சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாட்டில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணை களை  உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட விதிகளுக்குப் புறம்பாக, உரிய அனுமதிகளைப் பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடுவதற்கு, மீன்வளத்துறை உதவி இயக்குனர், கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

ஒன்றிய அரசின் கடலோர நீர்வாழ்  உயிரின ஆணையத்தின் சட்டப்படி, கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள்தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை உரிய அனுமதிகளைப் பெறாமல் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால்தான், அந்த இறால் பண்ணைகளை மூட உத்தரவிட்டதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 709 இறால் பண்ணைகள் உள்ளதாகவும், அவற்றில் 2 ஆயிரத்து 227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை எனவும், 348 பண்ணைகளின் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி செயல்பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதேபோல சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக ஆறு வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

– செய்திப் பிரிவு

Prawn Culture SMSJ WP 29144 of 2018
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments