வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது

Vedanthangal161017

வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தேசிய காட்டுயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களுக்குத் திறந்து விடப்படும் அபாயம் ஏற்பட்டது.

Justification by FRO 2020

 

சரணாலயத்தின் 2கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை பாதுக்காக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும், நிலப்பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதால் இந்த முடியும் என வனத்துறை கருதியது.

பறவைகள் சரணாலய பரப்பளவை சுருக்குவதற்கான காரணங்களாக ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு அளித்த விண்ணப்பத்தில் தமிழக அரசு சொல்லியவை:

  • கட்டுமானங்களை கட்ட முடியாத காரணத்தால் உள்ளூர் மக்களை பறவைகள் சரணாலய பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் ஈடுபடுத்த முடியவில்லை.
  • ஏரியைச்சுற்றி முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள விநாயகநல்லூர், சித்தாதூர், பசும்பூர், வேடவாக்கம், வளையபுதூர், அண்டவாக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே தற்போது விவசாயம் நடப்பதாகவும் 3 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் விவசாயம் கைவிடப்பட்டதால் அங்கு பறவைகள் வருவதில்லை.
  • அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது. இதனைத் தடுக்க சரணாலய பரப்பை குறைக்க வேண்டியுள்ளது.

வனத்துறையின் விண்ணப்பம் பரிசீலனையில் இருந்த அதே நேரத்தில் 2020ஆம் ஆண்டு மே மாதம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியின் எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இயங்கி வந்த சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க சுற்றுச்சூழல் மற்றும் தேசிய காட்டுயிர் வாரிய அனுமதிகோரி  விண்ணப்பித்திருந்தது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை 5கிலோமீட்டரிலிருந்து 3 கிலோமீட்டராக சுருக்குவதற்கு தமிழக அரசு விண்ணப்பித்திருப்பதற்கும், சன் பார்மா நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் தொடர்பிருப்பதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டின. வேடந்தாங்கலுக்கு அருகில் 1993ஆம் ஆண்டே உருவாக்கப்பட்ட ஆலையை சன் பார்மா நிறுவனம் 2000ஆம் ஆண்டில் கைப்பற்றி இயக்கி வந்தது.

இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் சரணாலயத்தின் எல்லையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும், ஏரியைச் சுற்றியுள்ள முதல் 1 கிலோமீட்டர் சுற்றளவை core zone ஆகவும், அடுத்த 2கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை buffer zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை eco sensitive zone ஆகவும் வகைப்பாடு செய்யப்போவதால் மொத்தமுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியையும் பாதுகாக்க முடியும் எனவும் சரணாலய பகுதியை தனியார் நிறுவனத்திற்கோ, தொழிற்சாலை அமைக்கவோ,வர்த்தக நிறுவனம் அமைக்க அரசு உதவுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் வனத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

TOPOSHEET

 

5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை குறைக்கும் எண்ணமில்லை என்று கூறியிருந்தாலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான அனுமதிகோரி சமர்ப்பித்த விண்ணப்பமானது திரும்பப் பெறப்படாமலே இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு வனத்துறையின் தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கடந்த புதன்கிழமை வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை சுருக்கினால் பல்லுயிரசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்பதால் ஏற்கெனவே எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய விண்ணப்பத்தை நிரந்தரமாக திரும்பப் பெற்றுக்கொண்டதாக கருதுமாறு கூறப்பட்டுள்ளது.

Vedanthangal

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments