தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் மிகவும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி தான் Dugong எனப்படும் ஆவுளியா ஆகும்.
கடல்மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அளிக்கப்படுவதால் இந்த ஆவுளியா இனம் அண்மை காலங்களில் அழிவை சந்தித்து வருகிறது. இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் இந்த கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பது தொடர்பான ஒரு குறிப்புரையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசின் பரிசீலனைக்கு அனுப்பியிருந்தார். அதில் இக்காப்பகம் அமைக்க ஒன்றிஅய அர்சின் ஒப்புதல் தேவை என்பதால் கடல் மற்றும் கடலோரம் தொடர்பான மீன்வளத்துறை உள்ளிட்ட பிற துறைகளின் அனுமதியோடு உரிய நிறுவனத்தை தேர்ந்தெடுத்து காப்பகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த காப்பகம் தொடர்பாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராம மக்களுடன் விரிவான கலந்தாலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்ததப்பட்டதாகவும் புதுக்கோட்டையில் 18 மற்றும் தஞ்சாவூரில் உள்ள 27 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காப்பகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துரையை பரிசீலித்த தமிழ்நாடு வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கத் தேவையான விரிவான திட்ட அறிக்கை மற்றும் அடிப்படை கள ஆய்வுகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
விரைவில் இந்த கடற்பசு பாதுகாப்பகத்திற்கான வரைவு அறிவிக்கையை மத்திய அரசின் அனுமதிக்காக தமிழ்நாடு வனத்துறை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவுளியா இனத்தை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவில் காணப்படும் பல வகையான மீன்கள், ஆமைகள், கடல் தாவரங்கள் ஆகிய கடல் உயிர்ப்பன்மையத்தை பாதுகாக்க உதவும்.
– சதீஷ் லெட்சுமணன்