
  3. 1996ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மக்த் திட்டத்தின் அடிப்படையில் எண்ணூர் சதுப்பு நிலத்தில் புதிய ஆய்வுகள் மேற்கொண்டு விடுபட்டுள்ள இடங்களையும் சதுப்பு நிலமாக அறிவித்து அரசின் சதுப்பு நில இயக்கத்தின் கீழ் சேர்க்க சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. வடசென்னை அனல்மின் நிலையத்தால் பாதிப்படைந்த பகுதி மக்களின் குறைகளைக் கேட்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழு ஒன்றையும் உருவாக்க வேண்டுமெனவும், நிலக்கரி சாம்பல் மாசால் பாதிப்படைந்த செப்பாக்கம் கிராம மக்கள் இடம்பெயர தேவையிருப்பின் அதுகுறித்து பரிசீலிக்கவும் தலைமை செயலாளருக்கு உத்தரவு.
Final Judgment

அரசின்  நிறுவனங்களின் அலட்சியங்களைத் தாண்டி தொடர்ச்சியாக எண்னூர் உப்பங்கழிமுகத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியாகப் போராடி வந்த மக்களுக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் இத்தீர்ப்பு ஆறுதலாக அமைந்துள்ளது. “இவ்வழக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அளித்துள்ள ஆய்வு எல்லைகளைப் பின்பற்றி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நிச்சயமாக கொசஸ்தலை ஆறு மீண்டும் உயிர்ப் பெறும் என்கிர நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் வறுமையில் வாடும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, வடசென்னை பகுதியும் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படும்” என்கிறார் எண்ணூர் கழுவெளி பாதுகாப்பு பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்த சரவணன்.

சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மத்திய மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியங்கள், தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆகியோர் எண்ணூர் உப்பக்கழிமுகத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடியும் வரை 6 மாதங்களுக்க்கு ஒரு முறை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாயம் இவ்வழக்கின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 2016ம் ஆண்டிலிருந்து கடுமையாக உழைத்த மூன்று மனுதாரருக்கும் தலா ரூ 50,000த்தை மூன்று மாதங்களுக்குள் TANGEDCO அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments