சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு பட்ஜெட் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

காலநிலை மாற்ற இயக்கத்தை அறிவித்திருப்பதன் மூலம் சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை சூழலியல் பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள்,  IPCC வெளியிட்ட அறிக்கை, சுவாமிநாதன் அறக்கட்டளையில் “காலநிலை மாற்றம் தான் மானுடத்தின் பெரும் சவால்” என்று முதல்வரின் உரை என அடுத்தடுத்த நிகழ்வுகளின் பின்னணியில் காலநிலை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்றைய நிதிநிலை அறிக்கையில் வந்துள்ளது. முதல்வரை தலைவராக கொண்டு “காலநிலை மாற்ற இயக்கம்” 500 கோடியில் தமிழகத்தில் ஆரம்பிக்கப்படும் என்கிற அறிவிப்பு காலத்தின் மிக முக்கியமான தேவை. வரக்கூடிய காலங்களில் காலநிலை மாற்றத்திற்கு என ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்று நம்புகிறோம்.

வனத்துறையை, ஆளில்லா விமானங்கள், நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, புவிசார் தகவல் அமைப்பு உள்ளிட்டவற்றை கொண்டு நவீனமாக்கப்படும் என்கிற அறிவிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அதுவும் காடுகள் இயற்கையில் உள்ள “கார்பன் சிங்க்”, அவற்றை பாதுகாப்பது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கு பயன்படும்.

கொரோனா போன்ற பெருந்தொற்று பரவுவதற்கு காடுகள் அழிக்கப்படுவதுதான் முக்கியமான காரணம் என்று உயிரியலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பை 33% அதிகரிப்பதற்கு மக்கள் பங்களிப்புடன் இந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை நடுவதற்கு “பசுமை இயக்க” அறிவிப்பும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் பூவுலகு போன்ற அமைப்புகளுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.
காற்று மாசு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி வரும் சூழலில், சூழல் மாசு ஏற்படுத்தும் அனைத்து வாயுக்களையும் நுண் துகள்களையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் மற்றும் முன்கூட்டியே அறிவிக்கும் “கண்காணிப்பு ஸ்டூடியோ” இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வரவேற்கிறோம். தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை கண்டறிந்து பாதுகாக்கும் வகையில் “சதுப்பு நில பாதுகாப்பு இயக்கம்” தொடங்கப்பட்டு முதலில் 100 சதுப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு அதை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 150 கோடிகளை ஒதுக்கி இருப்பதும் வரவேற்கவேண்டிய அம்சமாகும்.

நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான சிறப்பு அறிவிப்புகள் கவனம் பெறுகின்றன, இந்த ஆண்டிலிருந்து 50 சிறிய நீர்நிலைகளை மேம்படுத்தப்படும் அறிவிப்பும் முக்கியமானது. நீராதாரங்களை பெருக்க தொழிநுட்பத்தை பயன்படுத்தி நீர்நிலைகள் தொடர்பான எல்லைகளை வரையறுத்து நீர்மேலாண்மை மென்பொருள் உருவாக்கி கண்காணிக்கப்படும் அறிவிப்பு காலத்திற்கு ஏற்ற அறிவிப்பாகும். டெல்டா மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இரண்டாவது கட்ட திட்டம் 1,825 கோடி திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் அறிவிப்பு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க உதவும்.

கட்டிட தொழில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொருட்களை பயன்படுத்தவும், நீடித்து நிலைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கப்படும் அறிவிப்பும் வரவேற்கவேண்டியது. ஊரக பகுதியில் உள்ள 79,395 வாழ்விடங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 55 லிட்டர் தண்ணீர் வழங்க “ஜல்ஜீவன்” திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும் அறிவிப்பும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. தண்ணீரை வீடுகளை கொண்டு சேர்ப்பது என்கிற திட்டத்தின் துவக்கமாக இது இருக்கும்.

திடக்கழிவு மேலாண்மையை நடைமுறைப்படுத்துவதற்கு “குப்பையை” துவக்கத்திலேயே தரம் பிரிப்பதற்கான திட்டங்களை நடைமுறை படுத்த நடவடிக்கைகள் “மாசற்ற நகரங்களை” உருவாக்க பயன்படும்.

17,000 மெகா வாட் மின்னுற்பத்தி புதிதாக நிறுவப்படும் என்கிற அறிவிப்பில், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை பயன்படுத்தவேண்டும் என்று கோருகிறோம்.
இராணுவ போர் ஆயுதங்கள் தொழிற்பேட்டை (defence corridor) ,தூத்துக்குடியில் புதிய உப்பகற்றி ஆலைகள்(desalination plant), பெரிய மேம்பாலங்கள், 1000 தடுப்பணைகள் போன்ற அறிவிப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள என்பதால் இந்த அறிவிப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கனிம வளத்துறை மூலம் வருவாய் ஈட்ட மேற்கொள்ளும் முயற்சி பெரும் சூழலியல் சீர்கேட்டில் முடிவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் கனிம சுரங்கங்களில் எவ்வித சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபந்தனைகளும் பின்பற்றப்படுவதில்லை. எனவே இந்த முன்னெடுப்பை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய தேவையுள்ளது.

சூழலியல் பார்வையில் இன்னும் நீண்ட தூரம் பயணப்படவேண்டியிருந்தாலும் இந்த நிதிநிலை அறிக்கை நல்ல துவக்கம். இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைகளில் “காலநிலை மாற்றம்” என்கிற வார்த்தையே இல்லாத போது, தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கையில் தனியான இயக்கம் தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.- பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments