விதிமீறலுக்காக மூடப்பட்ட குவாரிகளைத் திறக்க நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் தரக் கூடாது

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலுக்காக மூடப்பட்ட கல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அழுத்தம் கொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த கல்குவாரியில் மே மாதம் நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 55 கல் குவாரிகளை ஆய்வு செய்வதற்கான குழுக்களை அமைத்தி்ருந்தார். அக்குழுக்கள் அண்மையில் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்த அறிக்கையின்படி விதிமீறி செயல்பபட்டு வந்த 13 குவாரிகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக் கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், 41 குவாரிகளுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மொத்தமாக 54 குவாரிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டதாகவும் கடந்த வாரம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 12.07.2022 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டாரத்தில் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் கல் குவாரிகள் மூடப்பட்டதால் 50 ஆயிரம் பேர் வேலையிழந்ததற்கும் கற்களின் விலை ஏறியதற்கும் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று செய்தியாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு “இதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுவிட்டு, வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பதிலளித்தார். அமைச்சர் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியரை இக்கேள்விக்கு பதிலளிக்குமாறு கூறினார். இந்தப் பிரச்னை அரசின் பரிசீலனையில் உள்ளது என மாவட்ட ஆட்சியரும் பதிலளித்தார். அப்போது திடீரென கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் “செய்தியாளரின் கேள்வி சரிதான், குவாரிகளை மூடி 60 நாள் ஆகிவிட்டது, எந்த முடிவும் இல்ல, அதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க” என்று மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசினார். உடனடியாக அமைச்சர் குறுக்கீடு செய்து நாடாளுமன்ற உறுப்பினரை அமைதிப்படுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு அரசு வழங்கியிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி எந்தவித விருப்பு, வெறுப்புமின்றி சட்டவிரோதக் கல் குவாரிகள் மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது பணியை மட்டுமே செய்துள்ளார். குவாரிகள் மூடல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முடிவின் மீது பதிலளிக்கவும், தங்களுக்கு எதிரான முடிவு என அவர்கள் கருதினால் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து முறையீடு செய்வதற்குமான வாய்ப்புகளும் உரிமைகளும் உள்ளன. அப்படி வாய்ப்புகள் இருக்கின்ற ஒரு நிலையில் குவாரி மூடலால் பணியிழந்த தொழிலாளர்களின் நிலை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றின் அமைச்சர் பதிலதிப்பது மட்டுமே சரியான முறையாகும். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அந்த செய்தியாளர் சந்திப்பில் இல்லாத பட்சத்தில் வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் பதிலளித்திருக்கலாம்.

பொதுவெளியில் அதிலும் குறிப்பாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரை பதிலளிக்க கட்டாயப்படுத்தியதும், குவாரிகள் மூடலுக்கு மாவட்ட ஆட்சியர் பதவியில் தற்போது இருக்கும் குறிப்பிட்ட அதிகாரியை  தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்கும் வகையில், அவருக்கு அழுத்தம் கொடுத்ததும் ஏற்கத்தக்கதல்ல. செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அவர்கள் நடந்துகொண்ட விதம் விதிமீறலுக்காக மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டின் கனிம வளங்களை சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு சென்றதற்கு விலையாகதான் 4 உயிர்களை இழக்க நேரிட்டது. இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நிகழாது நம் மாநிலத்தின் கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்விவகாரத்தைக் கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குவாரிகளை நிரந்தரமாக மூடுவதற்கும், நெல்லை மாவட்ட நிர்வாகம் அழுத்தங்கள் ஏதுமின்றி செயல்படுவதை உறுதி செய்யவும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உரிய உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments