2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
lightningஇந்தியாவில் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய புவி அறிவியல் துறை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மின்னல் தாக்குதலால் 2018ஆம் ஆண்டில் 2,357 பேரும், 2019ல் 2,876 பேரும், 2020ல் 2,862 பேரும் உயிரிருந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே 82, 57, 64 என மொத்தமாக 203 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மின்னல் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் 5 நாட்களுக்கு முன்பாகவே வழங்கி வருகிறது.
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் மின்னல் சம்பவங்கள் நிகழும் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதாகவும் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மின்னல் தாக்குதல்களின் எண்ணிக்கை மிக வேகமான உயர்வை அடைந்துள்ளதாகவும் புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.